Thursday, July 01, 2010

கெட்ட சொற்களஞ்சியமாகும் பதிவுலகம்!

மொழியில் நல்ல சொல் கெட்ட சொல் என்கிற பேதமில்லை. நமது மொழியாற்றலை அடுத்தவரைக் காயப்படுத்துவதற்காகப் பயன்படுத்தும்போதுதான் சில சொற்கள் கெட்ட சொற்களாகிப் போகின்றன எனக் கருதுகிறேன்.

எதை வேண்டுமானாலும் இணையத்தில் எழுத முடிகிறது. இப்போதைய பாணி திட்டுவது. புரட்சிகரமாக எழுதுவது என்பதற்கு பதிவுலக அகராதியில் திட்டுவது என்று பொருள் போலிருக்கிறது. பதிவு எழுதுவோரும் அதற்கு பதில் எழுதுவோரும் பின்னூட்டுகளை விட்டுச் செல்வோரும் ஒருவரையொருவர் திட்டுவதற்குப் பயன்படுத்தும் சொற்களையும் வாக்கிய விளையாட்டுக்களையும் பார்த்தால் தமிழ் கிட்டத்தட்ட செம்மொழியாகவே மாறிவிட்டது போலத் தெரிகிறது. திட்டுவது என்று பொதுவான முடிவுக்கு வந்தபிறகும் பதிவு என்றோ, கட்டுரை என்றோ, எதிர்வினை என்றோதான் அவற்றை வகைப்படுத்திக் கொள்கிறார்கள்.

மயக்கும் சொற் பிரயோகங்கள் மூலம் சிலர் இலக்கியவாதிகளாகத் தெரிகின்றனர். ஆனால் அவர்களும் மற்றவர்களைத் திட்டுவதைத்தான் முனைப்போடு செய்கின்றனர்.

பதிவர் ஒருவரை பொறுக்கி என்கிற அடைமொழியுடன் தலைப்பிட்டு ஒரு பதிவு எழுதப்பட்டிருந்தது. அந்தப் பதிவு முழுவதுமே வெற்றுத் திட்டுக்களால்தான் நிரம்பியிருந்தது. இப்படிப் புதிய சொற்களும் வாக்கிய அமைப்புகளும், புனைவுகளும் தோன்றுவது இணையமொழிக்கு நல்லதா? அதைப் புரட்சி அல்லது கட்டவிழ்ப்பு என்று கூறுவது எந்த வகையான நியாயம்?

அண்மையில் நண்பர் மூலம் இன்னொரு பதிவைப் படிக்க நேர்ந்தது. அந்தப் பதிவில் திட்டு வாங்கியவர் கீழ்கண்டவாறு அறிமுகப்படுத்தப்பட்டார்.

//
நாயகன் என்ற உரல் முகவரியுடன், சிதைவுகள் என்ற வலைப்பூ தலைப்புடன், தோழமையுடன் பைத்தியக்காரன் என்ற புனைப்பெயருடன், பூக்கோ, தஸ்தாவெஸ்கி, டால்ஸ்டாய் என தம்மை ஒரு உலக இலக்கிய ஆர்வளராகவும், பார்பனர்கள் என அறியபட்டவர்கள் செய்ததாக, நினைத்தையெல்லாம் பதிவாக எழுதி தன்னை ஒரு அறிவுஜீவியாக காட்டும் மற்றொரு பார்பன புற்றுநோயே தோழர்!?(வெட்கக்கேடு)....//


இதற்குப் பிறகு சம்பந்தப்பட்டவரைப் பற்றியோ அல்லது அவரது கருத்தைப் பற்றியோ ஆக்கப்பூர்வமாக எப்படி விமர்சித்துவிட முடியும்?  இத்தகைய தனிநபர் தாக்குதல்கள், சம்பந்தப்பட்டவரை நேரடியாகக் காயப்படுத்தும் என்பது மட்டுமல்லாமல், கருத்துக்களையும், விவாதம் செல்ல வேண்டிய திசையையும் திரித்துவிடக்கூடும்.

தமயந்தி நிழல்வலையில் பின்னூட்டங்கள் தணிக்கையில்லாமல் வெளியாகின்றன. இது முகமூடிகளுக்கு வசதியாகப் போய்விடுகிறது. சுதந்திரமும் ஒரு அனானி வசதியும் கொடுத்துவிட்டால் நம் நண்பர்களே நம்மைத் திட்டுவார்கள் என்பதற்கு நல்ல சான்று இது.

முட்டாள் என்று திட்டினாலே சிலருக்கு உயிரை அறுப்பது போன்ற வலி பிறக்கும். அப்படியிருக்கையில் நாய், பரதேசி, பொறுக்கி என்று திட்டுவதெல்லாம் எந்த வகையான நாகரிகமோ? கோபத்தை பொறுப்பான வாக்கியங்களால் உண்மையான அக்கறையுடன் வெளிப்படுத்த வேண்டும் என்பதை மொழி வல்லுனர்களும், இலக்கியவாதிகளும், அறிவு ஜீவிகளும், கட்டுரையாளர்களும், பதிவர்களும் வலியுறுத்த வேண்டும். ஆஃப்டர் ஆல் ஆனாலும் இது நமக்கு நண்பர்களையும், புகழையும், பணத்தையும், உணர்ச்சியையும் கொடுத்த மொழியல்லவா?

---------------------------------------------------------------------------------

அண்மையில் நண்பர் ஒருவர் என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். தங்கை, அக்கா என கூகுளில் தேடினால் ஏன் பாலியல் மற்றும் தகாத உறவுகள் பற்றிய கதைகள் வருகின்றன என்பதே அவரது கேள்வி. தங்கை எனத் தேடியதும் விக்கிபீடியாவில் இருந்து தங்கை என்ற உறவு பற்றி விளக்கங்கள் வந்தால் பரவாயில்லையே என்று சொன்னார். இது பழைய பிரச்னைதான் என்றாலும் மற்ற மொழியில் இது எப்படி என்பதற்காக மலையாளி நண்பர் ஒருவர் உதவியுடன் மலையாளத்தில் தேடினோம். விக்கிபீடியாவும் இன்னபிறவும் வந்தன. கன்னடமும் பரவாயில்லை. மற்ற மொழிகள் பற்றித் தெரியவில்லை.
..

..

.

2 comments:

Anonymous said...

You cant help it unless you block anonymous comments

Radhakrishnan said...

கடினம் தான்.