Tuesday, July 27, 2010

கொரியாவுக்கு குறி!

நீண்ட காலமாகவே போக்குக் காட்டிவரும் வடகொரியாவுக்குள் நுழைவதற்கு அமெரிக்கா தேதி குறித்து விட்டது போலத் தெரிகிறது. அண்மையில் உலகப் பயணம் மேற்கொண்ட வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இதற்கான திரியைக் கொளுத்திப் போட்டிருக்கிறார்.

 தென்கொரியக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட விவகாரத்தில் வடகொரியாவுக்குத் தொடர்பிருப்பதாக அவரது தென்கொரியப் பயணத்தின்போது குற்றம்சாட்டப்பட்டது.

 இதைத் தொடர்ந்து இதுவரை இல்லாத அளவுக்கு தென்கொரிய மற்றும் அமெரிக்கப் படைகளின் கூட்டுப் பயிற்சி தொடங்கியிருக்கிறது. இது பசிபிக் பிராந்தியத்தில் கடும் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது.

 பின்னணி இதுதான். கடந்த மார்ச்சில் தென்கொரிய மற்றும் வடகொரிய கடல் எல்லைப் பகுதியில் தென்கொரியாவுக்குச் சொந்தமான செவ்னன் என்கிற கப்பல் சென்று கொண்டிருந்தது.  இதில் பணியாளர்கள் உள்பட 104 பேர் இருந்தனர். கப்பல் சென்று கொண்டிருந்த மஞ்சள் கடல் பகுதி, தென்கொரிய எல்லைக்குள்தான் வருகிறது என்றாலும், அது வடகொரிய கடற்கரைப் பகுதியிலிருந்து வெறும் 10 கி.மீ. தொலைவுதான்.

 மார்ச் 26-ம் தேதி இந்தக் கப்பல் மர்மமான முறையில் மூழ்கடிக்கப்பட்டது. இரு துண்டுகளாகப் பிளந்த கப்பல் சில மணி நேரங்களில் முழுவதுமாக மூழ்கியது. இதில் கப்பலில் இருந்த 46 பேர் பலியாகினர். 58 பேர் காப்பாற்றப்பட்டனர். இவர்களை மீட்கும் பணியிலும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன. கடந்த சில ஆண்டுகளில் இந்தப் பிராந்தியத்தில் நடந்த மிகப்பெரிய கடல் தாக்குதலாக இது கருதப்படுகிறது.

 வழக்கம்போலவே, இந்தத் தாக்குதலின்போதும், முதல் சந்தேகப் பார்வை வடகொரியா மீதுதான் விழுந்தது. கடல் கண்ணிவெடி மூலமாக வடகொரியாவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக தென்கொரியாவும் அமெரிக்காவும் குற்றம்சாட்டின. தாக்குதல் நடந்த பகுதியிலிருந்து சற்றுத் தொலைவில் வடகொரிய நீர்மூழ்கிக் கப்பல் மையமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. பிறகு பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஸ்வீடன், அமெரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட குழு விசாரணை நடத்தியது.

 அண்மையில் ஹிலாரி கிளிண்டன் தென்கொரியாவுக்குச் சென்றிருந்தபோது, இந்த விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டது. பல தரப்பினரும் எதிர்பார்த்தபடியே வடகொரியாதான் தாக்குதல் நடத்தியது என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. கடல் கண்ணிவெடித் தாக்குதலில் பயன்பட்டதாகக் கூறப்படும் வெடிகுண்டின் சிதறிய பாகங்கள் செய்தியாளர்களுக்குக் காட்டப்பட்டன. இதைத் தொடர்ந்து வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

 இந்த அறிக்கையை வடகொரியா திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. வெடிகுண்டின் முக்கியப் பாகங்கள் இன்னும் சேதமடையாமல் இருப்பதைச் சுட்டிக் காட்டியிருக்கும் அந்த நாட்டு அதிகாரிகள், இந்த அறிக்கையை திட்டமிட்ட சதி எனக் கூறியிருக்கிறார்கள். அமெரிக்காவின் நவீன கண்ணிவெடிகளின் காரணமாகவே நடந்த விபத்து என சீனா கூறியிருக்கிறது. போர் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் சம்பந்தப்பட்ட நாடுகளை சீனா கேட்டுக்கொண்டிருக்கிறது.

 கப்பல் மூழ்கடிப்பு, அதையடுத்த போர் ஒத்திகை ஆகியவற்றுக்குப் பின்னணியில் வேறு சில அரசியல் காரணங்கள் இருக்கக்கூடும் என்கிற சந்தேகம் இப்போது எழுந்திருக்கிறது.  இந்தச் சந்தேகத்தை தென்கொரிய எதிர்க்கட்சிகளே எழுப்பியிருக்கின்றன. செவ்னன் கப்பலில் இருந்த 46 பேரின் மரணத்தைக் கொண்டு அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே விசாரணை அறிக்கை போலியாகத் தயாரித்திருப்பதாக தென்கொரிய அதிபர் லீ மியூங்-புக் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருக்கின்றன.

வடகொரியாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் போரின் மூலமாக நாட்டில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தி அதன் மூலம் வரவிருக்கும் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்ய அவர் திட்டமிட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. விசாரணை அறிக்கையில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றன.

 சில தென்கொரிய நிபுணர்களும் இந்தச் சம்பவம் ஒரு விபத்தாக இருக்கலாம் எனச் சந்தேகம் எழுப்பியிருக்கின்றனர். கண்ணிவெடி அல்லது வேறு வகையான வெடிகுண்டுத் தாக்குதலாக இருந்தால் பலியானவர்களின் உடலில் அதற்குண்டான தடயம் இருக்க வேண்டும் என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றனர். முழு அறிக்கை தாக்கல் செய்யப்படாதது குறித்தும் அவர்கள் சந்தேகம் எழுப்பியிருக்கின்றனர். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பன்னாட்டுக் குழுவினரின் விசாரணை முடிவை இறுதியாக எடுத்துக் கொள்ள முடியாது. அதைக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஆயத்தமாவதும் தவறானது.

 ஆனால், இதையெல்லாம் லீ பொருள்படுத்தவில்லை. அமெரிக்காவும் பிடிவாதமாக இருக்கிறது. அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாகக் கூறி விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை ஓரளவு சமாளித்துக் கொண்டிருக்கும் வடகொரியாவை போரைக் காட்டி அச்சுறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்கிற முடிவுக்கு அமெரிக்கா வந்துவிட்டதாகத் தெரிகிறது. அதனால்தான் இப்போது போர் அச்சத்தை உருவாக்கத் துணிந்திருக்கிறது. அவசர அவசரமாகப் போர் ஒத்திகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் 20 போர்க் கப்பல்கள், 200 விமானங்கள், 8 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

 ஆனால், இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்று வடகொரியாவை மிரட்டுவது ஒன்றும் அவ்வளவு எளிதான விஷயமல்ல. அணு ஆயுதம் வைத்திருக்கும் ஒரு நாட்டை தனிமைப்படுத்தினால் கூட வெற்றிகொள்ள முடியாது. ஏராளமான அணு ஆயுதங்கள் வடகொரியாவிடம் இருக்கின்றன என்பதை அமெரிக்காவே ஒப்புக் கொண்டிருக்கிறது. இது தவிர பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் வரை சென்று தாக்கும் ஏவுகணைகளும் அந்த நாட்டிடம் இருக்கின்றன.

 சீனாவின் நேரடி ஆதரவும் வடகொரியாவுக்கு இருக்கிறது. போர் மூண்டால் ரஷியாவும் ராஜதந்திர அடிப்படையில் ஆதரவு தர வாய்ப்பிருக்கிறது. அந்தத் துணிச்சலில்தான் புனிதப் போர் அறிவிப்பை வடகொரியா வெளியிட்டிருக்கிறது. இதெல்லாம் தெரிந்தும் பேசித் தீர்க்க வேண்டிய விஷயம் போரை நோக்கி எடுத்துச் செல்லப்படுவது ஏனோ?
...
.
.

Monday, July 26, 2010

நமக்கென ஒரு பிரௌசர்- எபிக்


கடைசியாக அது வந்தேவிட்டது. நமக்கென ஒரு பிரௌசர் வேண்டும் என ஆவலுடன் காத்திருந்த இந்திய இணையப் பயனர்களின் ஆசை நிறைவேறிவிட்டது. "மேட் இன் இந்தியா' என்ற அடைமொழியுடன், இந்தியர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட "எபிக்' என்கிற இணைய உலவி இப்போது இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. இதை உருவாக்கியிருப்பது பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம்.

எத்தனையோ பிரௌசர்கள் அவ்வப்போது வருகின்றன, போகின்றன; இதுவும் பத்தோடு பதினொன்றாகக் காணாமல் போய்விடும் என்று எண்ணியவர்கள் இப்போது கொஞ்சம் திகைத்து நிற்கிறார்கள். வெளியான முதல் வாரத்திலேயே இந்தியர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.  மைக்ரோசாஃப்டின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், மோசில்லா பயர்ஃபாக்ஸ் போன்ற முன்னணி பிரௌசர்களைக் கடந்து, இந்தியர்களைக் கவர்வதற்கு இந்தப் புதிய வரவில் நிறையச் சங்கதிகள் இருக்கின்றன.

முதலாவதாக எபிக் பிரௌசர், உலகளாவிய பொதுச் சந்தைக்கான மென்பொருள் அல்ல. அது இலவசமானது; இந்தியர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. அதனால், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருடனோ மோசில்லா பயர்ஃபாக்ஸýடனோ போட்டியிடவேண்டிய அவசியம் இதற்கு இல்லை. இந்த ஒன்றே இந்தியர்களைப் பற்றி இழுப்பதற்குப் போதுமானது. இரண்டாவதாக, இது மோசில்லா பயர்ஃபாக்ஸ் பிரௌசரின் நீட்சிதான். அதனால், கூடுதல் வசதிகள் இருக்கும் என்பது அடிப்படையான விஷயம்.

இணையத்தில் நுழைவோரைச் சிரமப்படுத்தும் முதல் பிரச்னை வைரஸ், மால்வேர், ஸ்பேம்வேர் போன்ற நச்சு நிரல்கள்தான். நச்சு நிரல்களைக் கண்டறிந்து அழிக்கும் திறமையான ஆன்டி-வைரஸ் மென்பொருள் இல்லாவிட்டால் கணினியில் உள்ள முக்கியக் கோப்புகளை இந்த நச்சு நிரல்கள் தாக்கி அழிக்கும். சில நேரம் நமது ரகசியத் தகவல்களைத் திருடி, இணையத் திருடர்களுக்கு உதவி செய்யும்.

 இந்தப் பிரச்னைக்கு எபிக் தீர்வு கண்டிருக்கிறது. எபிக்குடன் இணைத்துத் தரப்பட்டிருக்கும் இùஸட் நோட்32 என்கிற ஆன்டிவைரஸ் தொகுப்பு, நச்சு நிரல்களைக் தேடிக் களைகிறது.

 இந்த வசதியைத் தரும் உலகின் முதல் பிரௌசர் என்கிற பெருமையும் எபிக்குக்கு கிடைத்திருக்கிறது. இணையத்தில் இருந்து வரும் நச்சு நிரல்கள் மட்டுமல்லாமல், நமது கணினியில் ஏற்கெனவே இருக்கும் நச்சு நிரல்களையும் இந்த ஆன்டி-வைரஸ் மென்பொருள் கொண்டு அழிக்க முடிகிறது.

 இதுவரை எந்த பிரௌசரிலும் இல்லாத அளவுக்கு 1500-க்கும் அதிகமான "சைட் பார் அப்ளிகேஷன்ஸ்' எனப்படும் ஒருங்கிணைந்த பயன்பாடுகள் எபிக்கில் இருக்கின்றன. பின்னணி வண்ணங்கள், புகைப்படங்கள் என எல்லாவற்றையும் ஒற்றை க்ளிக்கில் மாற்றும் வசதி இருக்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டர், ஆர்குட் போன்ற சமூக வலைத்தளங்களில் மேய்ந்தபடியே மற்ற பணிகளைச் செய்வதற்கும், கணினியில் உள்ள கோப்புகளைக் கையாள்வதற்கும் முடிகிறது.

 இதேபோல, ஜிமெயில், யாஹு மெயில் போன்ற சேவைகளின் மின்னஞ்சல்களையும் இந்தப்  பயன்பாடுகள் மூலமாகவே படிக்கலாம். இவைதவிர, உடனடி கிரிக்கெட் ஸ்கோர், தொலைக்காட்சி சேனல்கள், இசை, விளையாட்டு, வேலைவாய்ப்பு,விடியோ போன்றவற்றுக்கான பயன்பாடுகளும் எபிக்கில் இருக்கின்றன.

 தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், சம்ஸ்கிருதம் போன்ற இந்திய மொழிகளில் தட்டச்சு செய்வதற்கான வசதி மிக எளிமையான முறையில் இணைக்கப்பட்டிருப்பது சிறப்பு. தனி மென்பொருளை நிறுவுவது அல்லது பிற இணையதளங்களில் சென்று தட்டச்சு செய்து எடுத்து வருவது போன்ற தொல்லைகளுக்கு இது நல்ல தீர்வு.

 இந்தியாவிலிருந்து வெளியாகும் செய்தி இணையத் தளங்களின் முக்கியச் செய்திகளை திரட்டித் தரும் வசதியும் எபிக்கில் இருக்கிறது. இப்போதைக்கு மிகச் சாதாரணமான இணையத் திரட்டிகள் போன்ற இந்த வசதி, வருங்காலத்தில் இது கூகுள் நியூஸ் போன்று மிகப் பிரபலமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பிராந்திய மொழி வசதிகளில் உள்ள சில பிழைகளைச் சரி செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தினால், அனைவராலும் விரும்பப்படுவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.

மைக்ரோசாஃப்டின் எம்எஸ் வேர்டு, ஓபன் ஆபிஸ் ரைட் போல எளிய வடிவிலான வேர்ட் பிராசசர் எனப்படும் சொற் செயலியும் எபிக் இணைத்துத் தருவது மிகச் சிறப்பு. தட்டச்சு செய்வது, பிற இணையத் தளங்களில் இருந்து பிரதி எடுப்பது போன்ற பணிகளைச் செய்வதற்கு இது உதவும். மற்ற முன்னணி இணைய உலவிகளில் இல்லாத வசதி இது.

 "பேக்கப்' எனப்படும் கோப்புகளை இணையத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளும் வசதி நிச்சயமாக அனைவருக்கும் பயன்படும். மைக்ரோசாஃப்டின் ஸ்கைடிரைவ் போல ஜிமெயில் வழியாக இந்த வசதியை எபிக் வழங்குகிறது. ஜிமெயிலை கிட்டத்தட்ட ஒரு எஃப்.டி.பி. போல பயன்படுத்த முடிகிறது.

 இத்தனை வசதிகளையும் கொண்டிருப்பதால் எபிக் இயங்கும் வேகம் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. உண்மையில், மற்ற இணைய உலவிகளை விட கூடுதல் வேகத்துடன் இயங்குவதாகவே மதிப்பிடப்பட்டிருக்கிறது.

 இப்போதைய கணிப்புப்படி, இதுவரை வெளிவந்திருக்கும் மோசில்லா பயர்ஃபாக்ஸ் நீட்சிப் பதிப்புகளில் எபிக் பிரௌசர்தான் சிறந்தது என பெரும்பாலானோர் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். நாட்டில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், பிராந்திய மென்பொருள் சந்தையில் புதிய எழுச்சியை ஏற்படுத்தப் போகிறது என்பதே எபிக்கின் உண்மையான வெற்றி.

...

..

Tuesday, July 20, 2010

இஸ்ரேலுக்கு இன்னொரு வாய்ப்பு!

போர், அமைதிப் பேச்சு, பயங்கரவாதத் தாக்குதல் போன்றவை மத்திய கிழக்கில் சுழற்சி முறை நடப்புகள். ஒன்றையடுத்து மற்றொன்று நடக்கும். இவற்றில் ஏதாவது  ஒரு காரணத்துக்காக உலகச் செய்திகளில் அடிக்கடி மத்திய கிழக்கு நாடுகளின் பெயர்கள் அடிபடும். இது இஸ்ரேல் - சிரியா இடையேயான அமைதிப் பேச்சுக்கான முறை போலத் தெரிகிறது. இப்போது அமைதிக்கான மறைமுக அழைப்பை விடுத்திருப்பது சிரியாவின் அதிபர் பஷார் ஆஸாத். பாலஸ்தீனப் பிரச்னையில் தவிர்க்க முடியாத வேண்டிய நாடு என்கிற முறையில் சிரியாவின் சமிக்ஞைகளை இஸ்ரேல் நிராகரிக்க முடியாது.

 அதே நேரத்தில், அமைதிப் பேச்சை சிரியா உண்மையிலேயே விரும்புகிறதா என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது. நாட்டின் பின்னணி அப்படி. இஸ்ரேலுக்கு நெருக்கடி தர வேண்டும் என்பதற்காக லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா இயக்கத்துக்கு ஸ்கட் போன்ற ஏவுகணைகளை சிரியா விநியோகித்து வருவதாகத் தெரிகிறது. அதேபோல பாலஸ்தீனத்தின் காஸô பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கத்தையும் அந்த நாடு ஆதரித்து வருகிறது.

 அதிபர் பதவியில் 10 ஆண்டுகளைக் கடந்துவிட்ட பஷாருக்கு வாழ்த்துத் தெரிவித்து டமாஸ்கஸ் நகரில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளில் ஹமாஸ் தலைவருக்கும், ஹிஸ்புல்லா தலைவருக்கும் நடுவில் பஷார் சிரித்துக் கொண்டிருக்கிறார். பயங்கரவாத இயக்கங்களாக மேற்கு நாடுகள் முத்திரை குத்தியிருக்கும் அமைப்புகளுடன் அவ்வளவு நெருக்கம். போதாக்குறைக்கு முரட்டு நாடு என்கிற பெயரெடுத்திருக்கும் ஈரானுடனான தொடர்பு வேறு. பயங்கரவாதத்தின் முதுகெலும்புகள் என்று இரண்டாவது ஜார்ஜ் புஷ் பட்டியலிட்டாரே, அதிலும் சிரியாவுக்கு இடமிருக்கிறது.

 இத்தனை முரண்பாடுகளுக்கும் காரணம் இஸ்ரேலுடனான பகை. அந்தப் பகை தொடங்கியது 1967-ல்.  அப்போது நடந்த ஆறு நாள் போரில் மத்திய கிழக்கின் பல இடங்களைக் கைப்பற்றிய இஸ்ரேல், சிரியாவிடமிருந்து கோலன் பீடபூமிப் பகுதியையும் கைப்பற்றியது.  சிரியாவைச் சேர்ந்தவர்களைக் கேட்டால் கோலன் பீடபூமியை இஸ்ரேல் திருடியது என்பார்கள். பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பகுதியை இழந்த வருத்தமும் அதனால் எழுந்த சினமும் சிரியாவுக்கு இன்னமும் இருக்கிறது. நாற்பதாண்டுகளைக் கடந்துவிட்ட இந்தப் பகை அவ்வப்போது தணிவதும் அவ்வப்போது கடுஞ்சீற்றம் கொண்டு எழுவதுமாக இருக்கிறது.

 கடந்த 2007-ல் சிரியாவில் இருந்த அணு உலை மீது இஸ்ரேல் குண்டுகளை வீசியதால் பகை இன்னும் அதிகமானது. என்றாலும் இதன் பிறகு இரு தரப்பும் அமைதிப் பேச்சுக்குத் தயாராகின. துருக்கி மத்தியஸ்தம் செய்ய ஒப்புக் கொண்டது. ஆனால், கடந்த 2008-ல் பயங்கரவாதிகளின் ராக்கெட் தாக்குதலுக்குப் பதிலடி தருவதாகக் கூறி காஸô பகுதி மீது கடுமையான தாக்குதலை நடத்தியது இஸ்ரேல். 3 வாரங்களுக்கும் மேலாக நீடித்த இந்தத் தாக்குதலில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அரபு உலகத்தால் காஸô படுகொலை என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வால் அமைதிப் பேச்சு ரத்தானது. பழையபடி பகை தலைதூக்கியது. வழக்கம்போல மேற்கத்தியப் பொருளாதாரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

 இப்போதும் மத்தியஸ்தம் செய்ய துருக்கி தயாராக இருக்கிறது. ஆனால், நிலைமை முன்புபோல இல்லை. அண்மையில் காஸôவுக்கு நிவாரணப் பொருள்களை ஏற்றிவந்த கப்பல்களை இஸ்ரேல் கடற்படை தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தியது. இதில் கப்பலில் இருந்த துருக்கியர்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட கசப்புணர்வு துருக்கி மற்றும் இஸ்ரேலுக்கு இடையே பிளவை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், ஒரு வேளை பேச்சு நடத்த ஒப்புக் கொண்டாலும் துருக்கி மத்தியஸ்தம் செய்வதை இஸ்ரேல் விரும்பாது எனக் கருதப்படுகிறது.

 துருக்கி மத்தியஸ்தம் செய்வதையே சிரியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், இரு நாடுகளுடனும் நட்புறவைக் கொண்டிருக்கும் நாடு மட்டுமே மத்தியஸ்தம் செய்ய முடியும் என இஸ்ரேல் கூறி வருகிறது. அந்த வகையில் பார்த்தால் ஏதாவது மேற்கத்திய நாடுதான் மத்தியஸ்தம் செய்ய முடியும்.
 இஸ்ரேலுடனான அமைதிப் பேச்சு என்றால் கோலன் பீடபூமியைத் தவிர்த்து வேறொன்றும் இல்லை என்பதுதான் சிரியாவின் நிலை. கோலன் பீடபூமியை கெüரவத்தின் அடையாளமாகப் பார்க்கிறது. எந்த அரசு வந்தாலும், யார் அதிபராக இருந்தாலும் சிரியாவின் கோரிக்கைப் பட்டியிலில் முதலிடத்தில் இருக்கப் போவது கோலன்தான். ஆனாலும், அமெரிக்க பொருளாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதும், நிதியுதவியைப் பெறுவதும்கூட அந்நாட்டின் கோரிக்கையாக இருக்கக்கூடும்.

 இஸ்ரேலின் முதல் நிபந்தனை, சிரியாவின் எல்லையில் கூடுதல் ராணுவத்தைப் பரப்புவதாகத்தான் இருக்கும். இதுபோக, ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவுடனான உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பதையும் இஸ்ரேல் கறாராகக் கேட்கும். இஸ்ரேல்-சிரியா இடையேயான பேச்சுகள் மறைமுகமாக பாலஸ்தீன அமைதிப் பேச்சுகளை விரைவுபடுத்தும் என்பதாலும், இராக்கை மறுநிர்மாணம் செய்வதில் சிரியா உதவும் என்பதாலும் அமெரிக்காவும் இந்த விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டிவருகிறது.

 சிரியாவுடனான பிரச்னைகளைத் தீர்ப்பதற்குக் கிடைத்த பல வாய்ப்புகளை இஸ்ரேல் தவற விட்டிருக்கிறது. அவ்வளவு ஏன், பாலஸ்தீனப் பிரச்னையை ஒட்டுமொத்தமாகவே தீர்ப்பதற்கான வாய்ப்புகள்கூடத் தவறவிடப்பட்டிருக்கின்றன. இப்போது இன்னொரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இதை ஆக்கப்பூர்வமாகவும் தொலைநோக்குடனும் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது இஸ்ரேலின் கடமை. அதைவிட்டுவிட்டு, ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவை ஒடுக்குவதற்காகவும் ஈரானைத் தனிமைப்படுத்துவதற்காகவும் இந்தப் பேச்சுகள் பயன்படுத்தப்படுமானால், மத்திய கிழக்கு சுழற்சியில் அடுத்து வருவது போராகத்தான் இருக்கும்.

...
..
.

Saturday, July 10, 2010

ஸ்பெயினின் வெற்றி ரகசியம்!


கால்பந்து ஆட்டம் உணர்வுகளால் நிரம்பியது. ஆனந்தமும் துக்கமும் வந்து வந்து போகும். ஸ்பெயின் இப்போது ஆனந்த உணர்வில் மிதந்துகொண்டிருக்கிறது. இந்த ஆனந்தம் வெறும் அதிர்ஷ்டத்தால் வந்துவிடவில்லை. அதற்குப் பின்னால் அவர்களது மிகப் பெரிய உழைப்பும் கண்டுபிடிப்பும் இருக்கின்றன.

 வலுவான தற்காப்பு ஆட்டம், ஆக்ரோஷமான தாக்குதல் ஆட்டம் ஆகிய இரண்டுமே ஸ்பெயின் அணியின் பலம். ஆனால் இந்த இரண்டையும் செயல்படுத்துவதில் ஒரு அடிப்படையான தத்துவத்தைக் கொண்டே ஸ்பெயின் அணி இந்தக் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் ஆடி வருகிறது. அதுதான் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உத்தி.

 "பந்து உனது கட்டுப்பாட்டில் இருந்தால் வெற்றி உன்னைத் தேடிவரும்' என்பதுதான் ஸ்பெயின் கால்பந்து அணி வீரர்கள் ஆடுகளத்தில் இயங்குவதற்காக வகுத்துக் கொண்டிருக்கும் கோட்பாடு. ஆனால், பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல.

 மைதானத்தில் இந்த உத்தியைச் செயல்படுத்துவதற்குப் பல திறன்கள் தேவை. குறுகிய தூரத்தில் அடுத்தவருக்குப் பந்தைக் கடத்துதல், வியூகம் அமைத்தபடியே முன்னோக்கி நகர்வது போன்றவை இதற்கு மிகவும் அவசியம். இவை ஸ்பெயினுக்கு அத்துப்படி. இந்த உலகக் கோப்பை போட்டியில், ஸ்பெயினைத் தவிர வேறு எந்த அணிக்கும் பந்தைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மந்திரம் தெரியவில்லை என கால்பந்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

 ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், ஒரேயொரு கோல் அடித்து ஸ்பெயின் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரேயொரு கோல்தான் என்பதால் அது ஒன்றும் பெரிய வெற்றியில்லை என்று கூறிவிட முடியாது. உண்மையில், இந்த வெற்றி ஸ்பெயினின் பிரத்யேகத் திறமைக்கும் திட்டமிடலுக்கும் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். ஆர்ஜென்டினாவை 4 கோல் அடித்து வெற்றி பெற்ற அணியா இது என்று ஜெர்மனியைப் பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு அந்த நாட்டு வீரர்களை முடக்கிப் போட்டது, ஸ்பெயின் வீரர்களின் ஆட்டம்.

 ஸ்பெயினின் நடுக்கள மற்றும் முன்கள வீரர்களின் கட்டுப்பாட்டிலேயே ஆட்டம் முழுவதும் இருந்தது. சேவி, இனியெஸ்டா, பெட்ரோ ரொட்ரிகோ, அலோன்சோ ஆகியோர்தான் எந்த வழியாக, எந்த நேரத்தில் எதிரணியின் பாதுகாப்பு அரணைத் தகர்ப்பது என்பதை முடிவு செய்தார்கள். அதற்கேற்றபடி மற்ற முன்கள வீரர்களை தொடர்ச்சியாக நகரச் செய்வதும், எதிரணியினர் ஊகிக்க முடியாத அளவுக்கு திடீர் தாக்குதல் நடத்துவதும்தான் ஸ்பெயினின் உத்தியாக இருந்தது.

 உண்மையில் ஸ்பெயினின் பந்து கடத்தும், மற்றும் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திறன்களைக் கண்டு ஜெர்மனி வீரர்களே அதிர்ச்சியாகி நின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆட்டம் முடிந்த பிறகு ஜெர்மன் பயிற்சியாளரும் இதை ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்தப் பாணி ஆட்டத்தை வேறு நாடுகள் காப்பியடிப்பதெல்லாம் அத்தனை எளிதானதல்ல என்பதையும் அனைவரும் அறிவார்கள்.

 அதே நேரத்தில், பந்தை அதிக நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மட்டுமே வெற்றியைப் பெற்றுத் தந்துவிடாது. யார் அதிக நேரம் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்பதைக் கொண்டு வெற்றி தீர்மானிக்கப்படுவதில்லை. எத்தனை கோல் அடிக்கப்பட்டது என்பதுதான் முக்கியம். பந்தைக் கடத்திக் கொண்டுபோய் கோல் போட முடியாமல் போனால் தோற்றுப் போக வேண்டியதுதான்.

இதற்கு நல்ல உதாரணம் ஜெர்மனி - ஆர்ஜென்டினா இடையிலான காலிறுதி ஆட்டம். இந்த ஆட்டத்தில் ஆர்ஜென்டினாவசம்தான் பந்து அதிக நேரம் இருந்தது. ஆனால், ஜெர்மன் தடுப்பாட்டக்காரர்களை மீறி அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஜெர்மனியின் திடீர் தாக்குதல் ஆட்டத்தையும் தடுக்க முடியவில்லை. அதனால்தான்  அவர்கள் அவமானகரமாகத் தோற்றார்கள்.  ஸ்பெயினுக்கும் இந்த நிலைமைதான் ஏற்பட்டிருக்க வேண்டும். அந்த அணி வீரர்கள் பந்தைக் கடத்திச் சென்று கடைசிவரை கோல் எதுவும் அடிக்கவில்லை. அவர்கள் பந்தைக் கடத்தி ஜெர்மனியின் கோல் நோக்கி வந்தபோதெல்லாம், வலைக்கு மேல்புறத்திலும் இரு பக்கங்களிலும்தான் பந்து சென்றது. ஆனால், பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உத்தி வேறு வகையில் ஸ்பெயினுக்கு உதவியது.

 முற்பாதி ஆட்டத்தின் போதும், பிற்பாதி ஆட்டத்தில் கோல் அடிக்கும் வரையிலும் பெரும்பான்மை நேரத்தில் ஸ்பெயின் வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் பந்தை வைத்திருந்தார்கள். எப்போதும் ஜெர்மனியின் கோல் கம்பத்தைச் சுற்றியே பந்து வந்து கொண்டிருந்தது போன்ற நிலைமை உருவாக்கப்பட்டது.

 தற்காப்பு ஆட்டத்திலேயே ஜெர்மனி வீரர்கள் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டியிருந்தது. இதனால், தங்களது பாணி ஆட்டத்தை அவர்களால் வெளிப்படுத்த முடியாமலேயே போனது. இப்படி எதிரணியை முடக்குவதில்தான் ஸ்பெயினின் "பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்' உத்தியின் வெற்றி அடங்கியிருக்கிறது.

 இந்த ஆட்டத் திறன்களெல்லாம் கிளப் ஆட்டங்களில் பரிசோதனை செய்யப்பட்டவைதான் என்றாலும் ஸ்பெயின் மட்டும்தான் இதனைக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.  ஸ்பெயின் வீரர்களைக் கேட்டால், எங்களுக்கு "வேறு எந்த வகையாகவும் ஆடத் தெரியாது' என்கிறார்கள் மிக அடக்கமாக. அப்படியென்றால், இறுதிப் போட்டியிலும் இதை எதிர்பார்க்கலாம் போலிருக்கிறது.

..
.

.

Thursday, July 01, 2010

கெட்ட சொற்களஞ்சியமாகும் பதிவுலகம்!

மொழியில் நல்ல சொல் கெட்ட சொல் என்கிற பேதமில்லை. நமது மொழியாற்றலை அடுத்தவரைக் காயப்படுத்துவதற்காகப் பயன்படுத்தும்போதுதான் சில சொற்கள் கெட்ட சொற்களாகிப் போகின்றன எனக் கருதுகிறேன்.

எதை வேண்டுமானாலும் இணையத்தில் எழுத முடிகிறது. இப்போதைய பாணி திட்டுவது. புரட்சிகரமாக எழுதுவது என்பதற்கு பதிவுலக அகராதியில் திட்டுவது என்று பொருள் போலிருக்கிறது. பதிவு எழுதுவோரும் அதற்கு பதில் எழுதுவோரும் பின்னூட்டுகளை விட்டுச் செல்வோரும் ஒருவரையொருவர் திட்டுவதற்குப் பயன்படுத்தும் சொற்களையும் வாக்கிய விளையாட்டுக்களையும் பார்த்தால் தமிழ் கிட்டத்தட்ட செம்மொழியாகவே மாறிவிட்டது போலத் தெரிகிறது. திட்டுவது என்று பொதுவான முடிவுக்கு வந்தபிறகும் பதிவு என்றோ, கட்டுரை என்றோ, எதிர்வினை என்றோதான் அவற்றை வகைப்படுத்திக் கொள்கிறார்கள்.

மயக்கும் சொற் பிரயோகங்கள் மூலம் சிலர் இலக்கியவாதிகளாகத் தெரிகின்றனர். ஆனால் அவர்களும் மற்றவர்களைத் திட்டுவதைத்தான் முனைப்போடு செய்கின்றனர்.

பதிவர் ஒருவரை பொறுக்கி என்கிற அடைமொழியுடன் தலைப்பிட்டு ஒரு பதிவு எழுதப்பட்டிருந்தது. அந்தப் பதிவு முழுவதுமே வெற்றுத் திட்டுக்களால்தான் நிரம்பியிருந்தது. இப்படிப் புதிய சொற்களும் வாக்கிய அமைப்புகளும், புனைவுகளும் தோன்றுவது இணையமொழிக்கு நல்லதா? அதைப் புரட்சி அல்லது கட்டவிழ்ப்பு என்று கூறுவது எந்த வகையான நியாயம்?

அண்மையில் நண்பர் மூலம் இன்னொரு பதிவைப் படிக்க நேர்ந்தது. அந்தப் பதிவில் திட்டு வாங்கியவர் கீழ்கண்டவாறு அறிமுகப்படுத்தப்பட்டார்.

//
நாயகன் என்ற உரல் முகவரியுடன், சிதைவுகள் என்ற வலைப்பூ தலைப்புடன், தோழமையுடன் பைத்தியக்காரன் என்ற புனைப்பெயருடன், பூக்கோ, தஸ்தாவெஸ்கி, டால்ஸ்டாய் என தம்மை ஒரு உலக இலக்கிய ஆர்வளராகவும், பார்பனர்கள் என அறியபட்டவர்கள் செய்ததாக, நினைத்தையெல்லாம் பதிவாக எழுதி தன்னை ஒரு அறிவுஜீவியாக காட்டும் மற்றொரு பார்பன புற்றுநோயே தோழர்!?(வெட்கக்கேடு)....//


இதற்குப் பிறகு சம்பந்தப்பட்டவரைப் பற்றியோ அல்லது அவரது கருத்தைப் பற்றியோ ஆக்கப்பூர்வமாக எப்படி விமர்சித்துவிட முடியும்?  இத்தகைய தனிநபர் தாக்குதல்கள், சம்பந்தப்பட்டவரை நேரடியாகக் காயப்படுத்தும் என்பது மட்டுமல்லாமல், கருத்துக்களையும், விவாதம் செல்ல வேண்டிய திசையையும் திரித்துவிடக்கூடும்.

தமயந்தி நிழல்வலையில் பின்னூட்டங்கள் தணிக்கையில்லாமல் வெளியாகின்றன. இது முகமூடிகளுக்கு வசதியாகப் போய்விடுகிறது. சுதந்திரமும் ஒரு அனானி வசதியும் கொடுத்துவிட்டால் நம் நண்பர்களே நம்மைத் திட்டுவார்கள் என்பதற்கு நல்ல சான்று இது.

முட்டாள் என்று திட்டினாலே சிலருக்கு உயிரை அறுப்பது போன்ற வலி பிறக்கும். அப்படியிருக்கையில் நாய், பரதேசி, பொறுக்கி என்று திட்டுவதெல்லாம் எந்த வகையான நாகரிகமோ? கோபத்தை பொறுப்பான வாக்கியங்களால் உண்மையான அக்கறையுடன் வெளிப்படுத்த வேண்டும் என்பதை மொழி வல்லுனர்களும், இலக்கியவாதிகளும், அறிவு ஜீவிகளும், கட்டுரையாளர்களும், பதிவர்களும் வலியுறுத்த வேண்டும். ஆஃப்டர் ஆல் ஆனாலும் இது நமக்கு நண்பர்களையும், புகழையும், பணத்தையும், உணர்ச்சியையும் கொடுத்த மொழியல்லவா?

---------------------------------------------------------------------------------

அண்மையில் நண்பர் ஒருவர் என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். தங்கை, அக்கா என கூகுளில் தேடினால் ஏன் பாலியல் மற்றும் தகாத உறவுகள் பற்றிய கதைகள் வருகின்றன என்பதே அவரது கேள்வி. தங்கை எனத் தேடியதும் விக்கிபீடியாவில் இருந்து தங்கை என்ற உறவு பற்றி விளக்கங்கள் வந்தால் பரவாயில்லையே என்று சொன்னார். இது பழைய பிரச்னைதான் என்றாலும் மற்ற மொழியில் இது எப்படி என்பதற்காக மலையாளி நண்பர் ஒருவர் உதவியுடன் மலையாளத்தில் தேடினோம். விக்கிபீடியாவும் இன்னபிறவும் வந்தன. கன்னடமும் பரவாயில்லை. மற்ற மொழிகள் பற்றித் தெரியவில்லை.
..

..

.