Thursday, December 03, 2009

தடம் மாறும் ஊடகங்கள்? - 1


ஊடகம் என்பது பலதரப்பட்ட பிரிவுகளை உள்ளடக்கியது. அவர்களுள் செய்தியாளர்கள், துணை ஆசிரியர்கள் ஆகியோர் மிக அடிப்படையான பணிகளைச் செய்வோர். பத்திரிகைத் தலைமையின் கொள்கைக்கு ஏற்றபடிதான் இவர்கள் நடந்து கொள்ள வேண்டியிருந்தாலும், முடிந்தவரை சமூக அக்கறை கொண்ட செய்திகளை இவர்களால் வழங்க முடியும்.

மின்னணு ஊடகமாக இருந்தாலும், அச்சு ஊடகமாக இருந்தாலும் திறமையான செய்தியாளர்களைக் கொண்டதாக இருக்க வேண்டியது அவசியம். செய்தியாளர்கள், ஊடகங்களின் பிரதிநிதிகளாகச் செயல்படுகின்றனர். அதிகாரம்மிக்க இடங்களில் ஊடுவியும், மக்களோடு மக்களாகக் கலந்தும் தரமான செய்திகளைச் சேகரிக்க வேண்டிய பொறுப்புமிக்க பணி அவர்களுடையது. சில இடங்களில் அதிகாரமாகவும், சில இடங்களில் பணிவாகவும், சில இடங்களில் நாசூக்காகவும் செய்தியாளர்கள் செயல்படவேண்டியிருக்கிறது. அடிப்படையாகவே பலதரப்பட்ட விஷயங்களில் அறிவும், மனிதர்களைக் கையாளும் திறமையும், முடிவெடுக்கும் திறனும், அபாரமான நினைவாற்றலும், புத்திசாலித்தனமும், நடப்புகளை உற்றுநோக்கும் ஆர்வமும் செய்தியாளர்களிடம் இருக்க வேண்டும். செய்திகளைத் தர வேண்டுமென்பதற்காக ஊடகத்தின் கொள்கையும் சட்டத்தையும் மீற முடியாது. தரமான செய்திகளைத் தவறவிடவும் கூடாது. மனசாட்சிக்கும் மதிப்பளிக்கவேண்டும். இப்படி எல்லா இலக்கணங்களும் பொருந்திய செய்தியாளர்கள் குறைந்துவிட்டனர். ஊடகங்கள் எல்லாமே வணிகமயமாகிவிட்டதால், செய்தியாளர்களும் அதற்கேற்றாற்போல் நடந்துகொள்கின்றனர். பேரும் புகழும் கிடைக்கிறது என்பதற்காக அடிப்படையான மரபுகளைக்கூட இன்றைய செய்தியாளர்கள் பலர் பின்பற்றுவதில்லை. கல்லூரியிலும் இவற்றைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு இல்லை. பணியில் சேர்ந்தபிறகு கற்றுக்கொடுக்கவும் ஆளில்லை.

அப்படி எந்த இலக்கணமுமே இல்லாமல், மாவீரர் தினத்தில் பொட்டு அம்மான் வரப் போவதாக ஒரு பத்திரிகை அண்மையில் செய்தி வெளியிட்டது. இதற்கான எந்த உறுதியான மூலத்தையும் அந்தச் செய்தி சுட்டிக் காட்டவில்லை. எல்லாம் வெறும் ஊகம். அப்படியொரு ஊகத்தை அப்போது வெளியிட வேண்டிய அவசியமேயில்லை. அந்தச் செய்தி வெளியிடப்பட்டதன் நோக்கம் என்ன? தமிழர்களை உற்சாகப்படுத்தவா? அல்லது இலங்கைப் படையை எச்சரிக்கை செய்யவா? ஏற்கெனவே நொந்து போயிருக்கும் தமிழர்களை மேலும் ஏமாற்றியதாகாதா இது?

ஒரு செய்தி கவனிக்கப்படாமலேயே கூட போகலாம். ஆனால், வெற்று பதற்றத்தை ஏற்படுத்தும் செய்தியை பிரம்மாண்டமாக்கவே கூடாது. இதைச் செய்ய வேண்டிய பொறுப்பு பத்திரிகையாளர்களுக்கு இருக்கிறது.

1 comment:

Jebastin said...

You are correct;

In 2 year, at dictionary you could see media=exaggerated news ;)

Even Junier vikatan also became like a mini porn magazine.

People's metality also needs that sort of.

I don't think we can't blame media alone.