Thursday, April 29, 2010

என்ன ஆனார் புலிகளின் நண்பர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்?

எழுந்திருக்கும் சந்தேகம் பெரும் விவகாரமானது என்பதால் கொஞ்சம் தயக்கத்துடனும் அச்சத்துடனுமே எழுதவேண்டியிருக்கிறது.

தற்கால அரசியல்வாதிகளில் போராளிகள் என்று சொல்லிக்கொள்ளக்கூடிய தகுதி ஒருசிலருக்கு மட்டுமே உண்டு. அவர்களில் ஒருவர்தான் ஜார்ஜ் பெர்னாண்டஸ். 1960-களிலேயே இந்தியாவைக் கலக்கியவர். அவரது தலைமையேற்கும் பண்பு பிறருடன் ஒப்பிட முடியாத அளவுக்குப் பெருமை கொண்டது.மாணவர் அமைப்புகளிலும் தொழிற்சங்கங்களிலும் தலைவராக இருந்து புரட்சி செய்திருக்கிறார்.

இந்திரா காந்தியை நடுநடுங்கச் செய்தவர். கோக கோலா மற்றும் ஐபிஎம் போன்ற நிறுவனங்களை நாட்டைவிட்டு வெளியேறச் செய்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக விடுதலைப் புலிகளையும் பர்மிய போராளிகளையும் வெளிப்படையாக ஆதரித்தவர்.

அப்படிப்பட்ட அரசியல்வாதி, அதுவும் கிறித்துவர், தீண்டத் தகாத கட்சியாகக் கருதப்பட்ட பாஜகவுடன் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் பல தேர்தல்களைச் சந்தித்திருக்கிறார். வாஜ்பாய் அரசில் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.

"இந்தியாவின் எதிரி சீனா" எனத் துணிச்சலுடன் சுட்டிக்காட்டிய இரண்டாவது தலைவர் அவர். என்ன காரணத்தாலோ, அவர் மீது "சவப்பெட்டி ஊழல்" சுமத்தப்பட்டது. தெஹல்கா என்கிற "புலனாய்வுப்" பத்திரிகை இவர் மீது ஆயுதபேர ஊழலைச் சுமத்தியது. இந்திய மக்களும் அதை நம்பினார்கள். சவப்பெட்டியிலுமா ஊழல் என்கிற கவர்ச்சிகரமான கேள்வி மக்களைக் கிறங்கடித்தது. மக்களவையில் அவர் பேச எழுந்திருக்கும்போதெல்லாம், காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையைவிட்டு வெளியேறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

எல்லாவகையான அரசியல்வாதிகளையும் கையாளத் தெரிந்திருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கு தனக்கு எதிரான காங்கிரஸின் சதியை முறியடிக்க முடியவில்லை. அவர் பதவியில் இருக்கும்வரை ஒரு புழுவைப் போலத்தான் நடத்தப்பட்டார். இத்தனைக்கும் அவர் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர். அந்தத் துருப்புச் சீட்டை அவர் இன்று வரைக்கும் பயன்படுத்தவில்லை என்பதும் ஆச்சர்யம்தான்.

ஒருவேளை அவர் தொடர்ந்து பதவியில் இருந்திருந்தால், இலங்கையிலும், பர்மாவிலும் நிலைமை வேறு மாதிரியாகியிருக்கும். சீனாவும் வாலைச் சுருட்டிக் கொண்டிருக்கும்.


கடந்த தேர்தலின்போது, உடல்நிலையும் மனநிலையும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டு பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளாலும் புறக்கணிக்கப்பட்டார். சுயேச்சையாக நின்று தோற்றுப் போனார். அதன்பிறகு மனநிலை சரியில்லாமல் போய்விட்டதாகச் செய்திகள் வந்தன.

எல்லா அரசியல் கட்சிகளாலும் ஒருகாலத்தில் விரும்பப்பட்ட ஒரு மாபெரும் போராளி இப்படி முகவரி இல்லாமல் ஆக்கப்பட்டதற்கு பின்னணியில் சர்வதேசச் சதி ஏதும் இல்லாமலா இருக்கும்?
,,
..

Tuesday, April 27, 2010

அழகிரியும் "கார்ப்பரேட் மக்களாட்சியும்"

இந்தியாவின் மக்களாட்சி கொஞ்சம் கார்ப்பரேட்தனமானது. நாடாளுமன்றத்தின் மக்களவைக்குச் செல்ல வேண்டியவர்கள் அனைவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும். ஆனால், பிரதமரோ மற்ற அமைச்சர்களோ தேர்தலில் போட்டியிட வேண்டும் என்கிற அவசியமில்லை. அவர்கள் "நியமிக்கப்"படுகிறார்கள். தேர்தலில் அதிக இடங்களைப் பிடிக்கும் கட்சி, தனக்குப் பிடித்தமானவர்களை இந்தப் பதவிகளில் அமர்த்திக் கொள்ள முடியும். தற்போதைய நிலவரப்படி, பிரதமரும் இன்ன பிற முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் அமைச்சர்களும் இப்படிப் புறவாசல் வழியாக வந்தவர்கள்தான். இதுபோக, நாட்டின் தலைவரும், துணைத் தலைவரும்கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியமில்லை. அப்படியானால் இது எந்த வகையான மக்களாட்சி? முழுமையான நாடாளுமன்ற நடைமுறையுமல்ல, முழுமையான அதிபராட்சி நடைமுறையுமல்ல.

பெரும்பாலான நாடுகள், இதுபோன்ற காலாவதியான நடைமுறைகளை மாற்றத் துணிந்திருக்கின்றன. சில நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் அதற்கான அறிகுறிகளே தெரியவில்லை. இன்னும் எத்தனை காலம்தான் நியமிக்கப்படுவோரைத் தலைவர்களாகக் கொண்டு நம் நாடு இயங்க வேண்டுமோ தெரியவில்லை?ஆனாலும் குடியரசாகி இத்தனை ஆண்டுகளில் பெரிய அளவிலான ஜனநாயக நெருக்கடி ஏற்படவில்லை என்பதால், இந்த நடைமுறையை வேறு வழியில்லாமல் நாம் புகழ வேண்டியிருக்கிறது.

நமது மக்களாட்சி நடைமுறையில் உள்ள இன்னொரு மிகப்பெரும் பலவீனம் அழகிரி விவகாரத்தில் வெளியே தெரியத் தொடங்கியிருக்கிறது. மக்களாட்சி என்பதன் அடிப்படையே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சி செய்ய வேண்டும் என்பதே. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அழகிரி, காபினட் அந்தஸ்து பெற்ற அமைச்சராக இருப்பதற்கு ஏன் இத்தனை முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன.

அழகிரி எப்படி வெற்றி பெற்றார், அவர் எப்படிப்பட்டவர், அவரது பின்புலம் என்ன என்பன போன்ற ஆராய்ச்சியெல்லாம் இங்கு தேவையில்லை. ஆங்கில அறிவு குறைவு என்கிற ஒரே காரணத்துக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை அமைச்சர் பதவிக்குத் தகுதியானவரில்லை என்று ஏளனம் செய்வது எந்த விதத்தில் நியாயமாக முடியும்?

வட மாநிலங்களில் இருந்து அமைச்சர்களாக்கப்பட்ட எத்தனையோ பேர் ஆங்கில வாசனையே இல்லாமல், "திறம்பட" செயல்பட முடிகிறது என்றால், அழகிரியால் செயல்பட முடியாதா? அல்லது அழகிரிக்கு நிர்வாகத் திறன் இல்லையென்று கூறிவிட முடியுமா? அவருடைய ஒரே பிரச்னை ஆங்கிலம்தான் என்றால், அதைச் சரிப்படுத்த முனையாமல் தொடர்ந்து ஏளனம் செய்வதிலேயே வடநாட்டுக்காரர்கள் குறியாக இருப்பதன் மர்மம் என்ன? நாம் என்ன செய்கிறோம் என்பதையே அறியாமல் தமிழ்நாட்டுக்காரர்களும் அவர்களுடன் சேர்ந்து ஒத்து ஊதுவது அப்பாவித்தனம் இல்லையா?

கார்ப்பரேட் எண்ணம் கொண்டவர்கள் அமைச்சர்களாக இருப்பதால்தான் நாட்டில் நக்சலைட் எண்ணம் பரவத் தொடங்கியிருக்கிறது. தற்காலத்தில் அமைச்சர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானோர், நாட்டை ஒரு கம்பெனி மாதிரி நடத்துவதால்தான், புள்ளிவிவரப்படி நாடு முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையிலும் அடித்தட்டு மக்கள் தொடர்ந்து துன்பப்படுகிறார்கள். இந்தக் "கார்ப்பரேட் மக்களாட்சி" கலாசாரம் முடிவுக்கு வர வேண்டுமானால், அமைச்சராவதற்கு, ஆங்கிலம் அவசியம் என்கிற சதியை முறியடிக்க வேண்டும். இது அழகிரிக்கு வக்காலத்து வாங்கும் முயற்சியல்ல. அடிப்படை மாற்றத்துக்கான முயற்சி.

இதில் விரிவாக விவாதிப்பதற்கு இன்னும் நிறைய இருக்கிறது.

..
.

Sunday, April 25, 2010

பிரிட்டனின் ஒபாமா?

மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒபாமாவைப் பற்றிக் கேட்டால் யாருக்காவது தெரிந்திருக்குமா? ஏதோ புதிய பெயர் என்றுதான் பெரும்பாலானோர் கூறியிருப்பார்கள். ஹிலாரி கிளிண்டனுக்கு எதிரான போட்டியில் நின்றபோதுகூட அவர் வெற்றிபெறுவார் என்று யாரும் கருதவில்லை.

அமெரிக்கர்கள்கூட அவரைப் பற்றி மிகத் தாமதமாகத்தான் தெரிந்து கொண்டார்கள். ஆனால், குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு அரசியல், பொருளாதார பின்புலம் இல்லாமலேயே உலக வல்லரசின் அதிபராக முடியும் என்று அவர் நிரூபித்தார். இதற்காக அவர் பயன்படுத்திய ஆயுதம் பிரசாரம். மாற்றம் தேவை என்கிற மனநிலையை மக்களிடம் ஏற்படுத்தி தம் பெயரை உலகெங்கும் உச்சரிக்க வைத்தார் அவர். மக்களை மட்டுமல்லாமல், கென்னடி குடும்பத்தையே கூட மந்திரத்தால் தம் பக்கம் கட்டி இழுத்தார். அவர் அதிபரானதற்கு பிரசார உத்தியைத் தவிர வேறெந்த உடனடிக் காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை.

இப்படியொரு கவர்ச்சிப் பிரசார நட்சத்திரம் ஒன்று பிரிட்டன் தேர்தலிலும் களம் இறங்கியிருக்கிறது. அவரது பெயர் நிக் க்ளெக். லிபரல் டெமாக்ரேட் கட்சியின் தலைவரான இவருக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகரித்து வருகிறது.

க்ளெக்கின் வருகையால் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக பிரிட்டன் அரசியலை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் லேபர் கட்சியும் ஆதிகாலத்து டோரி கட்சியின் மறுஉருவான கன்சர்வேடிவ் கட்சியும் அச்சத்தில் மூழ்கியிருக்கின்றன.

வரும் 6-ம் தேதி பிரிட்டனில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. கடந்த தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சிக்கு இந்தத் தேர்தல் இன்னொரு வாழ்வா சாவா போராட்டம். பிரதமர் கார்டன் பிரெüனின் லேபர் கட்சிக்கு இதுவொரு அக்கினிப் பரீட்சை. பிளேரிடமிருந்து நேரடியாக பிரதமர் பதவியைக் கைப்பற்றிக் கொண்ட பிரெüனுக்கு தமது செல்வாக்கை நிரூபித்தாக வேண்டிய நிர்பந்தம். க்ளெக்கின் லிபரல் டெமாக்ரெட் கட்சியைப் பொருத்தவரை, வரலாற்றில் இடம்பிடிக்க ஒரு வாய்ப்பு. இந்த மூன்று கட்சிகளின் தலைவர்களும் தேர்தல் பிரசாரத்துக்கு தலைமை வகிப்பது இதுதான் முதல் முறை என்பது இன்னொரு விசேஷம்.

தேர்தலையொட்டி, அண்மையில் மூன்று கட்சித்

தலைவர்களும் கலந்து கொண்ட தொலைக்காட்சி நேரடி விவாதத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் லேபர் கட்சித் தலைவரும் பிரதமருமான கார்டன் பிரெüனும், கன்சர்வேடிவ் கட்சியைத் தலைவர் ஜேம்ஸ் கேமரானும் லிபரல் டெமாக்ரேட் கட்சித் தலைவர் க்ளெக்கும் கலந்து கொண்டனர்.

இதில், பிரெüனையும், கேமரானையும் கிளெக் பின்னுக்குத் தள்ளினார். அதாவது, க்ளெக்கின் பேச்சுக்கு மக்களிடையே அதிக ஆதரவு இருந்ததாக அறிவிக்கப்பட்டது. பிரெüனும் கேமரானும்கூட தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இந்த வெற்றியைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் பத்திரிகைகள் க்ளெக்கை, வின்ஸ்டன் சர்ச்சிலுடனும், ஜான் கென்னடியுடனும் ஒப்பிடத் தொடங்கிவிட்டன.

இந்த தொலைக்காட்சி விவாதத்தின் முடிவுகள், பிரிட்டன் அரசியலைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்திருக்கிறது. தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் கருத்துக் கணிப்புகளின்படி, மற்ற இரு கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு க்ளெக் தலைமையிலான லிபரல் டெமாக்ரெட் கட்சி ஒட்டுமொத்தமாக அதிக வாக்குகளைப் பெறும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படி நடந்தால், அது ஒரு நூற்றாண்டுச் சாதனையாகும்.

இராக் போர் மற்றும் அந்நாட்டில் துருப்புகளை நிலைகொள்ளச் செய்திருப்பது ஆகியவற்றுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே லேபர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சிகள் கொண்டிருக்கின்றன.

 ஆனால், லிபரல் டெமாக்ரெட் கட்சி இதற்கு நேரெதிரானது. தொடக்கம் முதலே இராக் போரில் பிரிட்டன் ஈடுபடுவதை எதிர்த்து வருவது, அந்தக் கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியிருப்பதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

இராக் விவகாரத்தைப் போலவே, விகிதாசார வாக்குமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற யோசனையும் பிரசாரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. எல்லாக் கட்சிகளும் இதை வலியுறுத்தினாலும், பல ஆண்டுகளாகவே தேர்தல் சீர்திருத்தம் கோருவதில், முன்னோடியாக இருப்பதால் லிபரல் கட்சிக்கு இது கூடுதல் வாக்குகளைப் பெற்றுத் தர உதவும் எனக் கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு வெளியான எம்.பி.க்களின் அநாவசியச் செலவு விவகாரமும் லிபரல் கட்சிக்கு ஆதரவாகவே இருக்கிறது. சொந்தக் கடன்களை அடைப்பதற்கும், களியாட்டங்களில் கலந்து கொள்வதற்கும் அரசுப் பணத்தை எம்பிக்கள் செலவு செய்ததாக எழுந்த பிரச்னையை அடுத்து, மக்களவைத் தலைவரே ராஜிநாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

லேபர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் அதிக அளவில் இந்த விவகாரத்தில் சிக்கிய நிலையில், லிபரல் டெமாக்ரெட் கட்சிக்கு பெரிய பாதிப்பில்லை. இது கட்சிக்கு நல்லபெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது.

லிபரல் டெமாக்ரெட் கட்சிக்கு இன்னொரு சாதகமான விவகாரம் பொருளாதார மந்தம். நாட்டின் பொருளாதாரம் சரிந்ததில் லேபர் கட்சிக்கும், கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் பங்கிருக்கிறது என்று மக்கள் நம்புகிறார்கள். அந்த வகையில் இருகட்சிகளின் எதிர்ப்பு வாக்குகள் லிபரல் கட்சிக்குக் கிடைக்கும்.

எனினும், ஒட்டுமொத்த வாக்கு சதவீதத்தைக் கொண்டு நாடாளுமன்றத்தில் அதிக இடங்கள் கிடைக்கும் என்று கூற முடியாது. பிரிட்டன் தேர்தல் இந்தியாவைப் போன்றதுதான். தொகுதிவாரியாக நிறுத்தப்படும் வேட்பாளர்களை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்த முறைப்படி, நாடு முழுவதும் பதிவாகும் வாக்குகளில் அதிக பங்கைப் பெற்ற கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்பதில்லை. அதேபோல் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்குப் பெற்ற கட்சித் தலைவரின் கட்சி தேர்தலில் வெற்றிபெறும் என்றும் கூறமுடியாது.

உதாரணமாக கடந்த 2005-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் லேபர் கட்சி 35.3 சதவீத வாக்குகளைப் பெற்றது. கன்சர்வேடிவ் கட்சி 32.3 வாக்குகளைப் பெற்றது இரு கட்சிகளுக்கும் இடையேயான வித்தியாசம் வெறும் மூன்று சதவீதம்தான்.

ஆனால், நாடாளுமன்றத்தில் லேபர் கட்சிக்கு 356 இடங்கள் கிடைத்தன. கன்சர்வேடிவ் கட்சி வெறும் 198 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிக இடங்களைப் பெற வேண்டுமானால், நாடு முழுவதும் செல்வாக்குப் பெற்றிருக்க வேண்டும். லிபரல் டெமாக்ரெட் கட்சிக்கு பரந்த செல்வாக்கு இல்லை எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், தொங்கு மக்களவை அமைந்தால் தேர்தலுக்குப் பிறகு லேபர் கட்சியுடன் க்ளெக் கட்சி கூட்டணி வைக்கலாம் என்கிற சந்தேகமும் மக்களிடையே இருக்கிறது. அதுவும் கட்சியின் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்தக் கணக்கை வைத்துப் பார்த்தால், க்ளெக் பிரதமராவார் என்பது கொஞ்சம் அதிகப்படியான எதிர்பார்ப்பாகத்தான் தெரிகிறது.

ஆனால், பிரசார உத்திகளைக் கொண்டு கடந்த தேர்தலைக் காட்டிலும் கூடுதலான இடங்களை க்ளெக்கின் கட்சி வெல்லக்கூடும் எனத் தெரிகிறது. அந்த வகையில் ஒபாமாவுடன் க்ளெக்கை ஒப்பிடலாம். ஒபாமாவின் பிரசாரத்தில் இருந்த துடிப்பையும் வேகத்தையும் க்ளெக்கிடம் காண முடிகிறது. மக்களவைக் கவரும் தீர்வுகளைத் தருவதில் இவர் ஒபாமாவேதான்.

ஆயினும், தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்திருக்கும் நிலையில், மூன்றாவது கட்சியைச் சேர்ந்த ஒபாமா தேவையா என முடிவு செய்ய வேண்டியது பிரிட்டன் மக்கள்தான்.

...
.

Tuesday, April 20, 2010

ஊடகங்களின் வசூல் வேட்டை

ஊடக சுதந்திரமும் அந்தரங்கத்தைப் பாதுகாக்கும் தனிமனித உரிமையும் ஒன்றுக்கொன்று முரணானவை. ஆரோக்கியமான சமூகத்தில் இவ்விரண்டும் சமநிலையுடன் இருக்க வேண்டியது அவசியம். தற்கால அரசியல், பொருளாதார, நாகரிக, தொழில்நுட்ப வளர்ச்சிகளால் இந்தச் சமநிலைக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பது போலத் தெரிகிறது. இதே நிலைமை தொடர்வது ஜனநாயக அமைப்பைக் குலைத்துவிடக்கூடும்.

அச்சு ஊடகங்கள் மட்டுமே இருந்த காலத்தில் கல்வியறிவு பெற்றவர்களிடையே மட்டும்தான் அவை அதிகச் செல்வாக்குச் செலுத்தின. கல்வியறிவு பெறாத பின்தங்கிய மக்களிடம் கருத்துகளை உருவாக்குவதில் அவற்றின் பங்கு மிகக் குறைவாகவே இருந்தது.

நுகர்பொருள்களை வாங்குவது முதல் அரசியல் முடிவு எடுப்பதுவரை எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். அப்போதிலிருந்தே தனிமனித உரிமைக்கும் ஊடகசுதந்திரத்துக்கும் இடையேயான சமநிலை குறித்த விவாதம் உலகமெங்கும் நடந்து வந்திருக்கிறது.

இப்போது மின்னணு யுகத்துக்குள் நுழைந்திருக்கிறோம். ஊடகத்துறையில் தனியார் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் வலுப்பெற்றிருக்கிறது. போட்டிகள் பெருகியிருக்கின்றன. அரசியல் சார்பு ஊடகங்களுக்கு முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.

அரசியல் காரணங்களுக்காக ஊடகங்கள் நசுக்கப்படுவதும், அதேபோன்ற காரணங்களுக்காக அந்தரங்கங்களை அம்பலப்படுத்தி ஊடகங்கள் எதிர்த்தாக்குதல் தொடுப்பதும் வழக்கமான நிகழ்வுகளாகியிருக்கின்றன. பரபரப்பு ஏற்படுத்தி மக்களின் கவனத்தைக் கவர்வதற்காக உண்மை உறுதிசெய்யப்படாத செய்திகள் திணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த சில ஆண்டுகளில் ஊடக சுதந்திரம் பற்றி உரக்க விவாதிக்கப்பட்டு வருகிறது.

பிரிட்டிஷ் ஊடகங்கள் மத்தியில் கிஸ் அண்ட் டெல் என்பது பிரசித்தம். பிரபலமான ஒருவரிடம் நெருக்கமாகப் பழகி, அவரது தவறான நடத்தை, மோசடி, ரகசியங்கள், அந்தரங்க நடவடிக்கைகள் போன்றவை பற்றிய ஆதாரங்களைச் சேகரித்து ஊடகங்களிடம் விற்றுப் பணம் பெறுவதுதான் கிஸ் அண்ட் டெல். பாலியல் ரீதியான ஆவணங்கள் என்றால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும்.

விற்பனை அதிகரிப்பு ரேட்டிங்கில் முதலிடம் போன்றவற்றுக்காக இதுபோன்ற விடியோ, ஆடியோ, புகைப்பட ஆதாரங்களைப் பெற்றுக் கொண்டு பணம் தருவதை உலகின் பல பத்திரிகைகள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. ஆதாரங்களை வெளியிட்டால் லாபம்.  வெளியிடாவிட்டால் அதைவிட அதிகமான லாபம் என்பதுதான் கிஸ் அண்ட் டெல் உத்தியின் சூட்சுமம். கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் முதல் இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி வரை கிஸ் அண்ட் டெல் வலையில் சிக்கிய பிரபலங்கள் பட்டியல் மிக நீளமானது.

இதுபோல, அப்ரூவராக மாறிய குற்றவாளிகள் என்றால் சில ஊடகங்களுக்கு பொக்கிஷம் கிடைத்த மாதிரி. ஏதோ ஒரு காரணத்தால் கூட்டாளியைக் காட்டிக்கொடுக்க முன்வந்த குற்றவாளிகளைக் கொண்டு, பரபரப்புச் செய்திகளை ஊடகங்கள் வெளியிடும்.

முன்னாள் கூட்டாளிகளைப் பற்றியும், சதிச் செயல்கள் மற்றும் அந்தரங்கங்கள் பற்றியும் அவர்கள் கட்டுரை எழுதுவார்கள் அல்லது பேட்டியளிப்பார்கள். தேவைப்பட்டால் டேப் ஆதாரங்களைக்கூட வழங்குவார்கள்.

இதையெல்லாம் வெளியிட்டால் ஓரிரு வாரங்கள் நாடே அச்சத்துடன் கவனிக்கும் .  கட்சி பேதமின்றி அரசியல்வாதிகள் கருத்துச் சொல்வார்கள். இந்தப் பரபரப்பில் விலைவாசி உயர்வையும், வேலையின்மையும் மக்கள் மறந்துவிடுவார்கள்.

அப்ரூவராக மாறியவருக்கு போதுமான புகழ் கிடைப்பதுடன், கணிசமான வருமானத்துக்கும் வழி ஏற்படும். இதுவும் கிஸ் அண்ட் டெல் வகைதான்.

பிரபலங்களை விவாகரத்து செய்தவர்களும், நட்புடன் இருந்து பிரிந்து போனவர்களும்கூட ஊடகங்களின் தேடல் பட்டியலில் உண்டு. அவர்களது முன்னாள் கணவர், மனைவி, நண்பர் பற்றிய அந்தரங்கங்களை வெளியிட்டு சர்ச்சை உருவாக்கப்படும். பின்னர் அதையொட்டிய ஊடக வியாபாரம் அமோகமாக நடக்கும்.

இதற்காக சில ஊடகங்கள் பெரும் பணம் கொடுக்கின்றன. கொடுத்த பணம் ஒன்றுக்குப் பத்தாக கண்டிப்பாக வசூலாகிவிடும். மேலை நாடுகளில் மட்டுமே இருந்த இதுபோன்ற அநாகரிகங்கள், இப்போது இந்தியாவிலும் அவ்வப்போது நடக்கத் தொடங்கியிருக்கின்றன என்பதுதாம் நாம் விழித்துக் கொள்ள வேண்டிய விஷயம்.

அண்மையில் இதுபோன்ற கிஸ் அண்ட் டெல் விவகாரம் நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறது. பிரிட்டனின் நியூஸ் ஆஃப் வேர்ல்டு பத்திரிகையால் பாதிக்கப்பட்ட ஒருவர், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தனிமனித அந்தரங்கங்களைப் பற்றிய செய்திகளை வெளியிடும்போது அதுபற்றி முன் அனுமதி பெறும் வகையில் சட்டம் இயற்றலாம் என்கிற அளவுக்கு விவாதம் நடந்திருக்கிறது.

அப்படியொரு சட்டம் இயற்றப்பட்டால் பணம் கொடுத்து அந்தரங்கங்களை விலைக்கு வாங்குவது குறையக்கூடும் என கருதப்படுகிறது. ஆனால், இந்தியாவில் இதுபற்றிய பெரிய விவாதம் இன்னும் எழவில்லை.

கிஸ் அண்ட் டெல் உத்தி, ஆக்கப்பூர்வமான விஷயங்களைப் பரப்புவதற்கும் உதவக்கூடியதுதான் என்றாலும், வருமானத்தைப் பெருக்குவதற்காக மட்டுமே இப்போது இது பயன்படுத்தப்படுகிறது. எந்த வகையிலும் மக்களுக்குப் பயனளிக்காத அடுத்தவரின் அந்தரங்கத்தை வெளியிடுவதும், அதைக் கொண்டு பேரம் பேசுவதும் ஊடக தர்மத்துக்கு  முற்றிலும் எதிரானது.

அதுவும் திருமண பந்தத்துக்கு மதிப்பளிக்கிற இந்தியா போன்ற நாடுகளில் அடுத்தவரின் அந்தரங்கங்களை வெளியிடுவது, மக்கள் மனங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மக்கள் மத்தியில் கருத்தை உருவாக்கும் மேலான பணியைச் செய்ய வேண்டிய ஊடகங்கள், இப்படி அந்தரங்கங்களை வெளியிட்டுச் சம்பாதிக்கும் நிலைக்குத் தாழ்ந்திருப்பது, ஜனநாயகத்துக்கே ஓர் அபாய எச்சரிக்கை.
..
..

Saturday, April 10, 2010

வலையில் சிக்கும் தலைமுறை!

ஆடுகளை வளர்த்ததற்காக ஓர் ஊழியரை,​​ அமெரிக்க நிறுவனம் அண்மையில் பணி நீக்கம் செய்தது.​ இதென்ன கொடுமை;​ ஆடு வளர்த்தது எப்படிக் குற்றமாகும் என்று எண்ணத் தோன்றும்.​ ஆனால்,​​ அந்த ஊழியர் வளர்த்தது உண்மையான ஆடுகளை அல்ல.​ அவை பொய்யானவை.​ ஆடுகள் வளர்க்கப்பட்டது அலுவலகக் கம்ப்யூட்டரில்.

விஷயம் இதுதான்.​ விடியோ கேம்களின் அடுத்தநிலை இணையத்தில் ஆடப்படும் ஆன்லைன் விளையாட்டுகள்.​ 'விர்சுவல் ரியாலிட்டி' எனப்படும் உண்மை போன்ற மாயைதான் இன்றைய ஆன்லைன் விளையாட்டுகளின் மையக் கரு.

விவசாயம் செய்வது,​​ ஆடு வளர்ப்பது,​​ காட்டு விலங்குகளைப் பராமரிப்பது,​​ ஹோட்டல் நடத்துவது என எல்லாமே ஆன்லைனில் சாத்தியம்.​ ஒரு மணி நேரம்,​​ இரண்டு மணி நேரம் அல்ல,​​ ஆண்டுக்கணக்கில்கூட இந்த ஆட்டங்களை ஆடிக்கொண்டே இருக்க முடியும்.

இந்த ஆட்டங்களில் மூழ்கித் தூக்கத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறது இன்றைய இளைய தலைமுறை.​ இவர்கள் ஓடி விளையாடுவதில்லை.​ உட்கார்ந்து கொண்டோ,​​ படுத்துக் கொண்டோதான் விளையாடுவார்கள்.

'பேஸ்புக்' எனப்படும் சமூக வலைத்தளத்துடன் இணைந்த 'பார்ம் வில்லா' என்ற ஆட்டம்தான் ஆன்லைனில் இப்போது மிகவும் பிரசித்தி.​ விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது இந்த ஆட்டம்.​ இதுவும் ஆண்டுக்கணக்கில் ஆடக்கூடிய ஆட்டம்தான்.​ விதை விற்பனை,​​ மகசூல் அறுவடை,​​ பால் உற்பத்தி,​​ தோட்டப் பராமரிப்பு என உண்மையான விவசாயி செய்ய வேண்டிய பணிகள் அனைத்தும் இந்த ஆட்டத்தில் உண்டு.​ அடிப்படையில் இதெல்லாம் இலவசம்தான் என்றாலும்,​​ நம்முடைய தகவல்களை வணிகரீதியாகப் பகிர்ந்து கொள்வதன் மூலமாகவும்,​​ விளம்பரங்கள் ​ வழியாகவும் இணையதளத்துக்கு வருவாய் கிடைக்கிறது.

தற்போதைய மதிப்பீட்டின்படி,​​ கோடிக்கணக்கானோர் பார்ம் வில்லாவில் விவசாயம் செய்வதாக பேஸ்புக் சொல்கிறது.​ அலுவலக வேலை நேரத்தில் இப்படி விவசாயம் செய்ததால்தான் மேற்சொன்ன நபருக்கு வேலை போனது.

இதுபோன்ற வேறொரு ஆன்லைன் ஆட்டத்தில் மூழ்கி,​​ குழந்தைக்குப் பால் கொடுக்காமல் சாகடித்த தம்பதியைப் பற்றி அண்மையில் செய்தி வெளியாகி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தென்கொரியாவின் சியோல் நகரைச் சேர்ந்த அவர்கள் இருவரும் பிரியஸ் ஆன்லைன் என்ற தளத்தில் மாயக் குழந்தைக்கு பாலூட்டிச் சீராட்டி வளர்த்திருக்கின்றனர்.​ நாள்தோறும் பல மணி நேரம் இண்டர்நெட் மையங்களில் நேரத்தைப் போக்கியிருக்கிறார்கள்.​

அந்த நேரத்தில் 3 மாதமே ஆன அவர்களது சொந்தக் குழந்தை உணவில்லாமல் இறந்து போயிருக்கிறது.​ இது அசாதாரண சம்பவம்தான்.​ ஆனாலும்,​​ ஆன்லைன் ஆட்டங்கள் மக்களை எந்த அளவுக்கு மாயையில் மூழ்கச் செய்யக்கூடிய வலுக்கொண்டவை என்பதைப் புரிந்து கொள்ள இது நல்ல உதாரணம்.

எல்லா ஆன்லைன் ஆட்டங்களுமே மோசமானவை அல்ல.​ கல்விக்காகவும்,​​ மன அழுத்தம் ஏற்பட்டிருக்கும் நேரங்களில் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காகவும் ஒரு சில மணித்துளிகளிலேயே முடிந்துவிடக்கூடிய சில ஆன்லைன் ஆட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன.​ அறிவியல்,​​ கணிதம்,​​ சமூகம் தொடர்பான அறிவை வளர்ப்பதற்குப் பயன்படும் இணைய விளையாட்டுகளும் நிறையவே இருக்கின்றன.

ஆனால்,​​ அவையெல்லாம் மக்களைக் கவர்ந்ததாகத் தெரியவில்லை.​ நாள் கணக்கில்,​​ ஆண்டுக்கணக்கில் அடிமைப்படுத்தக்கூடிய விளையாட்டுகளுக்கும் பாலியல் ரீதியான,​​ வன்முறையைத் தூண்டும் சில விளையாட்டுகளுக்கும்தான் கவர்ச்சி அதிகமாக இருக்கிறது.​ இணையத்தின் மற்ற உள்ளடக்கங்களைப்போல மொழி ரீதியான தடையும் ஆன்லைன் ஆட்டங்களுக்கு இல்லை என்பதால்,​​ மிகவேகமாகவே இவை பிரபலமடைந்து விடுகின்றன.

குழந்தைகள்,​​ இளைஞர்கள்,​​ முதியவர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமே ஆன்லைன் விளையாட்டுகள் இருக்கின்றன.​ நவீன விளையாட்டுகளில் உலகமெங்கும் இருப்பவர்கள் இணைந்து ஆட முடிகிறது.​ கூடவே அரட்டையடிக்கவும் முடியும்.​ வெற்றியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.​ வெற்றி பெற்றவற்றைப் பிறருக்குப் பரிசளிக்கவும்(..?!)​ வசதியிருக்கிறது.​ இவையெல்லாம் மக்களைக் கவர்வதற்கான உத்திகள்.

ஆன்லைன் விளையாட்டுகளை ஆடும் அனைவரும் அவற்றுக்குள் மனதை முடக்கி அடிமையாகப் போய்விடுகின்றனர் எனக் கூற முடியாது.​ ஆனால்,​​ பெரும்பாலான ஆட்டங்களில் அடிமைப்படுத்தும் சூழ்ச்சி வலை பின்னப்பட்டிருக்கிறது.​ அது ஒரு போதை மாதிரி.

ஆட்டத்தைத் தொடங்கிய பெரும்பாலானோர் அவற்றை விட்டுவிட முடியாமல் திணறுகின்றனர்.​ இந்த ஆட்டங்களால்,​​ நேரம் விரையமாகிறது என்பதுடன்,​​ மணிக் கணக்கில் அசைவற்று ஒரே இடத்தில் இருப்பதால் உடல் நலமும் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இணையத்தில் வேறு எத்தனையோ மோசமான அம்சங்கள் நிறைய இருக்கத்தான் செய்கின்றன.​ கவனத்தைக் கவர்ந்து,​​ இழுத்துச் செல்லக்கூடியவை இங்கு அதிகம்.​ ஆனாலும்,​​ ஆன்லைன் விளையாட்டுகள்தான் மக்களின் அடிப்படை மனநிலையையே மாற்றக்கூடிய சக்தி கொண்டவையாக இருக்கின்றன.​ நல்லவை என்கிற போர்வையில் வருவதால் மற்றவற்றுக்கு ஈடான ஆபத்து இதிலும் இருக்கிறது.

இளம் வயதிலேயே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையானவர்கள்,​​ பொறுப்பான விவாதங்களில் பங்கெடுத்துக் கொள்ள முடியாதவர்களாகவும் நடைமுறையில் நட்பை உருவாக்கிக் கொள்ள முடியாதவர்களாகவும் மாறக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.​ ​

இந்த ஆபத்தை உணர்ந்துதான்,​​ பெரும்பாலான பள்ளிகள்,​​ கல்லூரிகளில் இணைய விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றன.​ பணிகளில் சுணக்கம் ஏற்படுவதால் பல நிறுவனங்களும் இவற்றைத் தடை செய்திருக்கின்றன.​ ஆனாலும்,​​ இவைகளால் மட்டுமே ஆபத்தை முழுமையாகப் போக்கிவிட முடியாது.

இணையத்தில் செலவிடும் நேரத்தைத் திட்டமிடுவது குறித்தும்,​​ இணையத்தில் செய்ய வேண்டிய பணிகளை உரிய முக்கியத்துவத்துடன் முடிப்பது குறித்தும் கல்வி நிறுவனங்களிலும்,​​ ஊழியர்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.​ அரசே இதைச் செய்தால் இன்னும் நல்லது.​ ஏனெனில் இது தனிநபரின் பிரச்னையல்ல,​​ தலைமுறையின் பிரச்னை.
..
.