Thursday, April 29, 2010

என்ன ஆனார் புலிகளின் நண்பர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்?

எழுந்திருக்கும் சந்தேகம் பெரும் விவகாரமானது என்பதால் கொஞ்சம் தயக்கத்துடனும் அச்சத்துடனுமே எழுதவேண்டியிருக்கிறது.

தற்கால அரசியல்வாதிகளில் போராளிகள் என்று சொல்லிக்கொள்ளக்கூடிய தகுதி ஒருசிலருக்கு மட்டுமே உண்டு. அவர்களில் ஒருவர்தான் ஜார்ஜ் பெர்னாண்டஸ். 1960-களிலேயே இந்தியாவைக் கலக்கியவர். அவரது தலைமையேற்கும் பண்பு பிறருடன் ஒப்பிட முடியாத அளவுக்குப் பெருமை கொண்டது.மாணவர் அமைப்புகளிலும் தொழிற்சங்கங்களிலும் தலைவராக இருந்து புரட்சி செய்திருக்கிறார்.

இந்திரா காந்தியை நடுநடுங்கச் செய்தவர். கோக கோலா மற்றும் ஐபிஎம் போன்ற நிறுவனங்களை நாட்டைவிட்டு வெளியேறச் செய்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக விடுதலைப் புலிகளையும் பர்மிய போராளிகளையும் வெளிப்படையாக ஆதரித்தவர்.

அப்படிப்பட்ட அரசியல்வாதி, அதுவும் கிறித்துவர், தீண்டத் தகாத கட்சியாகக் கருதப்பட்ட பாஜகவுடன் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் பல தேர்தல்களைச் சந்தித்திருக்கிறார். வாஜ்பாய் அரசில் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.

"இந்தியாவின் எதிரி சீனா" எனத் துணிச்சலுடன் சுட்டிக்காட்டிய இரண்டாவது தலைவர் அவர். என்ன காரணத்தாலோ, அவர் மீது "சவப்பெட்டி ஊழல்" சுமத்தப்பட்டது. தெஹல்கா என்கிற "புலனாய்வுப்" பத்திரிகை இவர் மீது ஆயுதபேர ஊழலைச் சுமத்தியது. இந்திய மக்களும் அதை நம்பினார்கள். சவப்பெட்டியிலுமா ஊழல் என்கிற கவர்ச்சிகரமான கேள்வி மக்களைக் கிறங்கடித்தது. மக்களவையில் அவர் பேச எழுந்திருக்கும்போதெல்லாம், காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையைவிட்டு வெளியேறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

எல்லாவகையான அரசியல்வாதிகளையும் கையாளத் தெரிந்திருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கு தனக்கு எதிரான காங்கிரஸின் சதியை முறியடிக்க முடியவில்லை. அவர் பதவியில் இருக்கும்வரை ஒரு புழுவைப் போலத்தான் நடத்தப்பட்டார். இத்தனைக்கும் அவர் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர். அந்தத் துருப்புச் சீட்டை அவர் இன்று வரைக்கும் பயன்படுத்தவில்லை என்பதும் ஆச்சர்யம்தான்.

ஒருவேளை அவர் தொடர்ந்து பதவியில் இருந்திருந்தால், இலங்கையிலும், பர்மாவிலும் நிலைமை வேறு மாதிரியாகியிருக்கும். சீனாவும் வாலைச் சுருட்டிக் கொண்டிருக்கும்.


கடந்த தேர்தலின்போது, உடல்நிலையும் மனநிலையும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டு பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளாலும் புறக்கணிக்கப்பட்டார். சுயேச்சையாக நின்று தோற்றுப் போனார். அதன்பிறகு மனநிலை சரியில்லாமல் போய்விட்டதாகச் செய்திகள் வந்தன.

எல்லா அரசியல் கட்சிகளாலும் ஒருகாலத்தில் விரும்பப்பட்ட ஒரு மாபெரும் போராளி இப்படி முகவரி இல்லாமல் ஆக்கப்பட்டதற்கு பின்னணியில் சர்வதேசச் சதி ஏதும் இல்லாமலா இருக்கும்?
,,
..

1 comment:

Anonymous said...

செவ்வாய் கிரக சதியாக கூட இருக்கலாம்!!!!!!!!!!!!!!! :):):):)