Showing posts with label சமச்சீர் கல்வி. Show all posts
Showing posts with label சமச்சீர் கல்வி. Show all posts

Friday, July 29, 2011

சமச்சீர் கல்வியா, சாதா கல்வியா... குழப்பியது யார்?


 சமச்சீர் கல்வியா, சாதா கல்வி வேண்டுமா என்று இப்போது பள்ளி ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் போய்க்கேட்டால் வெறுத்துப் போய்... ஏதாவது ஒன்றைக் கொடு என்றுதான் கேட்பார்கள். ஆனால் இந்த இரண்டு மாதங்களும் எந்தப் புத்தகத்தைப் படிப்பது என்று மாணவர்களையும், எதைச் சொல்லித் தருவது என்று ஆசிரியர்களையும் குழுப்பியது யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தக் குழப்பத்துக்கும் தாமதத்துக்கும் ஜெயலலிதாவை மட்டும் குறை சொன்னால் ஏற்க முடியாது. ஜெயலலிதா பதவிக்கு வரும்போதே அனைவருக்கும் தெரியும் அவர் கருணாநிதி கொண்டு வந்த சமச்சீர் கல்வியை விட்டு வைக்கமாட்டார் என்று.  அரசின் போக்கிலேயே விட்டிருந்தால் இந்நேரம் காலாண்டுப் பரீட்சை போர்ஷன் முடிந்திருக்கும்.
அண்மையில் சமச்சீர் கல்வி கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கும் ஒருவர் பேட்டியளித்திருந்தார். சமச்சீர் கல்வியை ஏன் வலியுறுத்துகிறீர்கள் என்று நமது நட்புவட்டச் செய்தியாளர் ஒருவர் கேட்டிருக்கிறார். "கல்வியில் எதிலுமே இல்லை, புத்தகத்திலாவது சமச்சீர்" இருக்கட்டுமே என்று அவர் பதிலளித்திருக்கிறார்.

இது நல்ல நகைச்சுவை. எல்லோரும் சொல்வது போல இது சமச்சீர் கல்வியல்ல சமச்சீர் பாடப்புத்தகங்கள் மட்டுமே. மற்றபடி கல்வியெல்லாம் சாதா கல்விதான். அதாவது அரசுப் பள்ளிகளில் சமச்சீர் பாடப்புத்தகமும் சாதா கல்வியும் கிடைக்கும். மெட்ரிக் பள்ளிகளில் சமச்சீர் பாடப்புத்தகமும் ஸ்பெஷல் சாதா கல்வியும் கிடைக்கும்.

 சமச்சீர் கல்வி என்பதை பாடப்புத்தகத்தில் இருந்தான் தொடங்க வேண்டும் என்று யோசனை சொன்னவருக்கும் இப்போது அதற்காகப் போராடுவோருக்கும் உண்மையிலேயே "சமச்சீர்" அக்கறை இருக்கிறதா என்று தெரியவில்லை.

அரசுப் பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்கள் இருக்க வேண்டும், அவர்கள் இப்போது இருக்கும் பாடத்தை சரியாக நடத்த வேண்டும். கட்டடங்கள் ஒழுங்காகப் பராமரிக்கப்பட வேண்டும், கொடுக்கப்படும் மதிய உணவு தரமாக இருக்க வேண்டும், ஆசிரியர்கள் நேரந்தவறாமல் வகுப்புக்குச் செல்ல வேண்டும் இதெல்லாம் சரியாக இருந்தால்தான் பாடப்புத்தகத்தையே மாணவன் திறப்பான்.

 இந்தக் கிராமப்புற மாணவனைப் பற்றியெல்லாம் சமச்சீர் கல்வி வேண்டும் என்போருக்கும், வேண்டாம் என்போருக்கும், போராட்டம் நடத்துவோருக்கும் எந்த அக்கறையும் இல்லை. சமச்சீர் கல்வியின் ஒரே நோக்கம் தனியார் பள்ளிகள் லாபமடைவதை தடுக்க வேண்டும் என்பதுதான். அதனால் ஏழை மாணவனுக்கு என்ன லாபம்?

இப்போது உயர்த்தப்பட்டிருக்கும் விற்பனை வரியின் சிறு பகுதியை கல்விக்காகத் திருப்பி விட்டாலே அரசுப் பள்ளிகள் அனைத்தையும்  உலகத் தரத்துக்கு மாற்றிவிடலாம். பிறகு யார் தனியார் பள்ளியைத் தேடிச் செல்லப் போகிறார்கள்.  அடிப்படை அமைப்பிலேயே பிரச்னையை வைத்துக்கொண்டு, புத்தகத்தை மாற்றிக் கொடுத்தால் - அதுவும் மட்டமான -  யாருக்கு என்ன பயன்?

இதற்காகச் ஜெயலலிதாவை எதிர்த்துப் போராடுங்கள். அதைவிட்டுவிட்டு எல்லோரும் கைவைக்கத் தயங்கும், கைநீட்டிப் பேசினாலே விமர்சனத்துக்குள்ளாக வேண்டிவரும் என்று அஞ்சும் பெருமதிப்புக்குரிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள் "அதே தரத்துடன்" அப்படியே இருப்பார்களாம்... கட்டடங்கள் அப்படியே இருக்குமாம்...  நிர்வாகமும் "அதே வேகத்துடன்" நடக்குமாம்... புத்தகத்தை மட்டும் மாற்றி சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்துவிடுவார்களாம்... ஏனய்யா இந்த தலைகீழ் வளர்ச்சி?

சூ மந்திர காளி!
..
.

Saturday, July 09, 2011

சமச்சீர் பாடத்திட்டம்தான் வேண்டும்; இந்த ஜிகினா குப்பையல்ல!

ஜெயலலிதா நல்லவர், சுதந்திரப் போராட்டத் தியாகி. ஊழலைப் பொறுக்க மாட்டாதவர் என்று எழுதலாம். கருணாநிதி அப்பழுக்கற்றவர், மொழிப்போர்த் தளபதி. ஊருக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவர் என்றுகூட எழுதலாம். அதையெல்லாம் நாம் கேட்கப்போவதில்லை.  ஊடகங்களில் எழுதுவதைவிடவா பாடப்புத்தகங்களில் மோசமாகவும் ஒருதலைப்பட்சமாகவும் எழுதிவிட முடியும்?

பிஞ்சிலேயே நஞ்சை விதைக்கலாமா, மோசமானவர்களை நல்லவர்கள் போல பாடப்புத்தகங்களில் சித்திரிக்கலாமா என்று கூறும் வாதத்தைக்கூட நாம் முன்வைக்கபோவதில்லை. நம்முடைய வாதம், வைக்கப்பட்டிருக்கும் உள்ளடக்கம் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி மட்டுமே.

சமச்சீர் கல்வி வேண்டுமா, வேண்டாமா என்று கேட்டால் வேண்டும் என்றுதான் சொல்வேன். ஏனென்றால் கூரைப் பள்ளியிலும் மரத்தடியிலும் போரடிக்கும் பாடத்தைப் படித்து வந்தவன்தான். அப்படியொரு மட்டமான பாடத்திட்டத்தை நம் பிள்ளைகள் படிக்கக்கூடாது என்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன்.

இப்போது, சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் தரமாக இல்லை என்று ஒரு பிரிவினரும், தரமாக இருக்கிறது என்று இன்னொரு பிரிவினரும் கூறிக் கொண்டிருக்கின்றனர். சிலர் தரமாக இல்லை என்று கூறுவதன் பின்னணி அதை முடக்கிவிடுவதாகக் கூட இருக்கலாம். அதேபோல் தரமாக இருக்கிறது என்று கூறும் சிலருக்கு அரசியல் சார்பு இருக்கலாம். நமக்கு இந்த இரண்டும் இல்லை. நமக்கு ஒரேயொரு நோக்கம் தரமான கல்வியும் பாடப்புத்தகமும் அரசுப் பள்ளிகளிலேயே இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்பதுதான்.

அப்படி என்னதான் அந்தப் பாடப்புத்தகங்களில் சிறப்பாக இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தைப் புரட்டினேன். அட அசிங்கமே! குழந்தைகளுக்கான பாடப்புத்தகம் எப்படி இருக்கக்கூடாது என்று நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்து இத்தனை காலமும் நினைத்து வந்தேனோ அதே புத்தகம்தான் கொஞ்சம் கலர் கலராக மீண்டும். ஜிகினா குப்பை

 ஏனோதானோவென்று வரையப்பட்ட மேப்களைப் பார்க்கும்போது பற்றிக் கொண்டு வருகிறது. அதே பேப்பர், அதே வண்ணங்களைக் கொண்டு,  கொஞ்சம் மெனக்கெட்டால் குழந்தைகளுக்கு அருமையான மேப்பை தர முடியும் இதைக்கூட அந்தப் புத்தகத்தில் பார்க்க முடியவில்லை. ஒரு மேப் மட்டுமல்ல அந்தப் புத்தகத்தில் கிட்டத்தட்ட அனைத்து மேப்களுமே தலைப்பை எந்த வகையிலும் வெளிப்படுத்தாத வகையில்தான் வரையப்பட்டிருக்கின்றன. அதை வரைந்த பிரகஸ்பதியைக் கூப்பிட்டு பெஞ்ச் மேல்தான் ஏற்ற வேண்டும். அல்லது முழங்கால் போடச் சொல்ல வேண்டும்.

 ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் கேள்விப் பகுதி என்கிற ஒன்றைக் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் டிட்டோ. அந்தப் பாடத்தை பத்தி பத்தியாக மனப்பாடம் செய்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் செய்திருக்கிறார்கள். பாடத்தை மாணவர்கள் ஆர்வமாகப் படித்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்திருப்பது தெரிகிறது.

என்சிஇஆர்டி புத்தகம்

ஒவ்வொரு பாடமும் ஏதோ ஆய்வுக் கட்டுரை போல "தேமே" என்பது போன்ற தூக்கம்தரும் நடையில் எழுதப்பட்டிருக்கிறது. ரஷிய மொழியில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டதைப் போன்ற ஒரு உணர்வு. கொஞ்ச நஞ்சம் வரலாறு படிக்கும் ஆர்வமுள்ள மாணவனைக்கூட இந்தக் கட்டுரை நடையிலான பாடங்கள் தடுத்துவிடும் என்பதில் துளிகூட சந்தேகமேயில்லை.

எடுத்துக் காட்டுக்கு ஜெர்மனியில் நாசிஸம் பரவுவதைப் பற்றியும் ஹிட்லரைப் பற்றியும் வரும் பாடம். இந்தப் பாடத்தையும் என்சிஇஆர்டி 9-ம் வகுப்பு பாடத்தின் 3-வது பாடத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். சமச்சீர் லட்சணம் புரியும்.  சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்கள் தரமானவை என்று குரல் கொடுத்து வரும் அனைவரும் இந்த இரு பாடங்களையும் படிக்க வேண்டும். அப்புறம்தான் வினவ வேண்டும்.எவ்வளவு வேண்டுமானாலும் வினவுங்கள். போராடுங்கள்.


சமச்சீர் கல்வி சமூக அறிவியல் முதல் பாகம்

என்சிஇஆர்டி 9-ம் வகுப்பு ஹிட்லர் பாடம்


திறமையே இல்லாத ஒருவர் ஐஐடியில் பணியாற்றலாம். குப்பம்பட்டி தொடக்கப்பள்ளி ஆசிரியர் காரிப் சுழற்சியை பிரித்து மேய்பவராக இருக்கலாம். அந்த வகையில், இப்போதிருக்கும் குழுவே கூட திறமையானவர்களாக இருக்கக்கூடும். ஆனால், அவர்களது திறமை சமூக அறிவியல் பாடத்தில் வெளிப்படவில்லை என்பதுதான் உண்மை.

இன்னொரு உறுத்தலும் இருக்கிறது. சமூக அறிவியலின் அனைத்துப் பாடங்களிலும் ஈ.வே.ரா. பெரியார் என்றுதான் எழுதியிருக்கிறார்கள். இது வெறும் எழுத்துப் பிழைதானே என்று எடுத்துக் கொண்டு போவோர்கள், இதே பாடப்புத்தங்களையே இன்னும் நூற்றாண்டுகளுக்கும் வைத்திருக்கட்டும். இப்போது மெட்ரிக் பள்ளிகள் வைத்திருப்போரெல்லாம் சிபிஎஸ்சிக்கும் ஐசிஎஸ்சிக்கும் மாறட்டும்.  ஜிகினா குப்பையில் இருந்து விடுபடுவதற்காகவும் தரமான கல்விக்காகவும் மாதச் சம்பளத்தையெல்லாம் தனியாரிடம்  கொட்டி, விதியே என நாம் அழுதிருப்போம்.

.

.
.