Tuesday, August 16, 2011

ஊழலை ஒழித்தால் சரக்கு ரேட் குறையுமா?

ஊழல் என்பது என்ன? இந்தக் கேள்விக்குப் பதில் தெரியாமலேயே பலர் அண்ணா ஹசாரேவுக்குப் பின்னால் சாரை சாரையாகச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஊழலை மருந்து அடித்து ஒழித்துவிட்டால் என்ன ஆகும் என்பதும் பலருக்குத் தெரியாது. நான் ஊழல்வாதியா, ஊழலுக்குத் துணை போகிறேனா என்று யாரும் தங்களைத் தாங்களே கண்ணாடி முன் கேட்டுக் கொண்டதாகவும் தெரியவில்லை. ஏதோ கண்ணுக்குத் தெரியாத, நம்மைத்தவிர பிறர் மட்டுமே செய்யக்கூடிய ஒரு மோசமான செயலாகத்தான் ஊழல் பார்க்கப்படுகிறது. அதனால்தான் போனால் போகட்டும் கொசுவை ஒழிப்பதுபோல ஊழலையும் ஒழித்துவிடலாம் என்று ஹசாரேவுக்குப் பின்னால் மக்கள் திரண்டு விட்டார்கள்.

 2ஜி ராசா ஊழல்வாதி என்றால் அம்பானிகளும் டாடாவும் மட்டும் சுத்தமானவர்களா? அவர்கள் மட்டும் ஏன் விட்டு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று யாரும் கேட்பதில்லை. கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப்படுகையை ஏதோ முப்பாட்டன் சொத்துப்போல வளைத்துப் போட்டிருக்கிறார்களே, அதில் ஏன் நாம் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறோம்?

நாம் மட்டுமல்ல ஊழல் ஒழிப்பு மிஸ்டுகால் அண்ணா ஹசாரேவும் இதில்தான் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறார். அரசியல்வாதிகளை மட்டும் எதிர்க்கும் அவருக்கு பெரு முதலாளிகளெல்லோரும் உத்தமர்களாகத் தெரிகிறார்கள். லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமர் வர வேண்டும் என்று கேட்கும் அவர், டாடாவையும் அம்பானிகளையும் பற்றிப் பேசுவதில்லை. கார்ப்பரேட்களை மட்டுமே ஆதரிக்கும் மோடியை சிலாகித்துக் கொண்டிருக்கிறார்.

புதிய பொருளாதாரக் கொள்கைக்குப் பிறகு ஊழல் என்பதே பெருமுதலாளிகளிடம் இருந்துதான் தொடங்குகிறது. கட்சி நிதி என்பதுதான் ஒழிக்க வேண்டிய முதலாவது லஞ்சப் பணம். ஊழலை முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமென்றால், அரசியல்வாதிகளுடன் சேர்ந்து நாட்டைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகளையும் ஒடுக்க வேண்டும். அப்படி ஒடுக்கினால் என்ன ஆகும் தெரியுமா?

 எந்த வேலையும் செய்யாமல் கார்ப்பரேட் நிறுவனங்களில் பெஞ்ச் தேய்க்கும் பலருக்கு வேலை இருக்காது. சாட்டர்டே பப்கள், பீசா கார்னர்கள் இயங்கும் அளவுக்கு அதீத பணப்புழக்கம் இருக்காது, கட்டட வேலை செய்பவரின் பிள்ளையும், ஐ.டி. அறிவாளியின் பிள்ளையும் ஒரே வகுப்பில் படிக்க வேண்டியிருக்கும், வீட்டில் 10 ஏசியையும் ஆளுக்கொரு காரையும் வைத்துக் கொண்டு  ஏழைகள் பிளாஸ்டிக் பைகள் செல்லக்கூடாது என்று போராடும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு வேலை இருக்காது, ஒருவேளை கார்களையும், ஏசிக்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஏழைகள் போராடினாலும் போராடுவார்கள். 

இது மட்டுமல்ல ஊழலை ஒழித்துவிட்டால், எதிர்பார்க்காத, பலருக்கும் கசப்பானதுமான இன்னும் பலதும் நடக்கக்கூடும். ஒன்று ஊழல் அதுபாட்டுக்கு இருந்துவிட்டுப் போகட்டும், அல்லது ஊழல் ஒழிப்பு சித்துவிளையாட்டை அம்பானியில் இருந்து ஆரம்பியுங்கள். அதைவிட்டுவிட்டு ஊழலை ஒழித்துவிட்டால், இன்கிரீமென்ட் கிடைக்கும், சீஆஃப் கிடைக்கும், சரக்கு ரேட் குறையும் என்று எதிர்பார்த்து யாராவது அண்ணா ஹசாரே பின்னால் கிளம்பியிருப்பீர்கள் என்றால் மிஸ்டுகால் கொடுத்துவிட்டு தயவு செய்து சத்தம்போடாமல் வீட்டுக்கு வந்துவிடுங்கள். 

.
.
.