Monday, March 05, 2012

தமிழினத்தின் துரதிருஷ்டம்!

தமிழர்கள் துரதிருஷ்டசாலிகள். இல்லையென்றால், ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்படும் நேரத்தில், அந்நாட்டு ராணுவத்தின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய பிரிட்டன் பத்திரிகையாளர் மேரி கால்வின் நம்மிடையே இல்லாமல் போவாரா?

சிங்கள ராணுவத்தால் தமிழர்கள் எவ்வாறெல்லாம் சித்திரவதை செய்யப்பட்டார்கள், அப்பாவிகள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டது எப்படி என்பதையெல்லாம் தனது செய்திகளில் விவரித்தவர்தான் மேரி.

இறுதிக் கட்டப் போரின்போது, வெள்ளைக்கொடி ஏந்தி வந்த நடேசன், அவரது மனைவி, புலித்தேவன் உள்ளிட்டோரை இலங்கை ராணுவத்தினர் ஈவிரக்கமில்லாமல் கொன்றனர் என்பதை தனது போர்ச் செய்தியில் அவர் பதிவு செய்திருக்கிறார்.

"துப்பாக்கிகளை மெüனத்தில் ஆழ்த்துகிறோம்' என்று கூறியபோதே, ராணுவத்திடம் சரணடைய விடுதலைப் புலிகள் தயாராகிவிட்டிருந்தனர் என்பது உலகறிந்த விஷயமாகியிருந்தது. அந்தப் பின்னணியில் புலிகளுக்கும் ஐ.நா. அமைப்புக்கும், ராஜபட்ச அரசுக்கும் இடையே நம்பிக்கை ஏற்படுத்தும் பணியில் மேரி ஈடுபட்டிருந்தார்.

"சரணடைகிறோம்' என்று நடேசனோ, புலிகளின் பிற தலைவர்களோ வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், ஆயுதங்களைக் போட்டுவிட்டு சரணடைவதுதான் அவர்களது நோக்கமாக இருந்தது என்பதற்கு நேரடியான சாட்சியாக இருந்தவர் மேரி. நடேசன் உள்ளிட்டோரிடம் சாடிலைட் போனில் பேசுவது, குறுஞ்செய்திகள் மூலம் தகவல்களைப் பெறுவது என விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாக இருந்தார்.

மேற்கத்திய ஊடகங்களின் வழக்கமான "நடுநிலை' பத்திரிகையாளராக இலங்கைக்கு வந்தவர்தான் மேரி. மேலை நாட்டுச் சந்தையில் அதிகமாக விற்கும் "மனித உரிமை' சாயம் பூசிய செய்திகளைத் திரட்டுவதுதான் அவரது முதல்நிலைப் பணியாக இருந்தது. ஆனால், விடுதலைப் புலிகள் என்பவர்கள், பயங்கரவாதிகள் என்கிற பலரது எண்ணத்தை மேரி தந்த செய்திகள் மாற்றின. புலிகளை "விடுதலைப் போராட்ட வீரர்கள்' என்று துணிச்சலாகக் குறிப்பிட்டார். ஏதோ ஒரு வகையில், தமிழினத்துக்கு அவர் பேருதவி புரிந்திருக்கிறார் என்பதை நாம் மறுக்க முடியாது. மறந்துவிடவும் கூடாது!

மேரி கால்வின் இன்றைக்கு உயிருடன் இல்லாவிட்டாலும், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைப் போர், ராணுவத்தின் மனித உரிமை மீறல்கள், அகதிகள் நடத்தப்பட்ட விதம் உள்ளிட்டவை குறித்து அவர் விட்டுச் சென்றிருக்கும் ஆவணங்கள் நமக்குப் பயன்படுகின்றன.

இன்றைக்கு ஜெனீவா தீர்மானத்தை அமெரிக்கா முன்னெடுப்பதற்கு மேரியின் "மனித உரிமை' செய்திகளும் ஒரு காரணம். ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட மேலை நாடுகள் இலங்கை அரசுக்கு எதிரான நிலை எடுத்திருப்பதும் மேரி கால்வின் போன்றவர்களால்தான்.

அவர் இன்று இல்லை என்பது தமிழர்களின் துரதிருஷ்டமே. ஆனால், அதைவிட மிகப்பெரிய துரதிருஷ்டம் என்ன தெரியுமா? தமிழர்களை அங்கமாகக் கொண்ட இந்தியா, தமிழர்களுக்கு ஆதரவாக இல்லாததுதான். இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம், அவர்களது சர்வதேச ராஜதந்திரத்தின் ஒரு பகுதிதான். அவர்களைப் பொருத்தவரை, லிபியா, ஈரான், இராக், சிரியா போன்ற நாடுகளுக்கு எதிரான தீர்மானத்தைப் போன்றதுதான் இதுவும். தமிழர்கள் மீது அவர்களுக்கு நேரடியான கரிசனம் ஏதும் இல்லை என்பதும் உண்மைதான். என்றாலும், இத்தகைய தீர்மானத்தால், இலங்கை இனப்படுகொலையில் உறவுகளை இழந்த தமிழர்களுக்கு நீதி கிடைக்க வழி ஏற்படும் என்பதை மறுக்க முடியாது.

இத்தகைய சூழலில் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று இந்தியா வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றால், அதற்காக யாரைக் குறை சொல்வது? அரசுக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சியையா அல்லது அதில் அங்கம் வகிக்கும் தமிழகக் கட்சிகளையா? இல்லை, அரசில் செல்வாக்குடன் வீற்றிருக்கும் அரசியல்வாதிகளையா?

47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமைக் குழுவில் இந்தியாவுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், இலங்கைக்கு ஆதரவாகவோ அல்லது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலோ இருப்பதைத்தான் இந்தியா விரும்புகிறது என்பதை பிரதமர் உள்ளிட்டோரின் அசெüகரியமான மெüனம் நமக்கு உணர்த்துகிறது.

சிரியா உள்பட பல நாடுகளுக்கு எதிரான தீர்மானங்களின்போது எடுக்கப்பட்ட நிலையைத்தான் இப்போதும் எடுக்கிறோம் என்று "சாக்கு' சொல்லப்படலாம். தமிழர்களுக்கு ஆதரவாக நிற்பதற்கு அருமையான வாய்ப்புக் கிடைத்தும் அதை எட்டி உதைக்கப் போகும் மத்திய அரசின் இத்தகைய முடிவை "தமிழர்களின் துரதிருஷ்டம்' என்று கூறாமல் வேறென்ன சொல்ல?

இந்த இரண்டையும் விடப் பெரிய துரதிருஷ்டமும் தமிழர்களை இப்போது பீடித்திருக்கிறது. இலங்கைக்கு எதிராக பிரசாரம் செய்வதிலும், ஆதரவு திரட்டுவதிலும் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளிடம் ஒற்றுமை இல்லை என்பதுதான் தாங்க முடியாத வேதனை.

படுகொலைகளையும் சித்திரவதைகளையும் நேரில் பார்த்தறிந்தவர்கள், இந்த விஷயத்தில் பிளவுபட்டிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

ஒருவேளை இலங்கையின் ஆதரவு திரட்டும் முயற்சிகளையும் மீறி, மனித உரிமைக் குழுவின் தீர்மானம் வெற்றி பெற்றாலும்கூட, அதனால், சிங்களர்களுக்குக் கோபம் ஏற்பட்டுவிடுமோ, இப்போதைய அமைதிக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சும் இழிநிலைதான் தமிழினத்துக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஜெனீவா தீர்மானத்துக்கு ஆதரவாக நேரடியாகக் களத்தில் இறங்காவிட்டால், மக்களிடம் கெட்ட பெயர் ஏற்படும், அது உள்ளாட்சித் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல்வாதிகளில் ஒரு பிரிவினர் பார்க்கிறார்கள்.

இலங்கை அரசை நேரடியாக எதிர்த்தால், அது தமிழர்களுக்கு எதிராக இன்னொரு வன்முறைக்கு வழிவகுக்கும் என்று மற்றவர்கள் அஞ்சுகிறார்கள். இந்த நிலைக்கு யாரைக் குறைசொல்ல?

எல்லோருக்கும் துரதிருஷ்டம் வரும். தமிழினத்துக்கு மட்டும் அது தொடர்கதையாகத் தொடர்கிறதே, என் செய்ய?
 
.
 
..

Monday, February 27, 2012

போர் என்றால் அமைதி!

ஈரான் என்றால் மத அடிப்படைவாதிகளின் நாடு என்கிற கருத்து உலகமெங்கும் விதைக்கப்பட்டிருக்கிறது. ரௌடி நாடு என்று மேல்நாட்டுப் பத்திரிகைகள் வெளிப்படையாகவே குறிப்பிடுகின்றன.

 இதற்கு ஏற்றாற்போல இஸ்ரேலை வரைபடத்தில் இருந்து அகற்றிவிடுவோம், ஹோமுஸ் நீரிணையை அடைத்து உலகத்துக்கே எண்ணெய் கிடைக்கவிடாமல் செய்துவிடுவோம் என்று ஈரான் தடாலடியாகப் பேசுகிறது. ஆனால் உண்மையில், இந்த இரண்டு செயல்களையும் ஈரானால் செய்யவே முடியாது.

 ஹோமுஸ் நீரிணையைத் தடுத்தால், அதைத் தகர்ப்பதற்கு அமெரிக்கக் கடற்படைக்கு சில மணி நேரங்கள் போதும். இஸ்ரேல் மீது நேரடியாகத் தாக்குதல் நடவடிக்கையில் இறங்கினால், ஈரான்தான் வரைபடத்திலிருந்து காணாமல் போகும். தடாலடியாகப் பேசுவதெல்லாம் ஈரானுக்கேயுரிய வாய்ச் சவடால்தான்.

 உறுதியான மக்களாட்சி அங்கு கிடையாது. தேர்தல் எப்படி நடக்கிறது என்பதற்கு டுவிட்டர் புரட்சியே ஆதாரம். அரசியல் கட்சிகளையும் பத்திரிகைகளையும் தடை செய்வதே அகமதிநிஜாத்துக்கு பகுதி நேர வேலை என்று கிண்டல் செய்கிறார்கள். இப்படிப்பட்டவரின் கையில் அணு ஆயுதம் கிடைத்தால் என்ன ஆகும் என்பதுதான் உலகின் இப்போதைய கவலை.

 அணு ஆயுதம் தயாரிப்பது என்பது இப்போது பிரச்னையில்லை. அணு ஆயுதப் பரவல் தடுப்பு, பேரழிவு ஆயுதங்கள் ஒழிப்பு பற்றி முன்னர் கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் எல்லா நாடுகளும் எப்போதோ வசதியாக மறந்துவிட்டன. இப்போது உலகம் விவாதித்துக் கொண்டிருக்கும் பிரச்னை, யாரெல்லாம் அணுஆயுதத்தைத் தயாரிக்கலாம், வைத்திருக்கலாம் என்பதுதான். இஸ்ரேலை அழித்துவிடுவோம் என்று கூறும் ஒரு பொறுப்பற்ற நாடு யுரேனியத்தைச் செறிவூட்டிக் கொண்டிருப்பதுதான் பலருக்கு அச்சமாக இருக்கிறது. பயங்கரவாதிகளின் கைகளுக்குப் போய்விடுமே என்கிற பதற்றம் வேறு.

 சரி, எந்தெந்த நாடெல்லாம் அணு ஆயுதங்களை வைத்திருக்கலாம் என்பதை யார்தான் தீர்மானிப்பது? அமெரிக்காவும் பிரிட்டனும்தான் என்றால், வரலாற்றில் பலமுறை துரோகம் இழைத்திருக்கும் இந்த இரு நாடுகளையும் யார் நம்புவார்கள்? அதுவும் ஈரான் எப்படி இவர்களை மேற்பார்வையாளர்களா ஏற்கும்? "நீ எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை உனது எதிரிதான் தீர்மானிக்கிறான்' என்பார்கள். அந்த வகையில் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது என்று வைத்துக்கொண்டால், அதற்கு முழுக்க முழுக்க அமெரிக்காவும் பிரிட்டனும்தான் காரணம்.

 இங்கே ஒரு வரலாற்றுச் சம்பவத்தை நினைவுபடுத்தியாக வேண்டும். இன்றைக்கு இஸ்லாமிய அடிப்படைவாத நாடு என்று கேலியாகச் சித்திரிக்கப்படும் ஈரான், ஒரு காலத்தில் முழுமையான ஜனநாயக நாடாக இருந்தது.

 1950-களில் அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆட்சி நடந்து வந்தது. முகமது மொசாதே பிரதமராக இருந்தார். பல்வேறு பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் செய்தார். அதில் ஒன்றுதான் எண்ணெய் வளத்தை நாட்டுடைமையாக்குவது. ஈரானில் கிடைத்த எண்ணெயில் 80 சதவிகிதம்வரை உறிஞ்சிக் கொண்டிருந்த பிரிட்டனுக்கு மொசாதேயின் இந்த நடவடிக்கை பேரதிர்ச்சியாக இருந்தது.

 ஜனநாயகத்தின் காவலர்கள் என்று பல நூற்றாண்டுகளாகக் கூறிக் கொண்டிருக்கும் அமெரிக்காவும், பிரிட்டனும் அன்று ஓர் அற்பமான செயலைச் செய்தன. தங்களது நாடுகளின் உளவு அமைப்புகளை ஏவிவிட்டு, ஜனநாயக அரசுக்கு எதிரான குழுக்களைத் தூண்டின.

 "ஆபரேஷன் அஜாக்ஸ்' என்கிற பெயரில் சிஐஏ நடத்திய அந்த மாபெரும் அரசியல் மோசடியில், அரசியல்வாதிகள் முதல் உள்ளூர் ரெüடிகள் வரை பல தரப்பினருக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டது. அதிருப்தி குழுக்களுக்கு நிதியுதவி செய்தார்கள்.

 இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் போராட்டமும் வன்முறையும் நடந்தன. அதைப் புரட்சி என்று ஊடகங்களில் எழுத வைத்தார்கள். முடிவில் மொசாதேவின் ஆட்சியை அகற்றி பிரிட்டனும் அமெரிக்காவும் தங்களது ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டன.

 இவையெல்லாம் வெறும் கற்பனையோ கதையோ கிடையாது. சிஐஏவின் ஆவணங்களிலும், பிற நூல்களிலும் இந்தச் சதித் திட்டம் குறித்த ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன.

 ஈரானில் அகமதிநிஜாத்தை எதிர்த்து பச்சை இயக்கம் என்கிற பெயரில் போராடித் தோற்றுக் கொண்டிருக்கிறார்களே, அவர்களெல்லாம் மொசாதேவின் வழிவந்தவர்கள்.

 அன்றைக்கு மொசாதேவின் ஜனநாயக அரசை சதி செய்து தூக்கி எறிந்தவர்கள்தான், அகமதிநிஜாத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக பச்சை இயக்கத்துக்கு ஆதரவாக இப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறது என்று கூறுவது இதைத்தான்.

 மேற்கத்திய நாடுகள் என்ன குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், அணு ஆயுதம் தயாரிப்பது எங்கள் நோக்கமில்லை என்றுதான் ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது.

 ஒருவேளை அணுஆயுதம் தயாரிக்க முயன்றாலும், இன்றைய சூழலில் அதற்கான முழு உரிமையும், தேவையும் ஈரானுக்கு இருக்கிறது என்பதை கடந்த காலச் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

 அமெரிக்கா குற்றம்சாட்டியதைப்போல ரசாயன ஆயுதங்கள் இராக்கில் இருந்திருந்தால், சதாம் உசேனை இப்படித் தூக்கில் தொங்கவிட்டிருக்க முடியாது. அமெரிக்காவின் பேச்சுக்கு ஏமாறாமல், தனது அணு ஆயுதத் திட்டங்களைத் தொடர்ந்திருந்தால், கடாஃபிக்கு இப்படியொரு இழிநிலை நேர்ந்திருக்காது.

 லிபியா, இராக், ஆப்கானிஸ்தான் போன்றவற்றின் அழிவுக்குக் காரணம், அவற்றிடம் பேரழிவு ஆயுதங்கள் இல்லாததுதான்.

 வடகொரியாவை நெருங்க முடியாததற்குக் காரணம் அவர்களிடம் அணு குண்டுகள் இருப்பதுதான். இப்படியொரு சூழலில், அமெரிக்காவுக்கு நேரடியாகச் சவால்விட்டுக் கொண்டிருக்கும் ஒரு நாடு, பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கக்கூடாது என்று கூச்சலிடுவது, அந்த நாட்டை ஒழிப்பதற்கான சூழ்ச்சியல்லாமல் வேறென்ன?

 அணுஉலை, அணுகுண்டுகளுக்கு நாம் எதிரானவர்களாக இருக்கலாம். அதேநேரத்தில், லிபியாவுக்கும் இராக்குக்கும் ஏற்பட்ட நிலை தனக்கு ஏற்படாமல் இருக்க அணு ஆயுதம் அவசியம் என்று ஈரான் கருதுவதை எப்படித் தவறு என்று கூற முடியும்?

 புரட்சிகர பாடகர் டிரேசி சாப்மன் பாடல் வரிகளில் குறிப்பிடுவதைப்போல ஏவுகணைகளைக் கொண்டு மக்களைக் கொல்லும் படைகளைத்தான் நாம் அமைதி காக்கும் படைகள் என்கிறோம்.

 வல்லரசுகளின் தந்திர அரசியலில் சிக்கியிருக்கும் இந்த உலகில் வெறுப்புதான் அன்பு, பொய்தான் உண்மை, போர் என்றால் அமைதி, ஆம் என்றால் இல்லை. ஜனநாயகத்தின் காவலர்கள், அஹிம்சாவாதிகள், ரௌடி நாடு போன்றவையெல்லாம்கூட இவற்றைப் போன்ற பொருள் கொண்டவைதான்.
.

.

Tuesday, February 14, 2012

அட்னானின் புதிய ஆயுதம்!


அவரது பெயர் காதர் அட்னான். வயது 33. பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப் பகுதியுள்ள அராபே என்கிற கிராமத்தில் இருக்கிறது அவருடைய வீடு. ரன்டா என்ற மனைவி, இரண்டு - மூன்று வயதில் ஒரு குழந்தை என எல்லாம் வாய்க்கப் பெற்றவர் அவர்.

 பாலஸ்தீனத்தில் பலருக்கு நேரும் பயங்கரத்தை கடந்த டிசம்பர் 17-ம் தேதி அட்னான் சந்தித்தார். தடதடவென வீட்டுக்குள் புகுந்த இஸ்ரேலிய வீரர்கள், எந்தக் காரணமும் கூறாமல் அவரைக் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர்.
 ராணுவ வாகனத்தின் மீது கல்லெறிவது முதல், கொலை செய்வது வரை பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் பாலஸ்தீனர்களை இஸ்ரேலிய ராணுவம் கைது செய்வது வழக்கம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பிறகு சிறையில் அடைப்பார்கள்.

 ஆனால், அட்னானைப் பிடித்துச் சென்றபோது ராணுவத்தினர் எந்தக் காரணமும் கூறவில்லை. அவர் என்ன குற்றம் செய்தார் என்றும் தெரிவிக்கவில்லை. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்களே தவிர, விசாரணை எதுவும் நடக்கவில்லை. பல நாடுகளில் இருப்பதைப் போல பயங்ரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் நிர்வாகத் தடுப்புக் காவல் சட்டத்தின்படி அவரைப் பிடித்திருப்பதாக மட்டும் தெரிவித்தார்கள். இந்தச் சட்டப்படி எந்த விசாரணையும் இன்றி 6 மாதங்கள்வரை சிறை வைக்க முடியும். தேவைப்பட்டால், காலவறையின்றி காவலை நீட்டிக்கவும் முடியும். பயங்கரவாதத்தை ஒழிக்கவும், மக்களைப் பாதுகாக்கவும் இதுபோன்ற சட்டங்கள் அவசியம் என்பது இஸ்ரேலின் கருத்து.

 பிடித்துச் செல்லப்பட்ட அட்னான், "இஸ்லாமிய ஜிகாத்' என்கிற அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி என்று இஸ்ரேலிய தரப்பில் சொல்லப்பட்டது. அந்த அமைப்பின் தலைவரே அவர்தான் என்று சிலர் கூறுகின்றனர். செய்தித் தொடர்பாளராக இருந்தார் என்பது இன்னொரு வகையாரின் கூற்று.
 இஸ்ரேலைப் பொருத்தவரை, "இஸ்லாமிய ஜிகாத்' என்பது பயங்கரவாத முத்திரையிடப்பட்ட அமைப்பு. பாலஸ்தீன பிராந்தியத்தில் நடந்த பல்வேறு தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு இந்த அமைப்பே காரணம் என்றும் நம்பப்படுகிறது. ஆனால், அட்னான் அதுபோன்ற பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டாரா என்பது தெரியாது.

 இஸ்லாமிய ஜிகாத் போன்ற அமைப்புகளுக்கு பாலஸ்தீனத்தில் குறிப்பிடத்தக்க ஆதரவு இருக்கிறது. இஸ்ரேல் எதைப் பயங்கரவாதம் என்று சொல்கிறதோ, அதையே விடுதலைப் போராட்டம் என்கிறார்கள் பாலஸ்தீனர்களில் ஒரு பிரிவினர். 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் திணிக்கப்பட்டிருக்கும் அடக்குமுறையில் இருந்து தங்களுக்கு விடுதலை வேண்டும்; பாலஸ்தீனம் சுதந்திர நாடாக இயங்க வேண்டும் என்பதெல்லாம் பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுகிறவர்களின் கோரிக்கை. பாலஸ்தீன விடுதலை என்று எளிதாகக் கூறிவிட்டாலும், மத ரீதியான, இன ரீதியான சிக்கலான, இந்தச் சிறிய இடத்தில் விவரிக்க முடியாத பல அம்சங்களை அது உள்ளடக்கியிருக்கிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

 அட்னான்போல தடுப்புக் காவலில் பிடித்துச் செல்லப்படுபவர்களை வைப்பதற்காவே, மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேல் 3 சிறைகளை அமைத்திருக்கிறது. பாலஸ்தீன விடுதலை இயக்கப் படைகளில் சிறார் வீரர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள், அவர்கள் தடுப்பு அரணாகப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பன போன்ற குற்றச்சாட்டுகள் இருப்பதைப் போல, இந்தச் சிறைகளில் பாலஸ்தீன சிறுவர்கள் பின்புறம் கைவிலங்கிட்டு அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளால் முன்வைக்கப்படுகிறது.

 இந்தச் சிறைகளில் ஒன்றுதான் ஆபர் சிறை. தடுப்புக் காவலில் பிடித்துச் செல்லப்பட்ட அட்னான் இங்குதான் அடைக்கப்பட்டார். பிடித்துச் செல்லப்பட்டபோது, தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்ட பிறரைப் போல எந்த எதிர்ப்பும் இல்லாமல் சிறையில் அடைபட்டுக் கிடந்திருந்தால், அவரைப் பற்றி எழுத வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. ஆனால், அவர் இஸ்ரேலுக்கு எதிரான தனது புதிய ஆயுதத்தைக் கையிலெடுத்தார்.

 டிசம்பர் 17-ம் தேதி இஸ்ரேலிய ராணுவத்தினர் பிடித்துச் சென்றபோதே, தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் அட்னான். தம்மையும், இந்தச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 300-க்கும் மேற்பட்டோரையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார்.

 முதல் சில நாள்களில் இந்த உண்ணாவிரதத்தைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக, மேற்குக் கரைப் பகுதியிலும் காஸô பகுதியிலும் இந்த விவரம் மக்கள் மத்தியில் பரவத் தொடங்கியது. இருபது நாள்களுக்கும் மேலாக அட்னான் தனது போராட்டத்தில் உறுதியாக இருந்ததால், பல இடங்களில் அவருக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டங்கள் நடந்தன.

 இப்போது, அட்னானின் உண்ணாவிரதம் இரண்டு மாதங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அவரது உடல் எடை 27 கிலோ குறைந்துவிட்டதாக அவரது மனைவியும் வழக்கறிஞரும் கூறுகின்றனர். எழுந்து நிற்கவே திறனில்லாத நிலைக்குச் சென்றுவிட்டதாகவும், தோலின் நிறம் மாறிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேலிய ராணுவமும் சிறை அதிகாரிகளும் அவரை மருத்துவமனையில் வைத்துக் கண்காணித்து வருகின்றனர்.

 அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், கட்டாயப்படுத்தி உணவைச் செலுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 இதற்கிடையே, சமூக வலைத் தளங்களான டுவிட்டரிலும், பேஸ்புக்கிலும் அட்னானுக்கு ஆதரவான கருத்துகள் குவியத் தொடங்கியிருக்கின்றன. அதே நேரத்தில் "ஒரு பயங்கரவாதி சாகட்டும் விட்டுவிடுங்கள்' என்பது போன்ற கருத்துகளுக்கும் பஞ்சமில்லை.

 பல நேரங்களில் இந்தியாவிலும், பிற நாடுகளிலும் உண்ணாவிரதமிருந்தவர்கள் இறந்து போனதை உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறது. ஆனால், அவர்களில் பலர் வரலாற்றில் இடம்பிடித்ததுடன், புதிய போராட்டங்களுக்கும் வித்திட்டனர்.

 அட்னான் இதற்கு முன்பு ஆயுதம் எடுத்தாரோ என்னவோ தெரியாது. அப்படியொரு போராட்டத்தில் வெற்றி கிடைக்குமா என்பதும் நிச்சயமில்லை. இப்போது, நவீன உலகத்தை எதிர்கொள்ளும் வகையில், உண்ணாவிரதம் என்கிற புதிய ஆயுதத்தின் மூலம் இஸ்ரேலை அவர் மிரட்டியிருக்கிறார். உலகைத் திரும்பிப் பார்க்கச் செய்திருப்பதன் மூலம் தனது முயற்சியில் பாதி வெற்றியும் பெற்றுவிட்டார்.

..

..