Monday, February 27, 2012

போர் என்றால் அமைதி!

ஈரான் என்றால் மத அடிப்படைவாதிகளின் நாடு என்கிற கருத்து உலகமெங்கும் விதைக்கப்பட்டிருக்கிறது. ரௌடி நாடு என்று மேல்நாட்டுப் பத்திரிகைகள் வெளிப்படையாகவே குறிப்பிடுகின்றன.

 இதற்கு ஏற்றாற்போல இஸ்ரேலை வரைபடத்தில் இருந்து அகற்றிவிடுவோம், ஹோமுஸ் நீரிணையை அடைத்து உலகத்துக்கே எண்ணெய் கிடைக்கவிடாமல் செய்துவிடுவோம் என்று ஈரான் தடாலடியாகப் பேசுகிறது. ஆனால் உண்மையில், இந்த இரண்டு செயல்களையும் ஈரானால் செய்யவே முடியாது.

 ஹோமுஸ் நீரிணையைத் தடுத்தால், அதைத் தகர்ப்பதற்கு அமெரிக்கக் கடற்படைக்கு சில மணி நேரங்கள் போதும். இஸ்ரேல் மீது நேரடியாகத் தாக்குதல் நடவடிக்கையில் இறங்கினால், ஈரான்தான் வரைபடத்திலிருந்து காணாமல் போகும். தடாலடியாகப் பேசுவதெல்லாம் ஈரானுக்கேயுரிய வாய்ச் சவடால்தான்.

 உறுதியான மக்களாட்சி அங்கு கிடையாது. தேர்தல் எப்படி நடக்கிறது என்பதற்கு டுவிட்டர் புரட்சியே ஆதாரம். அரசியல் கட்சிகளையும் பத்திரிகைகளையும் தடை செய்வதே அகமதிநிஜாத்துக்கு பகுதி நேர வேலை என்று கிண்டல் செய்கிறார்கள். இப்படிப்பட்டவரின் கையில் அணு ஆயுதம் கிடைத்தால் என்ன ஆகும் என்பதுதான் உலகின் இப்போதைய கவலை.

 அணு ஆயுதம் தயாரிப்பது என்பது இப்போது பிரச்னையில்லை. அணு ஆயுதப் பரவல் தடுப்பு, பேரழிவு ஆயுதங்கள் ஒழிப்பு பற்றி முன்னர் கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் எல்லா நாடுகளும் எப்போதோ வசதியாக மறந்துவிட்டன. இப்போது உலகம் விவாதித்துக் கொண்டிருக்கும் பிரச்னை, யாரெல்லாம் அணுஆயுதத்தைத் தயாரிக்கலாம், வைத்திருக்கலாம் என்பதுதான். இஸ்ரேலை அழித்துவிடுவோம் என்று கூறும் ஒரு பொறுப்பற்ற நாடு யுரேனியத்தைச் செறிவூட்டிக் கொண்டிருப்பதுதான் பலருக்கு அச்சமாக இருக்கிறது. பயங்கரவாதிகளின் கைகளுக்குப் போய்விடுமே என்கிற பதற்றம் வேறு.

 சரி, எந்தெந்த நாடெல்லாம் அணு ஆயுதங்களை வைத்திருக்கலாம் என்பதை யார்தான் தீர்மானிப்பது? அமெரிக்காவும் பிரிட்டனும்தான் என்றால், வரலாற்றில் பலமுறை துரோகம் இழைத்திருக்கும் இந்த இரு நாடுகளையும் யார் நம்புவார்கள்? அதுவும் ஈரான் எப்படி இவர்களை மேற்பார்வையாளர்களா ஏற்கும்? "நீ எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை உனது எதிரிதான் தீர்மானிக்கிறான்' என்பார்கள். அந்த வகையில் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது என்று வைத்துக்கொண்டால், அதற்கு முழுக்க முழுக்க அமெரிக்காவும் பிரிட்டனும்தான் காரணம்.

 இங்கே ஒரு வரலாற்றுச் சம்பவத்தை நினைவுபடுத்தியாக வேண்டும். இன்றைக்கு இஸ்லாமிய அடிப்படைவாத நாடு என்று கேலியாகச் சித்திரிக்கப்படும் ஈரான், ஒரு காலத்தில் முழுமையான ஜனநாயக நாடாக இருந்தது.

 1950-களில் அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆட்சி நடந்து வந்தது. முகமது மொசாதே பிரதமராக இருந்தார். பல்வேறு பொருளாதாரச் சீர்திருத்தங்களைச் செய்தார். அதில் ஒன்றுதான் எண்ணெய் வளத்தை நாட்டுடைமையாக்குவது. ஈரானில் கிடைத்த எண்ணெயில் 80 சதவிகிதம்வரை உறிஞ்சிக் கொண்டிருந்த பிரிட்டனுக்கு மொசாதேயின் இந்த நடவடிக்கை பேரதிர்ச்சியாக இருந்தது.

 ஜனநாயகத்தின் காவலர்கள் என்று பல நூற்றாண்டுகளாகக் கூறிக் கொண்டிருக்கும் அமெரிக்காவும், பிரிட்டனும் அன்று ஓர் அற்பமான செயலைச் செய்தன. தங்களது நாடுகளின் உளவு அமைப்புகளை ஏவிவிட்டு, ஜனநாயக அரசுக்கு எதிரான குழுக்களைத் தூண்டின.

 "ஆபரேஷன் அஜாக்ஸ்' என்கிற பெயரில் சிஐஏ நடத்திய அந்த மாபெரும் அரசியல் மோசடியில், அரசியல்வாதிகள் முதல் உள்ளூர் ரெüடிகள் வரை பல தரப்பினருக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டது. அதிருப்தி குழுக்களுக்கு நிதியுதவி செய்தார்கள்.

 இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் போராட்டமும் வன்முறையும் நடந்தன. அதைப் புரட்சி என்று ஊடகங்களில் எழுத வைத்தார்கள். முடிவில் மொசாதேவின் ஆட்சியை அகற்றி பிரிட்டனும் அமெரிக்காவும் தங்களது ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டன.

 இவையெல்லாம் வெறும் கற்பனையோ கதையோ கிடையாது. சிஐஏவின் ஆவணங்களிலும், பிற நூல்களிலும் இந்தச் சதித் திட்டம் குறித்த ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன.

 ஈரானில் அகமதிநிஜாத்தை எதிர்த்து பச்சை இயக்கம் என்கிற பெயரில் போராடித் தோற்றுக் கொண்டிருக்கிறார்களே, அவர்களெல்லாம் மொசாதேவின் வழிவந்தவர்கள்.

 அன்றைக்கு மொசாதேவின் ஜனநாயக அரசை சதி செய்து தூக்கி எறிந்தவர்கள்தான், அகமதிநிஜாத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக பச்சை இயக்கத்துக்கு ஆதரவாக இப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறது என்று கூறுவது இதைத்தான்.

 மேற்கத்திய நாடுகள் என்ன குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், அணு ஆயுதம் தயாரிப்பது எங்கள் நோக்கமில்லை என்றுதான் ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது.

 ஒருவேளை அணுஆயுதம் தயாரிக்க முயன்றாலும், இன்றைய சூழலில் அதற்கான முழு உரிமையும், தேவையும் ஈரானுக்கு இருக்கிறது என்பதை கடந்த காலச் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

 அமெரிக்கா குற்றம்சாட்டியதைப்போல ரசாயன ஆயுதங்கள் இராக்கில் இருந்திருந்தால், சதாம் உசேனை இப்படித் தூக்கில் தொங்கவிட்டிருக்க முடியாது. அமெரிக்காவின் பேச்சுக்கு ஏமாறாமல், தனது அணு ஆயுதத் திட்டங்களைத் தொடர்ந்திருந்தால், கடாஃபிக்கு இப்படியொரு இழிநிலை நேர்ந்திருக்காது.

 லிபியா, இராக், ஆப்கானிஸ்தான் போன்றவற்றின் அழிவுக்குக் காரணம், அவற்றிடம் பேரழிவு ஆயுதங்கள் இல்லாததுதான்.

 வடகொரியாவை நெருங்க முடியாததற்குக் காரணம் அவர்களிடம் அணு குண்டுகள் இருப்பதுதான். இப்படியொரு சூழலில், அமெரிக்காவுக்கு நேரடியாகச் சவால்விட்டுக் கொண்டிருக்கும் ஒரு நாடு, பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கக்கூடாது என்று கூச்சலிடுவது, அந்த நாட்டை ஒழிப்பதற்கான சூழ்ச்சியல்லாமல் வேறென்ன?

 அணுஉலை, அணுகுண்டுகளுக்கு நாம் எதிரானவர்களாக இருக்கலாம். அதேநேரத்தில், லிபியாவுக்கும் இராக்குக்கும் ஏற்பட்ட நிலை தனக்கு ஏற்படாமல் இருக்க அணு ஆயுதம் அவசியம் என்று ஈரான் கருதுவதை எப்படித் தவறு என்று கூற முடியும்?

 புரட்சிகர பாடகர் டிரேசி சாப்மன் பாடல் வரிகளில் குறிப்பிடுவதைப்போல ஏவுகணைகளைக் கொண்டு மக்களைக் கொல்லும் படைகளைத்தான் நாம் அமைதி காக்கும் படைகள் என்கிறோம்.

 வல்லரசுகளின் தந்திர அரசியலில் சிக்கியிருக்கும் இந்த உலகில் வெறுப்புதான் அன்பு, பொய்தான் உண்மை, போர் என்றால் அமைதி, ஆம் என்றால் இல்லை. ஜனநாயகத்தின் காவலர்கள், அஹிம்சாவாதிகள், ரௌடி நாடு போன்றவையெல்லாம்கூட இவற்றைப் போன்ற பொருள் கொண்டவைதான்.
.

.

1 comment:

Anonymous said...

viswaroobam.com