Tuesday, May 11, 2010

ஆட்சி மாறினாலும்...!

சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து வந்த நாடுகளில் வண்ணப் புரட்சிகள் மிகப் பிரபலம்.​ ஜார்ஜியாவின் ரோஸ் புரட்சியும்,​​ உக்ரைனின் ஆரஞ்சுப் புரட்சியும் அந்தந்த நாடுகளில் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தின.​ ஆசியாவுக்கு வெளியே செக்கோஸ்லாவியாவில் நடந்த வெல்வெட் புரட்சியும் இந்த வரிசையில் சேரும்.​ பொதுவாக அமைதியாகத் தொடங்கும் இந்தப் புரட்சிகள் சில நேரங்களில் வன்முறையாகவும் உருமாறியிருக்கின்றன.​ ஆயினும் பொதுமக்களின் பேராதரவு இந்தப் புரட்சிகளுக்கு எப்போதுமே இருந்திருக்கிறது.

கிர்கிஸ்தானிலும் இப்படியொரு புரட்சி கடந்த 2005-ம் ஆண்டில் நடந்தது.​ அப்போதைய அதிபர் அஸ்கார் அகயேவ் மீதான ஊழல் மற்றும் மோசடிப் புகார்கள்தான் புரட்சிக்கு அடிப்படைக் காரணம்.​ அது தேர்தல் ஆண்டு என்பதால்,​​ எப்படியும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருந்தது.​ ஆனால்,​​ தேர்தல் முடிவுகள் மக்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தன.​ பெரும்பாலான தேர்தல் கணிப்புகளுக்கு மாறாக மீண்டும் அகயேவே வெற்றி பெற்றார்.​ தேர்தலில் அவர் முறைகேடுகள் செய்தார் என எதிர்க்கட்சிகளும் பெரும்பாலான ஊடகங்களும் குற்றம்சாட்டின.​ இப்படிப்பட்ட அதிபரை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக ஏற்பட்டதுதான் ட்யூலிப் புரட்சி.

அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர்களான ரோஸô ஒடுன்பேவா,​​ குர்மன்பேக் பாகியேவ் ஆகியோரின் தலைமையில் நடந்த இந்தப் புரட்சியைத் தாக்குப்பிடிக்க முடியாத அகயேவும் அவரது குடும்பத்தினரும் அண்டை நாடான கஜகஸ்தானுக்குப் பறந்தனர்.​ அதே ஆண்டில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது.​ புரட்சியை முன்னின்று நடத்தியவர்களுள் ஒருவரான பாகியேவ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.​ "மக்களாட்சி மீட்டெடுக்கப்பட்டுவிட்டது;​ ​ இனியெல்லாம் சுபமே' என்று அந்நாட்டு மக்கள் மட்டுமல்ல,​​ உலகமே நம்பியது.​ ஆனால் அந்த நம்பிக்கையை நீண்டகாலம் நீடிக்கவிடும் நல்ல அரசியல்வாதிகள் இந்தக் காலத்தில் இருக்கிறார்களா என்ன?

ஒரே ஆண்டுதான் அந்த ஆட்சிக்குத் தேனிலவு.​ அதன் பிறகு,​​ யார் புரட்சியாளராளராகவும் ஜனநாயகப் பாதுகாவலராகவும் கருதப்பட்டாரோ,​​ அதே தலைவரின் ஆட்சி மக்களுக்குக் கசக்கத் தொடங்கியது.​ எதிர்க்கட்சித் தலைவர்களையும்,​​ அரசியல் கைதிகளையும் படுகொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.​ மகனுக்கு முக்கியப் பொறுப்புகளை வழங்கியதும்,​​ பினாமிகளின் பெயரில் சொத்துகளைக் குவித்ததும் அவருக்கு இருந்த நல்ல பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தின.​ முன்பிருந்ததைவிட நிர்வாகம் சீர்கெட்டது.​ வேலையில்லாத் திண்டாட்டமும்,​​ உணவுப் பற்றாக்குறையும் அதிகரித்தன.​ இதையெல்லாம் சுட்டிக்காட்டி ஆட்சியைக் குறைகூறிய ஊடகங்கள் தடை செய்யப்பட்டன.

2009-ல் அடுத்த அதிபர் தேர்தல் வந்தது.​ அதிருப்தியடைந்திருந்த மக்கள்,​​ ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.​ ஆனால்,​​ வழக்கம்போலவே அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது.​ 78 சதவீத வாக்குகளைப் பெற்று பாகியேவ் மீண்டும் வெற்றிபெற்றார்.​ வெற்றி பெற்ற கையுடன்,​​ பெட்ரோல்,​​ டீசல் விலையையும் மின் கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்தினார்.​ அதுவரை உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்த மக்களை இந்த விலையேற்றம் போராடத் தூண்டியது.​ இந்த ஆண்டின் தொடக்கம் முதலே,​​ அரசுக்கு எதிரான வன்முறைகள் வெடிக்கத் தொடங்கின.​ படிப்படியாகச் சில ஆயுதக் குழுக்களும் களத்தில் இறங்கின.​ மார்ச் இறுதியில் இந்தப் புரட்சி இறுதிக் கட்டத்தை எட்டிய ஒரு சில நாள்களில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்த முறை புரட்சிக்குத் தலைமை தாங்கியவர் ரோஸô ஓடுன்பேவா.​ 5 ​ ஆண்டுகளுக்கு முன் பாகியேவுடன் சேர்ந்து புரட்சி செய்தாரே அதே தலைவர்தான்.​ இப்போது பாகியேவுக்கு எதிராக மக்களைத் திரட்டினார்.​ அரசுக் கட்டடங்கள் அனைத்தும் புரட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றதும்.​ வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொண்ட பாகியேவ்,​​ வழக்கம்போல கஜகஸ்தானுக்குப் பறந்தார்.​ இப்போது ஓரளவு அமைதி திரும்பியிருக்கிறது.​ நாட்டின் தலைமைப் பொறுப்பை ரோஸô ஏற்றிருக்கிறார்.

இப்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம்,​​ ஜனநாயகத்தை மீட்டெடுப்பதில் மக்களுக்குக் கிடைத்திருக்கும் நிரந்தரமான வெற்றி என உறுதியாகக் கூற முடியாத அளவுக்கு முந்தைய கால அரசியல் மாற்றங்கள் அமைந்திருக்கின்றன.​ அந்நாட்டு மக்கள் ​ கொஞ்சம் ஆசுவாசப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே ஒழிய,​​ புதிய ஆட்சியாளர்கள் மீது முழுமையான நம்பிக்கை வைத்துவிட்டார்கள் என்று கருத முடியாது.

இதுபோன்ற அரசியல் சூழலை மத்திய ஆசியாவின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடலாம்.​ ஊழல் நிறைந்த ஆட்சியாளர்கள்தான் இந்த நாடுகளின் அடையாளம்.​ குடும்ப உறுப்பினர்களை அரசின் முக்கியப் பொறுப்புகளில் அமர்த்துவதுடன்,​​ முக்கியத் தொழில்களையும் கைப்பற்றுவது தங்களது பிறப்புரிமை என்று ஆட்சியாளர்கள் கருதுகின்றனர்.​ ஒருங்கிணைக்கப்பட்ட வலுவான எதிர்க்கட்சிகள் இல்லாததால் ஆட்சியாளர்களைத் தட்டிக்கேட்கவும் ஆளில்லாமல் போகிறது.

இவற்றால் விரக்தியடையும் மக்கள்,​​ தாங்களாகவே வீதியில் இறங்கிப் போராடுகின்றனர்.​ இதெல்லாம் மத்திய ஆசியா முழுமைக்கும் பொருந்தும் என்பதால்,​​ கிர்கிஸ்தானின் இப்போதைய அரசியல் புரட்சிகூட துர்க்மெனிஸ்தான்,​​ கஜகஸ்தான்,​​ உஸ்பெகிஸ்தான்,​​ தாஜிகிஸ்தான் போன்ற நாடுகளுக்குப் பரவக்கூடும் என அரசியல் நிபுணர்கள் சூடாக விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

கிர்கிஸ்தானின் ஆட்சி மாற்றம் உலகம் முழுவதும் பரபரப்பாகியிருப்பதற்கு இன்னொரு முக்கியக் காரணமும் உண்டு.​ ஆப்கானிஸ்தான் போருக்கான அமெரிக்க விமானப்படைத்தளம் கிர்கிஸ்தானில் இருப்பதுதான் அந்த முக்கியக் காரணம்.​ ஆப்கன்போர் முடிந்துவிட்ட பிறகும்,​​ ரஷியா,​​ சீனாவின் எதிர்ப்பையும் மீறி இந்தத் தளம் தொடர்ந்து இயங்கி வருவதும்,​​ ​ ஆட்சிகள் பல மாறினாலும் இந்த படைத்தளத்துக்கான வாடகை ஒப்பந்தத்தை மட்டும் தடைபடாமல் புதுப்பிக்கப்பட்டு வருவதும்தான் உலக அரசியலில் சாமான்யர்களுக்குப் புரியாத ரகசியங்கள்.
..

.

No comments: