Saturday, April 23, 2011

தந்திரமாக ஒடுக்கப்பட்ட புரட்சி

 அண்ணா ஹஸாரேவுக்குப் பின்னால் நாடே திரண்டது. சிலர் மெழுகுவர்த்தி ஏற்றினார்கள், சிலர் பேரணி நடத்தினார்கள், மிஸ்டுகால் கொடுத்தார்கள், எஸ்எம்எஸ் அனுப்பினார்கள், பேஸ்புக்கிலும் டுவிட்டரிலும் பிரசாரம் செய்தார்கள். துனீஷியாவிலும், எகிப்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய புரட்சிகளுடன் ஊடகங்கள் இதை ஒப்பிட்டன. நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான மனநிலை இருக்கும் தருணத்தில் இப்படிப்பட்ட எழுச்சி அவசியமான ஒன்றுதான் எனப் பேசப்பட்டது. ஹஸôரேயின் விருப்பப்படி புதிய வடிவிலான லோக்பால் சட்டம் வந்துவிடும், ஊழலை ஓரளவுக்காவது ஒழித்துவிடலாம் என்று நாடே நம்பியது.

 செல்போன், இன்டர்நெட், 24 மணி நேர தொலைக்காட்சி என தகவல் தொடர்பு வசதிகள் பெருகிவிட்டதால் ஊழலுக்கு எதிரான உணர்ச்சி நாடு முழுவதும் பரவியது. இதற்குப் பிறகுதான் லோக்பால் மசோதாவை உருவாக்கும் வரைவுக்குழுவில் ஹஸôரே உள்ளிட்ட சமூக ஆர்வலர்களைச் சேர்த்துக்கொள்ள அரசு ஒப்புக்கொண்டது. அவ்வளவுதான், எல்லாக் கோரிக்கைகளும் ஏற்கப்படும்வரை ஹஸôரேயின் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் எனக் கூறி வந்தவர்கள், திடீரெனப் பின்வாங்கினர். அவ்வளவு ஏன், குறைந்தது 7 நாள்கள்வரை தம்மால் உடல்ரீதியாக எந்தப் பிரச்னையுமில்லாமல் உண்ணாவிரதம் இருக்க முடியும் என்ற கூறிவந்த ஹஸôரேகூட, போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துவிட்டது என்று அறிவித்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

 ஒரு குழு அமைக்கப்பட்டது லட்சக்கணக்கானோர் பங்கேற்ற ஒரு போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியா? யார் யாரெல்லாம் இந்த ஊழல் கறைபடிந்த அரசைத் தாங்கிப் பிடிப்பவர்களாக இருக்கிறார்களோ, அவர்களையே உறுப்பினர்களாகவும் தலைவராகவும் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது எந்த வகையில் வெற்றியாகும்? யார்மீதெல்லாம் குற்றம்சாட்ட முற்பட்டோமோ அவர்களேதான் நீதிபதிகளாக அமர்ந்திருக்கிறார்கள். இதை எப்படி வெற்றியென்று கூற முடியும்?

 ஒரு வழக்கமான குழு அமைக்கப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான். மக்கள் தரப்பிலிருந்து 5 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள் என்பதற்காக ஹஸôரே விரும்பியபடியான ஜன் லோக்பால் மசோதா நிறைவேறிவிடும் என்று கனவு காண்பது முட்டாள்தனம். நமது அரசியல்வாதிகளின் தந்திரங்களைப் பற்றித் தெரிந்த யாரும் இப்படிக் கனவு காண மாட்டார்கள்.

 இப்படியொரு குழு அமைக்கப்படுவதற்கு நாடு முழுவதும் பரவிய எழுச்சி தேவையேயில்லை. இதை வெற்றி எனக் கொண்டாடுவதை உண்மையிலேயே ஊழலுக்கு எதிராகப் போராடும் மனநிலையில் இருக்கும் பெரும்பாலானோர் ஏற்கவில்லை. ஹஸôரேயின் உண்ணாவிரதத்துக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து மிகப்பெரிய மாற்றம் வரக்கூடும் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர்.

 ஹஸாரேயையும் அவரது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கேலி செய்வோருக்கும் இது வசதியாகப் போய்விட்டது. ஐபிஎல் போட்டிகளுக்கு டி.வி.பெட்டியின் முன்பு கூடும் கூட்டத்தையும், ஹஸôரேவுக்குப் பின்னால் திரண்ட கூட்டத்தையும் ஒப்பிட்டு இவர்கள் நையாண்டி செய்கிறார்கள். ஐபிஎல்லுக்கும் உலகக் கோப்பை போட்டிக்கும் இடையிலான இடைவேளை இது என்று சிலர் விமர்சிக்கிறார்கள்.

 ஹஸôரே, சாந்திபூஷண் உள்பட வரைவுக்குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. ஒருகட்டத்தில் எல்லோருமே இப்படித்தான் என்கிற தோற்றம்கூட உருவாக்கப்படலாம். இப்படியொரு நிலை ஏற்பட்டிருப்பதுதான் அரசியல்வாதிகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. ஒரு வழியாக தங்களுக்கு எதிரான போராட்டத்தை அரசியல்வாதிகள் நீர்த்துப் போகச் செய்திருக்கிறார்கள்.

 துனீஷியாவிலும், எகிப்திலும் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்தபோது, அவர்களை வழிநடத்த யாருமேயில்லை. ஆனாலும் இலக்கை நோக்கிப் போராட்டம் தொடர்ந்து முன்னேறியது. கடைசிவரை யாரும் ஓயவேயில்லை. அரசியல் சட்டத்தில் சீர்திருத்தம் செய்கிறோம், தேர்தலுக்குப் பிறகு பதவி விலகுகிறோம் என்று அரசியல்வாதிகள் தந்த போலியான உறுதிமொழிக்கு அந்த மக்கள் ஏமாறவில்லை. பதவி விலகும்வரை போராடினார்கள். இறுதியில் வெற்றியும் பெற்றார்கள்.

 இந்தப் போராட்டங்களின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் அனைத்துத் தரப்பு மக்களின் பங்களிப்புதான். பணக்காரர் முதல் ஏழைகள் வரை, படித்தவர் முதல் எழுத்தறிவில்லாதவர் வரை அனைவரும் கலந்து கொண்டனர். ஏனென்றால், எல்லோரும் பாதிக்கப்பட்டிருந்தனர். நாடு எந்தவகையில் சுரண்டப்படுகிறது என்கிற விவரம் எல்லா தரப்பினரிடமும் எடுத்துச் செல்லப்பட்டது.

 ஆனால், நமது நாட்டில் நடந்த ஊழலுக்கு எதிரான போராட்டம், அடித்தட்டு மக்களை எட்டவேயில்லை. இதனால்தான் மக்கள் கிளர்ச்சிக்கு இந்தப் போராட்டம் மிக மோசமான முன்னுதாரணமாகிப் போயிருக்கிறது. இதன் முடிவு அரசியல்வாதிகளுக்கு மிகவும் சாதகமாயிருக்கிறது. இதுதான் லோக்பால் மசோதா, இதை நிறைவேற்றுவதற்கு அரசு ஒப்புக்கொள்ளும்வரை போராடுவோம் என்கிற இலக்குடன் தொடங்கப்பட்ட உண்ணாவிரதமும் அதன் பின்னணியில் ஏற்பட்ட மாபெரும் மக்கள் எழுச்சியும், இலக்கை எட்டாமலேயே முடிவடைந்தன.

 ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது தொடர்ச்சியான ஒன்று; ஒரே நாளில் வெற்றி கிடைத்துவிடாது என்பதெல்லாம் சரிதான். அதேசமயம், இப்போது நாம் போராடியதில் நமக்கு என்ன முன்னேற்றம் கிடைத்தது என்பதுதான் போராட்டத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல உதவும்.

 போராட்டம் வெற்றி பெற்றால் மீண்டும் அதேபோன்ற போராட்டம் நடத்த முடியும். மக்களும் ஆர்வமாகப் பங்கேற்பார்கள். போராட்டம் தோற்றுப்போனால்கூட, அதே நோக்கத்துக்காக மக்களை மீண்டும் ஒன்றிணைக்க முடியும். ஆனால், ஒரு போராட்டம் வெற்றியும் இல்லாமல், தோல்வியும் இல்லாமல் குழப்பமாக முடிந்தால், போராட்டத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையே போய்விடும். கிட்டத்தட்ட அப்படித்தான் முடிந்திருக்கிறது நமது ஊழலுக்கு எதிரான போராட்டம்.

 இத்தனை வயதான காலத்தில் ஹஸாரே தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அப்படி வலியுறுத்துவது மனிதாபிமானமற்ற செயலாகத்தான் இருக்கும். ஹஸாரேயின் நோக்கத்தையும் அவரது செயல்பாட்டையும் யாரும் குறைகூறவும் முடியாது. நமது அரசியல்வாதிகள் மிகவும் தந்திரசாலிகள் என்பதை போராட்டத்தை வழிநடத்தியவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்பதுதான் நமது வருத்தம்.

..