Saturday, April 10, 2010

வலையில் சிக்கும் தலைமுறை!

ஆடுகளை வளர்த்ததற்காக ஓர் ஊழியரை,​​ அமெரிக்க நிறுவனம் அண்மையில் பணி நீக்கம் செய்தது.​ இதென்ன கொடுமை;​ ஆடு வளர்த்தது எப்படிக் குற்றமாகும் என்று எண்ணத் தோன்றும்.​ ஆனால்,​​ அந்த ஊழியர் வளர்த்தது உண்மையான ஆடுகளை அல்ல.​ அவை பொய்யானவை.​ ஆடுகள் வளர்க்கப்பட்டது அலுவலகக் கம்ப்யூட்டரில்.

விஷயம் இதுதான்.​ விடியோ கேம்களின் அடுத்தநிலை இணையத்தில் ஆடப்படும் ஆன்லைன் விளையாட்டுகள்.​ 'விர்சுவல் ரியாலிட்டி' எனப்படும் உண்மை போன்ற மாயைதான் இன்றைய ஆன்லைன் விளையாட்டுகளின் மையக் கரு.

விவசாயம் செய்வது,​​ ஆடு வளர்ப்பது,​​ காட்டு விலங்குகளைப் பராமரிப்பது,​​ ஹோட்டல் நடத்துவது என எல்லாமே ஆன்லைனில் சாத்தியம்.​ ஒரு மணி நேரம்,​​ இரண்டு மணி நேரம் அல்ல,​​ ஆண்டுக்கணக்கில்கூட இந்த ஆட்டங்களை ஆடிக்கொண்டே இருக்க முடியும்.

இந்த ஆட்டங்களில் மூழ்கித் தூக்கத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறது இன்றைய இளைய தலைமுறை.​ இவர்கள் ஓடி விளையாடுவதில்லை.​ உட்கார்ந்து கொண்டோ,​​ படுத்துக் கொண்டோதான் விளையாடுவார்கள்.

'பேஸ்புக்' எனப்படும் சமூக வலைத்தளத்துடன் இணைந்த 'பார்ம் வில்லா' என்ற ஆட்டம்தான் ஆன்லைனில் இப்போது மிகவும் பிரசித்தி.​ விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது இந்த ஆட்டம்.​ இதுவும் ஆண்டுக்கணக்கில் ஆடக்கூடிய ஆட்டம்தான்.​ விதை விற்பனை,​​ மகசூல் அறுவடை,​​ பால் உற்பத்தி,​​ தோட்டப் பராமரிப்பு என உண்மையான விவசாயி செய்ய வேண்டிய பணிகள் அனைத்தும் இந்த ஆட்டத்தில் உண்டு.​ அடிப்படையில் இதெல்லாம் இலவசம்தான் என்றாலும்,​​ நம்முடைய தகவல்களை வணிகரீதியாகப் பகிர்ந்து கொள்வதன் மூலமாகவும்,​​ விளம்பரங்கள் ​ வழியாகவும் இணையதளத்துக்கு வருவாய் கிடைக்கிறது.

தற்போதைய மதிப்பீட்டின்படி,​​ கோடிக்கணக்கானோர் பார்ம் வில்லாவில் விவசாயம் செய்வதாக பேஸ்புக் சொல்கிறது.​ அலுவலக வேலை நேரத்தில் இப்படி விவசாயம் செய்ததால்தான் மேற்சொன்ன நபருக்கு வேலை போனது.

இதுபோன்ற வேறொரு ஆன்லைன் ஆட்டத்தில் மூழ்கி,​​ குழந்தைக்குப் பால் கொடுக்காமல் சாகடித்த தம்பதியைப் பற்றி அண்மையில் செய்தி வெளியாகி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தென்கொரியாவின் சியோல் நகரைச் சேர்ந்த அவர்கள் இருவரும் பிரியஸ் ஆன்லைன் என்ற தளத்தில் மாயக் குழந்தைக்கு பாலூட்டிச் சீராட்டி வளர்த்திருக்கின்றனர்.​ நாள்தோறும் பல மணி நேரம் இண்டர்நெட் மையங்களில் நேரத்தைப் போக்கியிருக்கிறார்கள்.​

அந்த நேரத்தில் 3 மாதமே ஆன அவர்களது சொந்தக் குழந்தை உணவில்லாமல் இறந்து போயிருக்கிறது.​ இது அசாதாரண சம்பவம்தான்.​ ஆனாலும்,​​ ஆன்லைன் ஆட்டங்கள் மக்களை எந்த அளவுக்கு மாயையில் மூழ்கச் செய்யக்கூடிய வலுக்கொண்டவை என்பதைப் புரிந்து கொள்ள இது நல்ல உதாரணம்.

எல்லா ஆன்லைன் ஆட்டங்களுமே மோசமானவை அல்ல.​ கல்விக்காகவும்,​​ மன அழுத்தம் ஏற்பட்டிருக்கும் நேரங்களில் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காகவும் ஒரு சில மணித்துளிகளிலேயே முடிந்துவிடக்கூடிய சில ஆன்லைன் ஆட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன.​ அறிவியல்,​​ கணிதம்,​​ சமூகம் தொடர்பான அறிவை வளர்ப்பதற்குப் பயன்படும் இணைய விளையாட்டுகளும் நிறையவே இருக்கின்றன.

ஆனால்,​​ அவையெல்லாம் மக்களைக் கவர்ந்ததாகத் தெரியவில்லை.​ நாள் கணக்கில்,​​ ஆண்டுக்கணக்கில் அடிமைப்படுத்தக்கூடிய விளையாட்டுகளுக்கும் பாலியல் ரீதியான,​​ வன்முறையைத் தூண்டும் சில விளையாட்டுகளுக்கும்தான் கவர்ச்சி அதிகமாக இருக்கிறது.​ இணையத்தின் மற்ற உள்ளடக்கங்களைப்போல மொழி ரீதியான தடையும் ஆன்லைன் ஆட்டங்களுக்கு இல்லை என்பதால்,​​ மிகவேகமாகவே இவை பிரபலமடைந்து விடுகின்றன.

குழந்தைகள்,​​ இளைஞர்கள்,​​ முதியவர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமே ஆன்லைன் விளையாட்டுகள் இருக்கின்றன.​ நவீன விளையாட்டுகளில் உலகமெங்கும் இருப்பவர்கள் இணைந்து ஆட முடிகிறது.​ கூடவே அரட்டையடிக்கவும் முடியும்.​ வெற்றியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.​ வெற்றி பெற்றவற்றைப் பிறருக்குப் பரிசளிக்கவும்(..?!)​ வசதியிருக்கிறது.​ இவையெல்லாம் மக்களைக் கவர்வதற்கான உத்திகள்.

ஆன்லைன் விளையாட்டுகளை ஆடும் அனைவரும் அவற்றுக்குள் மனதை முடக்கி அடிமையாகப் போய்விடுகின்றனர் எனக் கூற முடியாது.​ ஆனால்,​​ பெரும்பாலான ஆட்டங்களில் அடிமைப்படுத்தும் சூழ்ச்சி வலை பின்னப்பட்டிருக்கிறது.​ அது ஒரு போதை மாதிரி.

ஆட்டத்தைத் தொடங்கிய பெரும்பாலானோர் அவற்றை விட்டுவிட முடியாமல் திணறுகின்றனர்.​ இந்த ஆட்டங்களால்,​​ நேரம் விரையமாகிறது என்பதுடன்,​​ மணிக் கணக்கில் அசைவற்று ஒரே இடத்தில் இருப்பதால் உடல் நலமும் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இணையத்தில் வேறு எத்தனையோ மோசமான அம்சங்கள் நிறைய இருக்கத்தான் செய்கின்றன.​ கவனத்தைக் கவர்ந்து,​​ இழுத்துச் செல்லக்கூடியவை இங்கு அதிகம்.​ ஆனாலும்,​​ ஆன்லைன் விளையாட்டுகள்தான் மக்களின் அடிப்படை மனநிலையையே மாற்றக்கூடிய சக்தி கொண்டவையாக இருக்கின்றன.​ நல்லவை என்கிற போர்வையில் வருவதால் மற்றவற்றுக்கு ஈடான ஆபத்து இதிலும் இருக்கிறது.

இளம் வயதிலேயே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையானவர்கள்,​​ பொறுப்பான விவாதங்களில் பங்கெடுத்துக் கொள்ள முடியாதவர்களாகவும் நடைமுறையில் நட்பை உருவாக்கிக் கொள்ள முடியாதவர்களாகவும் மாறக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.​ ​

இந்த ஆபத்தை உணர்ந்துதான்,​​ பெரும்பாலான பள்ளிகள்,​​ கல்லூரிகளில் இணைய விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றன.​ பணிகளில் சுணக்கம் ஏற்படுவதால் பல நிறுவனங்களும் இவற்றைத் தடை செய்திருக்கின்றன.​ ஆனாலும்,​​ இவைகளால் மட்டுமே ஆபத்தை முழுமையாகப் போக்கிவிட முடியாது.

இணையத்தில் செலவிடும் நேரத்தைத் திட்டமிடுவது குறித்தும்,​​ இணையத்தில் செய்ய வேண்டிய பணிகளை உரிய முக்கியத்துவத்துடன் முடிப்பது குறித்தும் கல்வி நிறுவனங்களிலும்,​​ ஊழியர்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.​ அரசே இதைச் செய்தால் இன்னும் நல்லது.​ ஏனெனில் இது தனிநபரின் பிரச்னையல்ல,​​ தலைமுறையின் பிரச்னை.
..
.

7 comments:

நேசமித்ரன் said...

மிக அவசியமான ஒரு பதிவாகப் படுகிறது . சமூகத்தின் மாற்றங்கள் கலாச்சாரத் தொற்று நோயின் கூலி
மற்றுமொரு படி நிலை இது

இதன் வீச்சு ஸ்தம்பிக்க அல்லது இயக்கத்தை திசை திருப்புகிறது ஓபியம் போல அபின் போல

பகிர்ந்திருக்கும் விதம் க்ளாஸ்

Subha said...

//மிக அவசியமான ஒரு பதிவாகப் படுகிறது //

Amothikiren.

எல் கே said...

avasiyamana pathivu

கிருஷ்ண மூர்த்தி S said...

நல்லதொரு பாடத்தைச் சொல்லும் எச்சரிக்கைப் பதிவாக எழுதியிருக்கிறீர்கள்! மிகவும் நன்றி!

அக்கினிச் சித்தன் said...

செரியாச் சொன்னீங்கோ! அல்லாம் ஒரு அடிமைத்தனந்தானுங்களே!

புளியங்குடி said...

கருத்துக்களுக்கு மிக்க நன்றி!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in