Tuesday, May 04, 2010

பார்வதியம்மாளைத் தீண்டும் அரசியல்!

அரசியல் என்பது வேறுவகையான ஆட்டக்களம். வழக்கமான ஆட்ட விதிகள் அங்கு செல்லுபடியாகா. ஒருவருக்குப் பொருந்தும் விதி மற்றவருக்குப் பொருந்தாது. ஒரு ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட சட்டம், எல்லா ஆட்டத்துக்கும் பொருந்த வேண்டும் என வியாக்கியானம் பேச முடியாது. இங்குள்ள நியாங்களே வேறு. குற்றவாளிகளெல்லாம் சேர்ந்து குற்றவியல் சட்டத்தை எழுதுவதும் இங்குதான். ஊதிய உயர்வு கேட்கும் போராட்டத்தை தலைமையேற்று நடத்தும் அரசியல்வாதி, அடுத்த ஆண்டிலேயே அந்தப் போராட்டத்தை அடக்குவதற்கு உத்தரவு போடுவார். இவர் நல்லவர், அவர் கெட்டவர் என்று பிரித்துக் கூறமுடியாது. அந்த மாதிரியான பகுப்பே இங்கு கிடையாது. அப்படிப் பகுத்துக்கொள்வது நம் முட்டாள்தனம். இது காலம்காலமாக இருக்கும் நியதி.

இப்படிப்பட்ட அரசியல்வாதிகளிடம்தான் பிரபாகரன் சிக்கியிருந்தார். அவரைக் கொண்டு பலவகையான ஆட்டங்களை தமிழக அரசியல்வாதிகள் ஆடிக் களைத்துவிட்டனர். இப்போது அவரது தாயாரைக் கொண்டு புதிய ஆட்டம்.

பார்வதியம்மாளுக்குச் சிகிச்சையளிப்பதோ அல்லது அவரைத் தமிழகத்தில் வைத்துப் பத்திரமாகப் பாதுகாப்பதோதான் நம்மவர்களின் நோக்கம் என்று யாராவது கூறினால், அவர் வேற்றுக் கிரகவாசியாகத்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் இலவசங்களில் மயங்கி புத்தியை அடகு வைத்தவராக இருக்க வேண்டும்.

அந்த அம்மையாருக்குச் சிகிச்சையளிப்பது என்பது மிகவும் நேர்மையாகச் செய்ய வேண்டிய விஷயம். தமிழகத்தில்தான் சிகிச்சையளிக்க வேண்டும் என்று உறுதியான பிறகு, இப்போதிருக்கும் அரசியல் சூழலில், முதல்வரிடம் மட்டும் அனுமதி கேட்டாலே போதும். ஆனால், அது செய்யப்படவில்லை. சரி, இலங்கையிலிருந்து நேரடியாகவே இந்தியாவுக்கு வந்திருக்கலாம். அதுவும் இல்லை.

மலேசியாவில் இருந்து தமிழக அரசுக்கு தற்போது மெயில் அனுப்பியதாகக் கூறப்படுகிறதே, அந்த மெயிலை அப்போதே அனுப்பியிருக்கலாம். ஆனால், டீக் குடித்தாலும், தீக்குளித்தாலும் வீராவேசம் பேசித் திரிவோரின் கையில் விவகாரம் போயிருக்கிறது. அதுதான் இத்தனை குழப்பத்துக்கும் காரணம்.

உண்மையிலே, சிகிச்சை மட்டுமே நோக்கமென்றால், தற்போது தமிழக அரசு செலவிலேயே தரப்படும் சிகிச்சையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசு தரப்பு அரசியலும் எதிர்தரப்பு அரசியலும் எந்த வகையிலும் குறைந்ததில்லை. முதல்பத்தியில் கூறப்பட்ட எல்லா இலக்கணங்களும் இருதரப்புக்குமே பொருந்தும். ஆனால், இப்போதைய உடனடித் தேவை சிகிச்சைதான்.

உண்மையிலேயே அந்த அம்மையாரின் மேல் அக்கறைகொண்டிருப்போர் இந்த வழிகாட்டுதலைத்தான் அவருக்குத் தருவார்கள். இல்லையென்றால், சில அரசியல்வாதிகளின் தொலைந்துபோன புகழை மீட்பதற்கும், தமிழகப் புலனாய்வுப் பத்திரிகைகளில், உணர்ச்சி மயமான கண்ணீர்க் கட்டுரைகளை எழுதுவதற்கும் மட்டும்தான் அந்த அம்மாளின் பெயர் பயன்படும்.

....
..
..

1 comment:

Anonymous said...

nanbare,
ungal karruthu romba
neeyayamana karuthu.
super .
Abishek.Akilan.