Wednesday, May 26, 2010

இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு அஸ்தமனம்?

கணினித் தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றன.​ இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பம் இன்னும் எவ்வளவு காலத்துக்குக் காலாவதியாகாமல் இருக்கும் என்பதைக் கணிக்கக்கூட முடியாத அளவுக்கு இந்த மாற்றங்கள் வேகம்பிடித்திருக்கின்றன.​ மாற்றங்களைத் தாங்காத சில தொழில்நுட்பங்கள் நாள் கணக்கிலேயே காணாமல் போய்விடுகின்றன.​ மாற்றங்களை உள்வாங்கிக் கொள்ளும் தொழில்நுட்பங்களுக்கு ஆயுள் அதிகமாக இருக்கிறது.

இதையெல்லாம் சரியாகக் கணித்து தொழில் உத்திகளை வகுத்துக் கொள்ளும் நிறுவனங்கள்தான் தொழில்நுட்பத்துறையில் நீடித்திருக்கின்றன.​ அப்படியொரு தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய நுணுக்கங்களைக் கொண்டிருக்கும் நிறுவனம்தான் மைக்ரோசாஃப்ட்.

தொழில் தந்திரங்களை வகுத்துக் கொள்வதில் மைக்ரோசாஃப்டின் பாணி வியக்கத்தக்கது.​ ஒரு மென்பொருளை விற்கும்போது,​​ அதனைச் சுற்றிய வேறு பல மென்பொருள்களையும் திணித்துவிடுவதுதான் மைக்ரோசாஃப்டின் வழக்கம்.​ அப்படித் திணிக்கப்பட்ட ஒரு மென்பொருள்தான் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்.​ கணினி வழியாக இணையத்துக்குள் நுழைவதற்கான இணைய உலவி இது.

இயக்க அமைப்பு மென்பொருள் சந்தையில் 90 சதவீதத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மைக்ரோசாஃப்ட்,​​ தனது விண்டோஸ் இயக்க அமைப்புடன் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரையும் நுழைத்துவிடுகிறது.​ இதனால்,​​ இணையத்தைத் தொடர்பு கொள்ள வேண்டுமானால்,​​ இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைப் பயன்படுத்த வேண்டும் என்பதே சில ஆண்டுகளுக்கு முன்புவரை எழுதப்படாத விதியாக இருந்தது.​ அதாவது இணையம் என்பதும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்பதும் வெவ்வேறல்ல என்பது போன்ற மாயை இருந்தது.​ இணையத்தில் கரைகண்டவர்கள்தான் வேறுவகையான உலவிகளைப் பற்றித் தெரிந்து வைத்திருந்தார்கள்.​ ​

தொழில் தந்திரங்களின் மூலம் முன்னணியிலிருந்த நெட்ஸ்கேப் நேவிகேட்டர் போன்ற உலவிகளைப் பின்னுக்குத் தள்ளியது மைக்ரோசாஃப்ட்.​ இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் 95 சதவீதம் பேருக்கு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைத் தவிர வேறு எந்த உலவியையும் பயன்படுத்தும் தெளிவில்லை என்று ஆய்வுகள் கூறின.

ஆனால் கணினித் தொழில்நுட்ப உலகின் காலச் சக்கரம் நிபுணர்களின் கணிப்பை விடவும் மிக வேகமாகச் சுழல்கிறது.​ ஆறேழு ஆண்டுகளுக்கு முன்புவரை கணினி மென்பொருள் உலகில் ஏகபோகமாக இருந்த ​ மைக்ரோசாஃப்டுக்கு ஐரோப்பிய யூனியன் வடிவில் சோதனை வந்தது.​ உலகின் மற்ற பகுதிகளெல்லாம் மைக்ரோசாஃப்ட் கொடுப்பதை கேள்விகேட்காமல் வாங்கிக் கொண்டிருந்த நிலையில்,​​ மீடியா ப்ளேயர்,​​ இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் போன்றவற்றை விண்டோஸýடன் இணைத்துக் கொடுப்பது பற்றி ஐரோப்பிய யூனியன் சந்தேகம் எழுப்பியது.

மற்ற நிறுவனங்களின் மென்பொருள்களைப் பற்றி வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இந்தச் செருகல் உத்தியை மைக்ரோசாஃப்ட் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டப்பட்டது.​ இதனால்,​​ மீடியா ப்ளேயர் இல்லாத விண்டோஸ் இயக்க அமைப்பை ஐரோப்பிய யூனியனுக்காகத் தயாரித்து வழங்க வேண்டிதாயிற்று.​ பல ஆயிரம் கோடி அபராதம் வேறு.​ மைக்ரோசாஃப்டின் வியாபாரத் தந்திரத்துக்கு வைக்கப்பட்ட அதிரடியான முதல் குட்டு இதுதான்.

கடந்த ஆண்டு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கும் சோதனை வந்தது.​ கூகுள் க்ரோம்,​​ பயர்ஃபாக்ஸ் போன்ற உலவிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில்,​​ இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இல்லாத விண்டோûஸ வழங்குமாறு மைக்ரோசாஃப்டுக்கு உத்தரவிடப்பட்டது.​ அதன்படி விண்டோஸ்-7 ஐரோப்பிய பதிப்பில் மட்டும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் கிடையாது.​ தேவைப்படுவோர் இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கடந்த சில ஆண்டுகளாகவே போட்டி உலவிகளால் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு ஐரோப்பிய யூனியனின் முடிவு பேரிடியாக அமைந்துவிட்டது.​ அண்மையில் வெளியான கணிப்புப்படி,​​ உலக அளவில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைப் பயன்படுத்துவோரின் அளவு 60 சதவீதத்துக்கும் கீழே சரிந்திருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.​ அதே நேரத்தில் பயர்ஃபாக்ஸ் மற்றும் கூகுள் க்ரோம் ஆகியவை முறையே சுமார் 25 மற்றும் சுமார் 10 சதவீத பயனாளர்களை ஈர்த்திருக்கின்றன.​ இது அதிரடியான மாற்றம்.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் வீழ்ச்சிக்கு,​​ பாதுகாப்புக் குறைபாடு ஒரு முக்கியக் காரணமாகும்.​ இது தவிர,​​ அலட்சியம் காரணமாக மேம்பாட்டுப் பணிகளுக்குக் குறைந்த அளவு நிதி ஒதுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.​ இதனால்,​​ நாள்தோறும் புதுமைகளைப் புகுத்திவரும் பயர்ஃபாக்ஸ் மற்றும் க்ரோம் ஆகியவற்றைத் தேடி விவரம் தெரிந்தவர்கள் செல்லத் தொடங்கிவிட்டனர்.​ இதே வேகத்தில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் வீழ்ச்சி தொடருமானால்,​​ இன்னும் ஆறேழு ஆண்டுகளில் நெட்ஸ்கேப் நேவிகேட்டர் போல முற்றிலுமாக ஒழிந்துவிடும் என நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.

ஆனால், ​​ இந்த விவரமெல்லாம் மைக்ரோசாஃப்டுக்குத் தெரியாதவையல்ல.​ தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொண்டிருக்கும் அந்நிறுவனம்,​​ அதிருப்தியில் இருக்கும் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் -​ 9 பதிப்பை எச்டிஎம்எல்5 என்கிற வெகுநவீனத் தொழில்நுட்ப வசதியுடன் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறது.​ ப்ளாஷ் விடியோவுக்கு மாற்றாக இந்தத் தொழில்நுட்பம் இருக்கும் என்பதால்,​​ மக்கள் மீண்டும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்குத் திரும்புவார்கள் என மைக்ரோசாஃப்ட் நம்புகிறது.​ இது ஒருவேளை ஓரளவு சாத்தியமாகலாம்.​ ஆனால்,இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்ததைப் போல ஏகபோகம் என்பதெல்லாம் நடக்காது.​
..
..
..

Monday, May 17, 2010

இணையத்தில் தொலையும் பொழுது!

வீட்டுச் சாவியைத் தெருவில் தொலைத்துவிட்டு கூகுளில் தேடும் காலம் இது. நமது இருப்பைக்கூட ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. வலைப்பூக்களும் அவற்றுக்கான பின்னூட்டங்களும்தான் பலருக்கு முகவரியே.

இன்னும் பலருக்கு வேலையே இணையத்தில்தான். அந்தக் காலம் போல வழக்கமான 8 மணி நேர வேலை என்றில்லாமல், வீட்டிலிருந்தபடியே இணையத்தில் வேலை செய்ய முடிகிறது.  அந்த அளவுக்கு இணையம் நம்முடன் பின்னிப் பிணைந்திருக்கிறது.

அங்கேயிங்கே சுற்றாமல் நல்ல பிள்ளையாக இருக்கும்வரை எல்லாம் சரிதான். இல்லாவிட்டால் நேரமும் வேலையும் கெட்டுப் போகும். வேலை செய்ய வேண்டிய நேரத்தில் "யூ ட்யூபிலும்' "ஆன்லைன்' ஆட்டங்களிலும் நேரத்தைத் தொலைத்துவிட்டு மன அழுத்தத்தில் ஆழ்ந்திருக்கும் இளைஞர்கள் அதிகரித்து வருகின்றனர். ஒன்று அவர்கள் வேலையிழப்பார்கள் அல்லது பொருளைத் தொலைப்பார்கள். இந்த மாதிரியான வலிகளையும் இதர அழுத்தங்களையும் தவிர்ப்பதற்கு, இணையத்தில் செலவிடும் நேரத்தைத் திட்டமிடுவதே சரியான வழி.

நேரத்தை நிர்வகிக்கும் உத்திகளில் இன்றைக்கு மொபைல் போனும் இணையமும் முக்கிய இடம் பிடிக்கின்றன.

இணையத்தில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. சில தகவல்கள் நம்மைத் தேடி வருகின்றன. இ-மெயில் வழியாகவும், வலைப்பூக்கள் உள்ளிட்ட இன்னபிற விவாத மேடைகள் வழியாகவும் தேவையான, தேவையற்ற தகவல்கள் நம்மைக் கடந்து போகின்றன. ஒரு இ-மெயில் சுவையான, பரபரப்பான, சுண்டி இழுக்கும் தலைப்புடன் வருகிறதென்றால், அதைத் திறந்து பார்க்காமல் நம்மால் இருக்க முடிவதில்லை.

தேவையானதா, தேவையற்றதா என்பது நமது புத்திக்கு எட்டும் முன்பே இ-மெயிலைத் திறந்து விடுகிறோம். கண்ணைக் கவரும் படங்கள், இழுத்துச் செல்லும் நகைச்சுவை, அனாவசியத் தகவல்கள், மொக்கைக் கதைகள் என நேரம் போகிறது. இதுபோதாதென, நாம் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெற  அதைப் "பார்வார்ட்'  செய்வது வேறு.

இ-மெயில் சேவை மற்றும் சமூக வலைச் சேவை செய்யும் நிறுவனங்களெல்லாம் இப்போது இலவச இணைப்பாக அரட்டைப் பெட்டி வசதியையும் தந்திருக்கின்றன. இதனால், ஆன்லைனில் இருப்பவர் யார் என்பதைக் கண்டறிந்து அரட்டை தொடங்கிவிடும். எதிரே இருப்பவர் ஏதாவது முக்கிய அலுவலில் இருக்கிறாரா, இல்லை ஆனந்த சயனத்தில் இருக்கிறாரா என்பதெல்லாம் இந்த அரட்டைக்குப் பொருட்டேயில்லை.

ஹாய் எனத் தொடங்கி பை என முடிப்பதற்குள் குறைந்தது அரைமணி நேரம் வெட்டியாகக் கழிந்துவிடும். வேலை நெருக்கடிகள் வரும்போதுதான் இதெல்லாம் நம் மூளைக்கு உரைக்கும்.

இணையதளங்களில் மேயும்போதும், பல சுவாரசியமான விஷயங்கள் நம்மைக் கடந்து செல்லும். பாப் அப் எனப்படும் திடீர் விரிவுத் திரைகள் மூலமாகவோ, கவர்ச்சி விளம்பரங்கள் மூலமாகவோ அவை வரலாம். உண்மை என்னவென்றால் கவர்ச்சியாக வரும் இவையெல்லாம் பெரும்பாலும் போலியானவைதான்.

ஏதோ கெட்ட உள்நோக்கத்துடன் வரும் இவற்றையெல்லாம் தொடர்ந்து செல்வதைப்  போல முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. இதுபோன்ற இழுத்துச் செல்லும் இணைப்புகளைத் தொடர்ந்து செல்வது நேரம் விரையத்துடன், தகவல் திருட்டுக்கும் வழி வகுக்கும்.

"மல்டி டாஸ்கிங்' எனப்படும் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது இன்னும் ஆபத்து. நண்பர்களுடன் அரட்டை, வலைப்பூக்களை வாசிப்பது, குழு விவாதங்களில் பங்கேற்பது, இணைய விளையாட்டுக்களை ஆடுவது என மூளை குழம்பிப் போகும் அளவுக்கு அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்து கொண்டிருப்பார்கள். எல்லாவற்றையும் முடித்துவிட்டு பணி செய்யலாம் என்று எண்ணும்போது, கண்களும் மூளையும் ஒத்துழைக்காது. நேரமும் இருக்காது.

இணையத்தில் தேவையில்லாமல் நேரத்தைத் தொலைப்பது என்பது, பணிகளை மட்டுமல்ல குடும்பத்தையும் பாதிக்கும். எந்நேரமும் கணினியும் இணையமுமாக இருக்கும் தந்தையையும் தாயையும் பார்த்துக் குழந்தைகள் மன உளைச்சலுக்கு உள்ளாகக் கூடும். கணவன் - மனைவிக்கு இடையே நெருக்கம் குறையும். உறவினர்களையும் நண்பர்களையும் இழக்க வேண்டியிருக்கும். 

இணையம் என்பது நேரம் கொல்லும் கண்டுபிடிப்பல்ல. எண்ணற்ற பயன்கள் அதனுள் ஒளிந்திருக்கின்றன. தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. எது, எப்போது அவசியம் என்கிற தெளிவு மட்டும் இருந்துவிட்டால், எந்த ஆபத்தும் நம்மை நெருங்க முடியாது.

..
.
.

Tuesday, May 11, 2010

ஆட்சி மாறினாலும்...!

சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து வந்த நாடுகளில் வண்ணப் புரட்சிகள் மிகப் பிரபலம்.​ ஜார்ஜியாவின் ரோஸ் புரட்சியும்,​​ உக்ரைனின் ஆரஞ்சுப் புரட்சியும் அந்தந்த நாடுகளில் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தின.​ ஆசியாவுக்கு வெளியே செக்கோஸ்லாவியாவில் நடந்த வெல்வெட் புரட்சியும் இந்த வரிசையில் சேரும்.​ பொதுவாக அமைதியாகத் தொடங்கும் இந்தப் புரட்சிகள் சில நேரங்களில் வன்முறையாகவும் உருமாறியிருக்கின்றன.​ ஆயினும் பொதுமக்களின் பேராதரவு இந்தப் புரட்சிகளுக்கு எப்போதுமே இருந்திருக்கிறது.

கிர்கிஸ்தானிலும் இப்படியொரு புரட்சி கடந்த 2005-ம் ஆண்டில் நடந்தது.​ அப்போதைய அதிபர் அஸ்கார் அகயேவ் மீதான ஊழல் மற்றும் மோசடிப் புகார்கள்தான் புரட்சிக்கு அடிப்படைக் காரணம்.​ அது தேர்தல் ஆண்டு என்பதால்,​​ எப்படியும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருந்தது.​ ஆனால்,​​ தேர்தல் முடிவுகள் மக்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தன.​ பெரும்பாலான தேர்தல் கணிப்புகளுக்கு மாறாக மீண்டும் அகயேவே வெற்றி பெற்றார்.​ தேர்தலில் அவர் முறைகேடுகள் செய்தார் என எதிர்க்கட்சிகளும் பெரும்பாலான ஊடகங்களும் குற்றம்சாட்டின.​ இப்படிப்பட்ட அதிபரை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக ஏற்பட்டதுதான் ட்யூலிப் புரட்சி.

அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர்களான ரோஸô ஒடுன்பேவா,​​ குர்மன்பேக் பாகியேவ் ஆகியோரின் தலைமையில் நடந்த இந்தப் புரட்சியைத் தாக்குப்பிடிக்க முடியாத அகயேவும் அவரது குடும்பத்தினரும் அண்டை நாடான கஜகஸ்தானுக்குப் பறந்தனர்.​ அதே ஆண்டில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது.​ புரட்சியை முன்னின்று நடத்தியவர்களுள் ஒருவரான பாகியேவ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.​ "மக்களாட்சி மீட்டெடுக்கப்பட்டுவிட்டது;​ ​ இனியெல்லாம் சுபமே' என்று அந்நாட்டு மக்கள் மட்டுமல்ல,​​ உலகமே நம்பியது.​ ஆனால் அந்த நம்பிக்கையை நீண்டகாலம் நீடிக்கவிடும் நல்ல அரசியல்வாதிகள் இந்தக் காலத்தில் இருக்கிறார்களா என்ன?

ஒரே ஆண்டுதான் அந்த ஆட்சிக்குத் தேனிலவு.​ அதன் பிறகு,​​ யார் புரட்சியாளராளராகவும் ஜனநாயகப் பாதுகாவலராகவும் கருதப்பட்டாரோ,​​ அதே தலைவரின் ஆட்சி மக்களுக்குக் கசக்கத் தொடங்கியது.​ எதிர்க்கட்சித் தலைவர்களையும்,​​ அரசியல் கைதிகளையும் படுகொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.​ மகனுக்கு முக்கியப் பொறுப்புகளை வழங்கியதும்,​​ பினாமிகளின் பெயரில் சொத்துகளைக் குவித்ததும் அவருக்கு இருந்த நல்ல பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தின.​ முன்பிருந்ததைவிட நிர்வாகம் சீர்கெட்டது.​ வேலையில்லாத் திண்டாட்டமும்,​​ உணவுப் பற்றாக்குறையும் அதிகரித்தன.​ இதையெல்லாம் சுட்டிக்காட்டி ஆட்சியைக் குறைகூறிய ஊடகங்கள் தடை செய்யப்பட்டன.

2009-ல் அடுத்த அதிபர் தேர்தல் வந்தது.​ அதிருப்தியடைந்திருந்த மக்கள்,​​ ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.​ ஆனால்,​​ வழக்கம்போலவே அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது.​ 78 சதவீத வாக்குகளைப் பெற்று பாகியேவ் மீண்டும் வெற்றிபெற்றார்.​ வெற்றி பெற்ற கையுடன்,​​ பெட்ரோல்,​​ டீசல் விலையையும் மின் கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்தினார்.​ அதுவரை உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்த மக்களை இந்த விலையேற்றம் போராடத் தூண்டியது.​ இந்த ஆண்டின் தொடக்கம் முதலே,​​ அரசுக்கு எதிரான வன்முறைகள் வெடிக்கத் தொடங்கின.​ படிப்படியாகச் சில ஆயுதக் குழுக்களும் களத்தில் இறங்கின.​ மார்ச் இறுதியில் இந்தப் புரட்சி இறுதிக் கட்டத்தை எட்டிய ஒரு சில நாள்களில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்த முறை புரட்சிக்குத் தலைமை தாங்கியவர் ரோஸô ஓடுன்பேவா.​ 5 ​ ஆண்டுகளுக்கு முன் பாகியேவுடன் சேர்ந்து புரட்சி செய்தாரே அதே தலைவர்தான்.​ இப்போது பாகியேவுக்கு எதிராக மக்களைத் திரட்டினார்.​ அரசுக் கட்டடங்கள் அனைத்தும் புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றதும்.​ வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொண்ட பாகியேவ்,​​ வழக்கம்போல கஜகஸ்தானுக்குப் பறந்தார்.​ இப்போது ஓரளவு அமைதி திரும்பியிருக்கிறது.​ நாட்டின் தலைமைப் பொறுப்பை ரோஸô ஏற்றிருக்கிறார்.

இப்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம்,​​ ஜனநாயகத்தை மீட்டெடுப்பதில் மக்களுக்குக் கிடைத்திருக்கும் நிரந்தரமான வெற்றி என உறுதியாகக் கூற முடியாத அளவுக்கு முந்தைய கால அரசியல் மாற்றங்கள் அமைந்திருக்கின்றன.​ அந்நாட்டு மக்கள் ​ கொஞ்சம் ஆசுவாசப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே ஒழிய,​​ புதிய ஆட்சியாளர்கள் மீது முழுமையான நம்பிக்கை வைத்துவிட்டார்கள் என்று கருத முடியாது.

இதுபோன்ற அரசியல் சூழலை மத்திய ஆசியாவின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடலாம்.​ ஊழல் நிறைந்த ஆட்சியாளர்கள்தான் இந்த நாடுகளின் அடையாளம்.​ குடும்ப உறுப்பினர்களை அரசின் முக்கியப் பொறுப்புகளில் அமர்த்துவதுடன்,​​ முக்கியத் தொழில்களையும் கைப்பற்றுவது தங்களது பிறப்புரிமை என்று ஆட்சியாளர்கள் கருதுகின்றனர்.​ ஒருங்கிணைக்கப்பட்ட வலுவான எதிர்க்கட்சிகள் இல்லாததால் ஆட்சியாளர்களைத் தட்டிக்கேட்கவும் ஆளில்லாமல் போகிறது.

இவற்றால் விரக்தியடையும் மக்கள்,​​ தாங்களாகவே வீதியில் இறங்கிப் போராடுகின்றனர்.​ இதெல்லாம் மத்திய ஆசியா முழுமைக்கும் பொருந்தும் என்பதால்,​​ கிர்கிஸ்தானின் இப்போதைய அரசியல் புரட்சிகூட துர்க்மெனிஸ்தான்,​​ கஜகஸ்தான்,​​ உஸ்பெகிஸ்தான்,​​ தாஜிகிஸ்தான் போன்ற நாடுகளுக்குப் பரவக்கூடும் என அரசியல் நிபுணர்கள் சூடாக விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

கிர்கிஸ்தானின் ஆட்சி மாற்றம் உலகம் முழுவதும் பரபரப்பாகியிருப்பதற்கு இன்னொரு முக்கியக் காரணமும் உண்டு.​ ஆப்கானிஸ்தான் போருக்கான அமெரிக்க விமானப்படைத்தளம் கிர்கிஸ்தானில் இருப்பதுதான் அந்த முக்கியக் காரணம்.​ ஆப்கன்போர் முடிந்துவிட்ட பிறகும்,​​ ரஷியா,​​ சீனாவின் எதிர்ப்பையும் மீறி இந்தத் தளம் தொடர்ந்து இயங்கி வருவதும்,​​ ​ ஆட்சிகள் பல மாறினாலும் இந்த படைத்தளத்துக்கான வாடகை ஒப்பந்தத்தை மட்டும் தடைபடாமல் புதுப்பிக்கப்பட்டு வருவதும்தான் உலக அரசியலில் சாமான்யர்களுக்குப் புரியாத ரகசியங்கள்.
..

.

Monday, May 10, 2010

பிரிட்டன்: திரும்பும் வரலாறு!


1970-களின் தொடக்கத்தில் பிரிட்டனின் தொழில்துறை முடங்கிப் போயிருந்தது. இதனால்,  வேலை வாய்ப்பில்லாத ஜனத்தொகை பெருகியது. வாரத்துக்கு 3 நாள்கள் வேலை கிடைப்பதே பெரும் பாக்கியம் என்கிற நிலைக்குத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டிருந்தார்கள்.

அந்தச் சூழலில் 1974-ம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தொழிலாளர் கட்சியும் டோரி கட்சியும் பெரும்பான்மைக்குப் பக்கத்தில் இருந்தன. அப்போது பிரதமராக இருந்த டோரி கட்சியின் எட்வர்ட் ஹீத், சிறுபான்மை அரசை அமைத்தார்.

கூட்டணிப் பேரமும், குதிரைப் பேரமும் படியாததால் அந்த அரசு சில நாள்களிலேயே கவிழ்ந்தது. பிறகு லேபர் கட்சி தலைமையில் சிறுபான்மை அரசு அமைக்கப்பட்டு அதுவும் ஓரிரு மாதங்களிலேயே கவிழ்ந்ததால் நாடு இன்னொரு தேர்தலைச் சந்தித்தது. அந்தத் தேர்தல் லேபர் கட்சிக்கு ஒற்றை இலக்கப் பெரும்பான்மையைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகு நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் ஏதாவது ஒரு கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்திருக்கிறது.

இந்த ஆண்டில், வரலாறு மீண்டும் திரும்பியிருக்கிறது. உலகப் பொருளாதார நெருக்கடி, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் போன்ற பிரச்னைகளில் பிரிட்டன் சிக்கியிருக்கிறது.

1974-ல் இருந்ததைப் போலவே இரு பெரிய கட்சிகளின் மீதும் மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். அந்த ஆண்டைப் போலவே மூன்றாவது கட்சி வாக்குகளைப் பிரித்தது. அந்த வகையில் இந்த ஆண்டுத் தேர்தல் 1974-ம் ஆண்டை ஒத்திருக்கிறது.

இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று எல்லோரும் கணித்திருந்தார்கள். அது நடந்திருக்கிறது. மக்கள் தெளிவான முடிவைத் தரவில்லை. பெரும்பான்மைக்குத் தேவையான 326 இடங்களை எட்டுவதற்கு டோரி கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 20 இடங்கள் தேவை.

மொத்தமுள்ள 650 இடங்களில் அந்தக் கட்சிக்கு 306 இடங்கள் கிடைத்திருக்கின்றன. ஆளும் லேபர் கட்சி 257 இடங்களில் வென்றிருக்கிறது, ஒன்றுக்கு மேற்பட்டோரைக் கூட்டுச் சேர்த்தால் தான் கார்டன் பிரெüன் மீண்டும் டவுனிங் தெருப்பக்கம் போக முடியும்.

அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட லிபரல் டெமாக்ரெட் கட்சி 57 தொகுதிகளில்தான் வென்றிருக்கிறது. தொலைக்காட்சி விவாதங்களில் பிரெüனையும், கேமரூனையும் பின்னுக்குத் தள்ளி, ஹீரோவாக வலம் வந்த லிபரல் டெமாக்ரேட் கட்சியின் தலைவர் க்ளெக்,  தேர்தல் முடிவுகளால் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்.

இருந்தாலும், தமது தயவில்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது என்கிற பெருமையுடன், இரு அணிகளுடனும் பேரம் பேசுவதில் இப்போது மும்முரமாகியிருக்கிறார்.

க்ளெக் எந்தப் பக்கம் சாய்கிறாரோ அந்தக் கட்சிதான் ஆட்சியமைக்க முடியும் என்பதைப் புரிந்து கொண்டிருக்கும் கேமரூன், அமைச்சரவையில் இடம்தருவதாகக் கூறி க்ளெக்கை அழைத்திருக்கிறார். க்ளெக்கும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அதேநேரத்தில், லேபர் கட்சியுடன் பேசப்போவதில்லை எனவும் அவர் கூறிவிடவில்லை. இந்த விஷயத்தில் அவர் பக்குவமாகக் காய் நகர்த்துகிறார். டோரிக்கள் என்ன தருகிறார்கள் என்பதைப் பார்த்த பிறகு, பிரெüன் அணியுடன் பேசலாம் என்பதே அவருடைய திட்டம்.

பிரசாரத்தில் கூறியபடி, தேர்தலில் விகிதாசார வாக்கு முறையை அமல்படுத்த வேண்டும் என்கிற நிபந்தனையை க்ளெக் முன்வைத்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால், கன்சர்வேட்டிவ்  எம்பிக்களில் பெரும்பாலானோர் இதை ஏற்க மாட்டார்கள் எனக் கருதப்படுகிறது. இதனால், குறைந்தபட்சம், விகிதாசார வாக்கு முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து மக்கள் கருத்தறியும் தேர்தலை நடத்த வேண்டும் என்பதிலாவது க்ளெக் கடைசிவரை உறுதியாக இருப்பார்.

ஆனால் ஒப்பந்தம் என்னவாக இருந்தாலும், க்ளெக்கும் கேமரூனும் மட்டுமே தன்னிச்சையாக முடிவெடுத்து விடமுடியாது. மேம்பட்ட ஜனநாயகவாதிகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் பிரிட்டனில் கட்சி எம்பிக்களில் பெரும்பாலானோரால் ஒப்புக் கொள்ளப்படும் முடிவையே எடுக்க முடியும். அதற்கென பிரத்யேகமான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இதுபோக, விகிதாசார வாக்கு முறையை முன்னிறுத்தி தேர்தலைச் சந்தித்த லிபரல் கட்சியை மக்கள் புறக்கணித்திருக்கும்போது, அதே விஷயத்தை ஏற்கலாமா எனவும் டோரிக்களால் கேள்வி எழுப்பப்படுகிறது.

ஆக, லிபரல் டெமாக்ரெட் - கன்சர்வேட்டிவ் இடையே இணக்கம் ஏற்படுவது என்பது எல்லோரும் எதிர்பார்ப்பதுபோல மிக எளிதானது அல்ல.

பிரிட்டன் மரபுப்படி யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆட்சியில் இருக்கும் கட்சியைத்தான் மீண்டும் அரசமைக்கும்படி அரசி அழைப்பு விடுப்பார்.

தங்களால் முடியாது என்று அந்தக் கட்சி கூறினால்தான் அடுத்த கட்சிக்கு வாய்ப்பு. பிரெüனுக்கு அப்படியொரு வாய்ப்பு வழங்கப்பட்டால், ஆட்சி அமைத்துக் கொண்டு வேறு சில கூட்டல் கழித்தல் கணக்குகளுடன் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு அவர் முயற்சிக்கூடும்.

ஆனால், இதற்கெல்லாம் வெகு முன்பாகவே, டோரி கன்சர்வேட்டிவ் கட்சியும், லிபரல் டெமாக்ரேட் கட்சியும் இறுதி ஒப்பந்தத்துக்கு வந்துவிட்டால், தார்மிக அடிப்படையில் பிரெüன் ராஜிநாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை. இந்தக் கணிப்புகளையெல்லாம் தாண்டி, பெரிய கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, லிபரல் டெமாக்ரெட் கட்சியே ஆட்சியமைக்க உரிமை கோரினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஜனநாயகத்தில் நடக்க முடியாததென்றோ ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றோ ஏதாவது இருக்கிறதா என்ன?

..
..

கிருபாநந்தினியின் அதிர்ச்சிப் பதிவு!

கிருபாநந்தினி எழுதியிருக்கும் அதிர்ச்சிப் பதிவு, பலருக்குள் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும் எப்படி ரியாக்ட் செய்வதென்று தெரியவில்லை.

http://padithurai.blogspot.com/2010/05/blog-post.html

...

Tuesday, May 04, 2010

பார்வதியம்மாளைத் தீண்டும் அரசியல்!

அரசியல் என்பது வேறுவகையான ஆட்டக்களம். வழக்கமான ஆட்ட விதிகள் அங்கு செல்லுபடியாகா. ஒருவருக்குப் பொருந்தும் விதி மற்றவருக்குப் பொருந்தாது. ஒரு ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட சட்டம், எல்லா ஆட்டத்துக்கும் பொருந்த வேண்டும் என வியாக்கியானம் பேச முடியாது. இங்குள்ள நியாங்களே வேறு. குற்றவாளிகளெல்லாம் சேர்ந்து குற்றவியல் சட்டத்தை எழுதுவதும் இங்குதான். ஊதிய உயர்வு கேட்கும் போராட்டத்தை தலைமையேற்று நடத்தும் அரசியல்வாதி, அடுத்த ஆண்டிலேயே அந்தப் போராட்டத்தை அடக்குவதற்கு உத்தரவு போடுவார். இவர் நல்லவர், அவர் கெட்டவர் என்று பிரித்துக் கூறமுடியாது. அந்த மாதிரியான பகுப்பே இங்கு கிடையாது. அப்படிப் பகுத்துக்கொள்வது நம் முட்டாள்தனம். இது காலம்காலமாக இருக்கும் நியதி.

இப்படிப்பட்ட அரசியல்வாதிகளிடம்தான் பிரபாகரன் சிக்கியிருந்தார். அவரைக் கொண்டு பலவகையான ஆட்டங்களை தமிழக அரசியல்வாதிகள் ஆடிக் களைத்துவிட்டனர். இப்போது அவரது தாயாரைக் கொண்டு புதிய ஆட்டம்.

பார்வதியம்மாளுக்குச் சிகிச்சையளிப்பதோ அல்லது அவரைத் தமிழகத்தில் வைத்துப் பத்திரமாகப் பாதுகாப்பதோதான் நம்மவர்களின் நோக்கம் என்று யாராவது கூறினால், அவர் வேற்றுக் கிரகவாசியாகத்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் இலவசங்களில் மயங்கி புத்தியை அடகு வைத்தவராக இருக்க வேண்டும்.

அந்த அம்மையாருக்குச் சிகிச்சையளிப்பது என்பது மிகவும் நேர்மையாகச் செய்ய வேண்டிய விஷயம். தமிழகத்தில்தான் சிகிச்சையளிக்க வேண்டும் என்று உறுதியான பிறகு, இப்போதிருக்கும் அரசியல் சூழலில், முதல்வரிடம் மட்டும் அனுமதி கேட்டாலே போதும். ஆனால், அது செய்யப்படவில்லை. சரி, இலங்கையிலிருந்து நேரடியாகவே இந்தியாவுக்கு வந்திருக்கலாம். அதுவும் இல்லை.

மலேசியாவில் இருந்து தமிழக அரசுக்கு தற்போது மெயில் அனுப்பியதாகக் கூறப்படுகிறதே, அந்த மெயிலை அப்போதே அனுப்பியிருக்கலாம். ஆனால், டீக் குடித்தாலும், தீக்குளித்தாலும் வீராவேசம் பேசித் திரிவோரின் கையில் விவகாரம் போயிருக்கிறது. அதுதான் இத்தனை குழப்பத்துக்கும் காரணம்.

உண்மையிலே, சிகிச்சை மட்டுமே நோக்கமென்றால், தற்போது தமிழக அரசு செலவிலேயே தரப்படும் சிகிச்சையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசு தரப்பு அரசியலும் எதிர்தரப்பு அரசியலும் எந்த வகையிலும் குறைந்ததில்லை. முதல்பத்தியில் கூறப்பட்ட எல்லா இலக்கணங்களும் இருதரப்புக்குமே பொருந்தும். ஆனால், இப்போதைய உடனடித் தேவை சிகிச்சைதான்.

உண்மையிலேயே அந்த அம்மையாரின் மேல் அக்கறைகொண்டிருப்போர் இந்த வழிகாட்டுதலைத்தான் அவருக்குத் தருவார்கள். இல்லையென்றால், சில அரசியல்வாதிகளின் தொலைந்துபோன புகழை மீட்பதற்கும், தமிழகப் புலனாய்வுப் பத்திரிகைகளில், உணர்ச்சி மயமான கண்ணீர்க் கட்டுரைகளை எழுதுவதற்கும் மட்டும்தான் அந்த அம்மாளின் பெயர் பயன்படும்.

....
..
..