Tuesday, July 20, 2010

இஸ்ரேலுக்கு இன்னொரு வாய்ப்பு!

போர், அமைதிப் பேச்சு, பயங்கரவாதத் தாக்குதல் போன்றவை மத்திய கிழக்கில் சுழற்சி முறை நடப்புகள். ஒன்றையடுத்து மற்றொன்று நடக்கும். இவற்றில் ஏதாவது  ஒரு காரணத்துக்காக உலகச் செய்திகளில் அடிக்கடி மத்திய கிழக்கு நாடுகளின் பெயர்கள் அடிபடும். இது இஸ்ரேல் - சிரியா இடையேயான அமைதிப் பேச்சுக்கான முறை போலத் தெரிகிறது. இப்போது அமைதிக்கான மறைமுக அழைப்பை விடுத்திருப்பது சிரியாவின் அதிபர் பஷார் ஆஸாத். பாலஸ்தீனப் பிரச்னையில் தவிர்க்க முடியாத வேண்டிய நாடு என்கிற முறையில் சிரியாவின் சமிக்ஞைகளை இஸ்ரேல் நிராகரிக்க முடியாது.

 அதே நேரத்தில், அமைதிப் பேச்சை சிரியா உண்மையிலேயே விரும்புகிறதா என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது. நாட்டின் பின்னணி அப்படி. இஸ்ரேலுக்கு நெருக்கடி தர வேண்டும் என்பதற்காக லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா இயக்கத்துக்கு ஸ்கட் போன்ற ஏவுகணைகளை சிரியா விநியோகித்து வருவதாகத் தெரிகிறது. அதேபோல பாலஸ்தீனத்தின் காஸô பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கத்தையும் அந்த நாடு ஆதரித்து வருகிறது.

 அதிபர் பதவியில் 10 ஆண்டுகளைக் கடந்துவிட்ட பஷாருக்கு வாழ்த்துத் தெரிவித்து டமாஸ்கஸ் நகரில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளில் ஹமாஸ் தலைவருக்கும், ஹிஸ்புல்லா தலைவருக்கும் நடுவில் பஷார் சிரித்துக் கொண்டிருக்கிறார். பயங்கரவாத இயக்கங்களாக மேற்கு நாடுகள் முத்திரை குத்தியிருக்கும் அமைப்புகளுடன் அவ்வளவு நெருக்கம். போதாக்குறைக்கு முரட்டு நாடு என்கிற பெயரெடுத்திருக்கும் ஈரானுடனான தொடர்பு வேறு. பயங்கரவாதத்தின் முதுகெலும்புகள் என்று இரண்டாவது ஜார்ஜ் புஷ் பட்டியலிட்டாரே, அதிலும் சிரியாவுக்கு இடமிருக்கிறது.

 இத்தனை முரண்பாடுகளுக்கும் காரணம் இஸ்ரேலுடனான பகை. அந்தப் பகை தொடங்கியது 1967-ல்.  அப்போது நடந்த ஆறு நாள் போரில் மத்திய கிழக்கின் பல இடங்களைக் கைப்பற்றிய இஸ்ரேல், சிரியாவிடமிருந்து கோலன் பீடபூமிப் பகுதியையும் கைப்பற்றியது.  சிரியாவைச் சேர்ந்தவர்களைக் கேட்டால் கோலன் பீடபூமியை இஸ்ரேல் திருடியது என்பார்கள். பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பகுதியை இழந்த வருத்தமும் அதனால் எழுந்த சினமும் சிரியாவுக்கு இன்னமும் இருக்கிறது. நாற்பதாண்டுகளைக் கடந்துவிட்ட இந்தப் பகை அவ்வப்போது தணிவதும் அவ்வப்போது கடுஞ்சீற்றம் கொண்டு எழுவதுமாக இருக்கிறது.

 கடந்த 2007-ல் சிரியாவில் இருந்த அணு உலை மீது இஸ்ரேல் குண்டுகளை வீசியதால் பகை இன்னும் அதிகமானது. என்றாலும் இதன் பிறகு இரு தரப்பும் அமைதிப் பேச்சுக்குத் தயாராகின. துருக்கி மத்தியஸ்தம் செய்ய ஒப்புக் கொண்டது. ஆனால், கடந்த 2008-ல் பயங்கரவாதிகளின் ராக்கெட் தாக்குதலுக்குப் பதிலடி தருவதாகக் கூறி காஸô பகுதி மீது கடுமையான தாக்குதலை நடத்தியது இஸ்ரேல். 3 வாரங்களுக்கும் மேலாக நீடித்த இந்தத் தாக்குதலில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அரபு உலகத்தால் காஸô படுகொலை என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வால் அமைதிப் பேச்சு ரத்தானது. பழையபடி பகை தலைதூக்கியது. வழக்கம்போல மேற்கத்தியப் பொருளாதாரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

 இப்போதும் மத்தியஸ்தம் செய்ய துருக்கி தயாராக இருக்கிறது. ஆனால், நிலைமை முன்புபோல இல்லை. அண்மையில் காஸôவுக்கு நிவாரணப் பொருள்களை ஏற்றிவந்த கப்பல்களை இஸ்ரேல் கடற்படை தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தியது. இதில் கப்பலில் இருந்த துருக்கியர்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட கசப்புணர்வு துருக்கி மற்றும் இஸ்ரேலுக்கு இடையே பிளவை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், ஒரு வேளை பேச்சு நடத்த ஒப்புக் கொண்டாலும் துருக்கி மத்தியஸ்தம் செய்வதை இஸ்ரேல் விரும்பாது எனக் கருதப்படுகிறது.

 துருக்கி மத்தியஸ்தம் செய்வதையே சிரியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், இரு நாடுகளுடனும் நட்புறவைக் கொண்டிருக்கும் நாடு மட்டுமே மத்தியஸ்தம் செய்ய முடியும் என இஸ்ரேல் கூறி வருகிறது. அந்த வகையில் பார்த்தால் ஏதாவது மேற்கத்திய நாடுதான் மத்தியஸ்தம் செய்ய முடியும்.
 இஸ்ரேலுடனான அமைதிப் பேச்சு என்றால் கோலன் பீடபூமியைத் தவிர்த்து வேறொன்றும் இல்லை என்பதுதான் சிரியாவின் நிலை. கோலன் பீடபூமியை கெüரவத்தின் அடையாளமாகப் பார்க்கிறது. எந்த அரசு வந்தாலும், யார் அதிபராக இருந்தாலும் சிரியாவின் கோரிக்கைப் பட்டியிலில் முதலிடத்தில் இருக்கப் போவது கோலன்தான். ஆனாலும், அமெரிக்க பொருளாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதும், நிதியுதவியைப் பெறுவதும்கூட அந்நாட்டின் கோரிக்கையாக இருக்கக்கூடும்.

 இஸ்ரேலின் முதல் நிபந்தனை, சிரியாவின் எல்லையில் கூடுதல் ராணுவத்தைப் பரப்புவதாகத்தான் இருக்கும். இதுபோக, ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவுடனான உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பதையும் இஸ்ரேல் கறாராகக் கேட்கும். இஸ்ரேல்-சிரியா இடையேயான பேச்சுகள் மறைமுகமாக பாலஸ்தீன அமைதிப் பேச்சுகளை விரைவுபடுத்தும் என்பதாலும், இராக்கை மறுநிர்மாணம் செய்வதில் சிரியா உதவும் என்பதாலும் அமெரிக்காவும் இந்த விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டிவருகிறது.

 சிரியாவுடனான பிரச்னைகளைத் தீர்ப்பதற்குக் கிடைத்த பல வாய்ப்புகளை இஸ்ரேல் தவற விட்டிருக்கிறது. அவ்வளவு ஏன், பாலஸ்தீனப் பிரச்னையை ஒட்டுமொத்தமாகவே தீர்ப்பதற்கான வாய்ப்புகள்கூடத் தவறவிடப்பட்டிருக்கின்றன. இப்போது இன்னொரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இதை ஆக்கப்பூர்வமாகவும் தொலைநோக்குடனும் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது இஸ்ரேலின் கடமை. அதைவிட்டுவிட்டு, ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவை ஒடுக்குவதற்காகவும் ஈரானைத் தனிமைப்படுத்துவதற்காகவும் இந்தப் பேச்சுகள் பயன்படுத்தப்படுமானால், மத்திய கிழக்கு சுழற்சியில் அடுத்து வருவது போராகத்தான் இருக்கும்.

...
..
.

1 comment:

Anonymous said...

அன்புள்ள திரு.மணிகண்டன் அவர்களுக்கு
தங்கள் கட்டுரைகளைத் தினமணி இதழில் ஆர்வத்துடன் கற்று மகிழ்பவன்.உலக நடப்புகளை மிகச்சிறப்பாகத் தாங்கள் வாசகர்களுக்குத் தெளிந்த நடையில் வழங்கும் திறன் பாராட்டுதலுக்கு உரியது.தங்கள் படைப்புகளைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.

மு.இளங்கோவன்
புதுச்சேரி