Thursday, March 21, 2013

கொண்டாடவில்லையா?



இது நீர்த்துப் போன தீர்மானம்...

இந்தத் தீர்மானத்தால் எந்தப் பயனுமில்லை...

இது இலங்கைக்கு எதிரானது அல்ல...


சீனாவை கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட தீர்மானம்..

இந்தியா ஏமாற்றிவிட்டது...

இனப்படுகொலை என்ற சொல் இல்லை...

இப்படிக் கேட்டுக்கேட்டு சலித்துவிட்டது...

இப்போது ஒருபடி மேலேறி, அமெரிக்கப் பொருள்களைப் புறக்கணிக்கப் போகிறார்களாம்...

அமெரிக்கப் பொருள்களின் சில பட்டியல் இதோ. புறக்கணிக்க முடியுமா என்று பார்க்கலாம்... ஃபேஸ்புக், கூகுள், ஜிமெயில், விண்டோஸ், ஆண்ட்ராய்டு... அவ்வளவு ஏன்? இன்டர்நெட் முகவரிகளையே அவன்தான் தருகிறான். முடியுமா?


அப்படியே இலங்கைக்கு ஆதவாக தொடர்ந்து இயங்கிவரும் சீனாவையும், பிடல் காஸ்ட்ரோவையும், ரஷியாவையும், வெனிசுலாவையும் புறக்கணிக்க முடியுமா?

ஏன் இந்தக் குழப்பம்?

இலங்கை மீது புகார் தெரிவிக்கும் ஒரு தீர்மானம் உலக அரங்கில் அமெரிக்க, ஐரோப்பிய, ஆப்பிரிக்க கண்டங்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் தமிழர்களுக்கு ஆறுதல் ஏதுமில்லை இல்லை என்று பிரசாரம் செய்யப்படுவதைப் போல அறியாமை இருக்கவே முடியாது...

எல்லா நாட்டுக்கும் ஒரு சுயநலம் இருக்கும்... அதையும் கடந்துதான் நீதியைத் தேட வேண்டும்.

இனப்படுகொலை என்று அறிவிக்க வேண்டும், ராஜபட்ச சகோதரர்களை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பதுதான் இலக்கு. சரி. ஆனால் உடனடியாக அது சாத்தியமா?போராட்டங்கள் காரணமாக இந்தியாவே அப்படியொரு தீர்மானத்தைக் கொண்டுவந்திருந்தால், அது வெற்றி பெற்றிருக்குமா? உண்மையில், இனப்படுகொலை என்ற வாசகத்தைச் சேர்திருந்தால், 10 நாடுகளின் ஆதரவு கூடக் கிடைத்திருக்காது... முட்டி முட்டித் தோல்வியைத்தான் சந்தித்திருக்க வேண்டும்...

இலங்கை தனிமைப்படுத்தப்படுவதாக சமரசிங்க தன் வாயாலேயே ஒப்புக்கொண்டார்... ஒருவேளை, கடுமையான தீர்மானம்தான் வேண்டும் எனப் பிடிவாதமாக இருந்திருந்தால், அதே சொல்லை தமிழர்கள்களை பயன்படுத்த வேண்டிய நிலை வந்திருக்கும்... இது உண்மையா இல்லையா?

அதன் பிறகு,  யாருக்கு எதிராகப் போராட்டம் நடத்த முடியும்?

சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து கேட்ட மாத்திரத்திலேயே விசாரணை நடத்த ஐ.நா. உத்தரவிட்டிருப்பதை சுட்டிக்காட்டி, ஏன் தமிழர்களுக்கு மட்டும் ஓரவஞ்சனை என்று கேட்கிறார்கள்... அங்கே விசாரணை கோரியது இரு தரப்பும்தான்.. அதிலும் குறிப்பாக அரசுத் தரப்பு... அங்கே ஆட்சியில் இருப்பது சிறுபான்மை இனம்... போராடுவது பெரும்பான்மை இனம்... அதையும் இலங்கையையும் எப்படி ஒப்பிட முடியும்?

வேண்டுமென்றால், 5 நாடுகளிடமிருந்து விடுதலை கேட்கும் குர்திஷ்தானுடன் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்...

பாலஸ்தீனம் நீண்டகாலமாக தனி நாடு என்ற அங்கீகாரம் கேட்டு வந்தது. கடைசியில், பார்வையாளர் அந்தஸ்து என்ற நிலைக்கு இறங்கி வந்ததும், மதம், இனம் என்று பாராமல், உலகமே அந்த நாட்டின் பின்னால் அணிவகுத்து நின்றது... லட்சக்கணக்கானோர் கொண்டாடினார்கள்... அடுத்த நிலைப் போராட்டத்தையும் தொடர்கிறார்கள்...

அந்தக் கொண்டாட்ட உணர்வு ஏன் தமிழர்களிடம் இல்லை... சிறு வெற்றிகளைக் கொண்டாடுவதும் போராட்டத்துக்கு ஊக்கமளிக்குமே?


Monday, March 05, 2012

தமிழினத்தின் துரதிருஷ்டம்!

தமிழர்கள் துரதிருஷ்டசாலிகள். இல்லையென்றால், ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்படும் நேரத்தில், அந்நாட்டு ராணுவத்தின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய பிரிட்டன் பத்திரிகையாளர் மேரி கால்வின் நம்மிடையே இல்லாமல் போவாரா?

சிங்கள ராணுவத்தால் தமிழர்கள் எவ்வாறெல்லாம் சித்திரவதை செய்யப்பட்டார்கள், அப்பாவிகள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டது எப்படி என்பதையெல்லாம் தனது செய்திகளில் விவரித்தவர்தான் மேரி.

இறுதிக் கட்டப் போரின்போது, வெள்ளைக்கொடி ஏந்தி வந்த நடேசன், அவரது மனைவி, புலித்தேவன் உள்ளிட்டோரை இலங்கை ராணுவத்தினர் ஈவிரக்கமில்லாமல் கொன்றனர் என்பதை தனது போர்ச் செய்தியில் அவர் பதிவு செய்திருக்கிறார்.

"துப்பாக்கிகளை மெüனத்தில் ஆழ்த்துகிறோம்' என்று கூறியபோதே, ராணுவத்திடம் சரணடைய விடுதலைப் புலிகள் தயாராகிவிட்டிருந்தனர் என்பது உலகறிந்த விஷயமாகியிருந்தது. அந்தப் பின்னணியில் புலிகளுக்கும் ஐ.நா. அமைப்புக்கும், ராஜபட்ச அரசுக்கும் இடையே நம்பிக்கை ஏற்படுத்தும் பணியில் மேரி ஈடுபட்டிருந்தார்.

"சரணடைகிறோம்' என்று நடேசனோ, புலிகளின் பிற தலைவர்களோ வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், ஆயுதங்களைக் போட்டுவிட்டு சரணடைவதுதான் அவர்களது நோக்கமாக இருந்தது என்பதற்கு நேரடியான சாட்சியாக இருந்தவர் மேரி. நடேசன் உள்ளிட்டோரிடம் சாடிலைட் போனில் பேசுவது, குறுஞ்செய்திகள் மூலம் தகவல்களைப் பெறுவது என விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாக இருந்தார்.

மேற்கத்திய ஊடகங்களின் வழக்கமான "நடுநிலை' பத்திரிகையாளராக இலங்கைக்கு வந்தவர்தான் மேரி. மேலை நாட்டுச் சந்தையில் அதிகமாக விற்கும் "மனித உரிமை' சாயம் பூசிய செய்திகளைத் திரட்டுவதுதான் அவரது முதல்நிலைப் பணியாக இருந்தது. ஆனால், விடுதலைப் புலிகள் என்பவர்கள், பயங்கரவாதிகள் என்கிற பலரது எண்ணத்தை மேரி தந்த செய்திகள் மாற்றின. புலிகளை "விடுதலைப் போராட்ட வீரர்கள்' என்று துணிச்சலாகக் குறிப்பிட்டார். ஏதோ ஒரு வகையில், தமிழினத்துக்கு அவர் பேருதவி புரிந்திருக்கிறார் என்பதை நாம் மறுக்க முடியாது. மறந்துவிடவும் கூடாது!

மேரி கால்வின் இன்றைக்கு உயிருடன் இல்லாவிட்டாலும், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைப் போர், ராணுவத்தின் மனித உரிமை மீறல்கள், அகதிகள் நடத்தப்பட்ட விதம் உள்ளிட்டவை குறித்து அவர் விட்டுச் சென்றிருக்கும் ஆவணங்கள் நமக்குப் பயன்படுகின்றன.

இன்றைக்கு ஜெனீவா தீர்மானத்தை அமெரிக்கா முன்னெடுப்பதற்கு மேரியின் "மனித உரிமை' செய்திகளும் ஒரு காரணம். ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட மேலை நாடுகள் இலங்கை அரசுக்கு எதிரான நிலை எடுத்திருப்பதும் மேரி கால்வின் போன்றவர்களால்தான்.

அவர் இன்று இல்லை என்பது தமிழர்களின் துரதிருஷ்டமே. ஆனால், அதைவிட மிகப்பெரிய துரதிருஷ்டம் என்ன தெரியுமா? தமிழர்களை அங்கமாகக் கொண்ட இந்தியா, தமிழர்களுக்கு ஆதரவாக இல்லாததுதான். இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம், அவர்களது சர்வதேச ராஜதந்திரத்தின் ஒரு பகுதிதான். அவர்களைப் பொருத்தவரை, லிபியா, ஈரான், இராக், சிரியா போன்ற நாடுகளுக்கு எதிரான தீர்மானத்தைப் போன்றதுதான் இதுவும். தமிழர்கள் மீது அவர்களுக்கு நேரடியான கரிசனம் ஏதும் இல்லை என்பதும் உண்மைதான். என்றாலும், இத்தகைய தீர்மானத்தால், இலங்கை இனப்படுகொலையில் உறவுகளை இழந்த தமிழர்களுக்கு நீதி கிடைக்க வழி ஏற்படும் என்பதை மறுக்க முடியாது.

இத்தகைய சூழலில் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று இந்தியா வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றால், அதற்காக யாரைக் குறை சொல்வது? அரசுக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சியையா அல்லது அதில் அங்கம் வகிக்கும் தமிழகக் கட்சிகளையா? இல்லை, அரசில் செல்வாக்குடன் வீற்றிருக்கும் அரசியல்வாதிகளையா?

47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமைக் குழுவில் இந்தியாவுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், இலங்கைக்கு ஆதரவாகவோ அல்லது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலோ இருப்பதைத்தான் இந்தியா விரும்புகிறது என்பதை பிரதமர் உள்ளிட்டோரின் அசெüகரியமான மெüனம் நமக்கு உணர்த்துகிறது.

சிரியா உள்பட பல நாடுகளுக்கு எதிரான தீர்மானங்களின்போது எடுக்கப்பட்ட நிலையைத்தான் இப்போதும் எடுக்கிறோம் என்று "சாக்கு' சொல்லப்படலாம். தமிழர்களுக்கு ஆதரவாக நிற்பதற்கு அருமையான வாய்ப்புக் கிடைத்தும் அதை எட்டி உதைக்கப் போகும் மத்திய அரசின் இத்தகைய முடிவை "தமிழர்களின் துரதிருஷ்டம்' என்று கூறாமல் வேறென்ன சொல்ல?

இந்த இரண்டையும் விடப் பெரிய துரதிருஷ்டமும் தமிழர்களை இப்போது பீடித்திருக்கிறது. இலங்கைக்கு எதிராக பிரசாரம் செய்வதிலும், ஆதரவு திரட்டுவதிலும் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளிடம் ஒற்றுமை இல்லை என்பதுதான் தாங்க முடியாத வேதனை.

படுகொலைகளையும் சித்திரவதைகளையும் நேரில் பார்த்தறிந்தவர்கள், இந்த விஷயத்தில் பிளவுபட்டிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

ஒருவேளை இலங்கையின் ஆதரவு திரட்டும் முயற்சிகளையும் மீறி, மனித உரிமைக் குழுவின் தீர்மானம் வெற்றி பெற்றாலும்கூட, அதனால், சிங்களர்களுக்குக் கோபம் ஏற்பட்டுவிடுமோ, இப்போதைய அமைதிக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சும் இழிநிலைதான் தமிழினத்துக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஜெனீவா தீர்மானத்துக்கு ஆதரவாக நேரடியாகக் களத்தில் இறங்காவிட்டால், மக்களிடம் கெட்ட பெயர் ஏற்படும், அது உள்ளாட்சித் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல்வாதிகளில் ஒரு பிரிவினர் பார்க்கிறார்கள்.

இலங்கை அரசை நேரடியாக எதிர்த்தால், அது தமிழர்களுக்கு எதிராக இன்னொரு வன்முறைக்கு வழிவகுக்கும் என்று மற்றவர்கள் அஞ்சுகிறார்கள். இந்த நிலைக்கு யாரைக் குறைசொல்ல?

எல்லோருக்கும் துரதிருஷ்டம் வரும். தமிழினத்துக்கு மட்டும் அது தொடர்கதையாகத் தொடர்கிறதே, என் செய்ய?
 
.
 
..