Monday, December 14, 2009

தகவல் உரிமைச் சட்டம்: புலியைப் பூனையாக்கி...

பஞ்சாபைச் சேர்ந்த ஒருவர், அங்குள்ள சிவப்பு நிற அரசு எண்ணெய் நிறுவனத்திலிருந்து ஒரு தகவலைக் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். இதற்காக நகல் கட்டணமாக ரூ.100ம் சேர்த்து அனுப்பியிருந்தார். இதைப் பார்த்த ஆயில் நிறுவன தகவல் அதிகாரி, 40 பக்க நகலுக்கு ஒரு பக்கத்துக்கு ரூ.10 வீதம் ரூ.400 அனுப்ப வேண்டும் என பதில் எழுதினார்.

நம்மவர், மிரளவில்லை. கட்டண விதிமுறையைக் காட்டி, ஒருபக்கத்துக்கு ரூ.2 போதும் என மற்றொரு கடிதம் எழுதினார். அந்த அதிகாரிகள் நம்மவரை இழுத்தடிக்க நினைத்தார்கள் போலும். ரூ. 400 கொடுத்தால்தான் தகவல். இல்லையென்றால் முடியாது எனப் பிடிவாதமாகச் சொல்லி விட்டார்கள்.

நம்மவர், தில்லியிலுள்ள தலைமைத் தகவல் ஆணையரிடம் முறையிட்டார். ஆயில் நிறுவன அதிகாரிகளுக்குச் சம்மன் அனுப்பப்பட்டது. விசாரணை நடந்து முடிந்து. ஏற்கெனவே செலுத்தப்பட்ட கட்டணத்தில் தகவல் நகலைக் கொடுக்கும்படி நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது. நம்மவருக்கு கேட்ட தகவல் உரிய கட்டணத்தில் கிடைத்தது.

கதை முடிந்துவிடவில்லை....

வழக்கு நடந்தபோது, தில்லிக்கும் சண்டீகருக்கும் ஆயில் நிறுவன அதிகாரிகள் வந்து போன செலவு எவ்வளவு எனக் கேட்டு இன்னொரு மனுவை அனுப்பினார். பதில் வந்தது. பலமுறை விமானத்தில் சென்று வந்ததற்கு சில லட்சங்கள் வரை செலவாகிவிட்டதாக. முன்னூறு ரூபாய் கட்டணத்துக்காக செலவிடப்பட்டது லட்சக் கணக்கில். எல்லாம் அரசுப் பணம். மக்கள் பணம்.

பல சமயங்களில் அரசு நிர்வாகத்தின் இதுபோன்ற அவலட்சணங்களை தகவல் சட்டம் வீதிக்குக் கொண்டுவந்திருக்கிறது.

மன்மோகன் அரசின் மிகப்பெரும் சாதனையாகக் கருதப்படுவது இந்தச் சட்டம். இந்தச் சட்டப்படி, அரசு வேலைகளைக் கண்காணிக்கலாம், ஆவணங்களைச் சரிபார்க்கலாம், அலுவலகங்களைச் சோதனையிடலாம். அதெப்படி, இப்படியொரு சட்டத்தை நமது அரசியல்வாதிகள் அனுமதித்தார்கள். தங்களுக்குத் தாங்களே குழிபறித்துக் கொண்டதெப்படி? அவர்கள் சிக்கிக்கொள்ள அவர்களே வலை தயாரித்தது ஏன் என்பன போன்ற சந்தேகங்களெல்லாம் நமக்கு உண்டு.

தெரிந்தோ தெரியாமலோ இப்படியொரு சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. அவ்வப்போது, இந்தச் சட்டம் அரசியல்வாதிகளை அவ்வப்போது சீண்டத் தவறியதில்லை. பார்த்தார்கள்,  அந்தச் சட்டத்தின் கொடுக்குகளையெல்லாம் பிய்த்தெறியத் தொடங்கிவிட்டார்கள்.

சட்டத்திலிருந்து விலக்களிக்கிறேன் என்று கூறி, எங்கெல்லாம் ஊழல் நடக்கச் சாத்தியமோ அங்கெல்லாம், தகவல் சட்டத்துக்கு வேலையில்லை என்று கூறிவிட்டார்கள். இவர்களது கணக்குப்படி, பிரதமர் அலுவலக நடவடிக்கைகள், அமைச்சர்களின் சொத்து விவரம் போன்றவை மக்கள் தெரிந்துகொள் அவசியமில்லாதவை. இப்போது, ஐஏஎஸ் அதிகாரிகளையும் இந்த விலக்குப் பட்டியலில் சேர்த்துவிட முனைத்திருக்கிறார்கள்.

அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் தவிர வேறு யாரால் பெரிய ஊழலைச் செய்ய முடியும் எனத் தெரியவில்லை.

போகிற போக்கைப் பார்த்தால், பள்ளிக்கூடங்களை மட்டும்தான் சோதனையிட முடியும். ஸ்கூல் வாத்தியார் லஞ்சம் வாங்குகிறாரா என்று மட்டும்தான் நம்மால் கண்காணிக்க முடியும் போலிருக்கிறது.

ஒவ்வொரு மாநிலமும் எவ்வளவு வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குகிறது என்பதை இந்த விலக்குப் பட்டியலைப் பார்த்தாலே சொல்லிவிட முடியும்.

இந்தப் பதிவில் நான் எந்த மாநிலத்தையும் குறை சொல்ல முனையவில்லை. ஆனால், இந்தியாவிலுள்ள மாநிலங்களையெல்லாம் இந்த விலக்குப் பட்டியல் வழியாக ஒப்பிட்டுப் பாருங்கள். இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களெல்லாம் நேர்மையாகச் செயல்படத் துணிந்திருக்கின்றன என்று தெரியும்.


.

6 comments:

nerkuppai thumbi said...

தகவல் அறியும் உரிமைச் சட்டம் சரியாகப் பயன் படுத்தப்பட்டால் அரசின் திட்டங்கள் உருப்பெற தாமதம் என் வந்தது என அறியலாம்; அரசும் குறிப்பாக அதிகாரிகளும் தம் நடை முறையை சீர் படுத்த வகை பிறக்கும்.

ஆனால், நடைமுறையில், பழைய ஊழியர்கள் தம் அதிகாரியை குறை சொல்லும் நடந்த சம்பவங்களின் அல்லது முடிவுகளின் விவரம் கேட்டு, அவரை
மூக்கு உடைக்க வேண்டும் என்று அதிகமாக முயல்வது வழக்கமாகி விட்டது. இதனால், பைசா பெறாத விவரங்களை குடைந்து குடைந்து கேட்பது, விவரங்கள் வந்தவுடன், தம் நண்பர்கள் வட்டத்தில் அவரை பலி அல்லது பழி வாங்கி விட்டேன் என பீத்திக் கொள்வது இது தவிர வேறு ஒன்றும் நடக்கவில்லை.

பத்திரிக்கைகளும், அதிகாரிகளின் தவறுகளால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் சரிவர, சரியான சமயத்தில், அல்லது அதிகம் செலவில், அல்லது கையூட்டு கலந்து நிறைவேற்றப்படுகிறது என்று பதித்து, அரசு அலுவலங்களில் முன்னேற்றம் காண வேண்டும்.

பொது மக்கள் நன்மைக்காக பயன் இல்லாத விஷயங்களை கேட்டு, அரசு அதை பலவீனப் படுத்த சாக்குகள் கொடுக்கக் கூடாது. அரசும் அந்த சட்டத்தின் "விஷ" பற்களை பிடுங்க முயற்சிக்கலாம் ; அதை தடுக்க வேண்டும்

தமிழ் உதயம் said...

ஆட்சியாளர்கள் இந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தை அமுல் படுத்தியபோது மக்கள் இந்த அளவு விழிப்புணர்வுடன் செயல்பட்டு இந்த சட்டத்தை பயன் படுத்த துவங்குவார்கள் என்று நினைத்து இருக்க மாட்டார்கள். சும்மா வெட்டி பந்தாவுக்கு சட்டத்தை கொண்டு வந்துவிட்டு இன்று ஏன்டா இந்த சட்டத்தை கொண்டு வந்தோம் என்று எண்ண துவங்கிய காரணத்தால் இப்போது சட்டத்தில் மாற்றங்களை விரும்புகிறார்கள். அதாவது இந்த சட்டத்தில் ஓட்டைகளை ஏற்படுத்த முனைகிறார்கள். எப்போதும் அரசியல்வாதிகள் மக்களுக்காக சட்டங்களை இயற்றுவதில்லை. தங்களுக்கு சாதகமாக அமைவதையே விரும்புகிறார்கள்
மேற்கண்டவை நான் தகவல் அறியும் சட்டம் குறித்து தினமணி இணையத்துக்கு அனுப்பிய கருத்துரை. தங்களுக்கான கருத்துரையும் இதுவே

தமிழ் உதயம் said...

ஆட்சியாளர்கள் இந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தை அமுல் படுத்தியபோது மக்கள் இந்த அளவு விழிப்புணர்வுடன் செயல்பட்டு இந்த சட்டத்தை பயன் படுத்த துவங்குவார்கள் என்று நினைத்து இருக்க மாட்டார்கள். சும்மா வெட்டி பந்தாவுக்கு சட்டத்தை கொண்டு வந்துவிட்டு இன்று ஏன்டா இந்த சட்டத்தை கொண்டு வந்தோம் என்று எண்ண துவங்கிய காரணத்தால் இப்போது சட்டத்தில் மாற்றங்களை விரும்புகிறார்கள். அதாவது இந்த சட்டத்தில் ஓட்டைகளை ஏற்படுத்த முனைகிறார்கள். எப்போதும் அரசியல்வாதிகள் மக்களுக்காக சட்டங்களை இயற்றுவதில்லை. தங்களுக்கு சாதகமாக அமைவதையே விரும்புகிறார்கள்
மேற்கண்டவை நான் தகவல் அறியும் சட்டம் குறித்து தினமணி இணையத்துக்கு அனுப்பிய கருத்துரை. தங்களுக்கான கருத்துரையும் இதுவே

புளியங்குடி said...

மக்களுக்குள் பொறுப்பற்றதனம் இருக்கும்வரை உரிமைகளெல்லாம் வீணாக்கப்படும் என்பது உண்மைதான் நெற்குப்பைத் தும்பி!

கருத்துக்கு நன்றி தமிழ் உதயம்.

அத்திரி said...

நல்ல தொகுப்பு

திருவாரூர் சரவணா said...

மக்களின் பிரதிநிதியாக வந்திருக்கும் அரசியல்வாதிகளின் சொத்து விவரம் மக்களுக்கு தேவையில்லையாமா? இதுக்கும் நீதிமன்றத்துக்கு போய் ஏதாவது ஒருத்தரோட தேரை இழுத்து தெருவுல விடமுடியுமானு பார்க்கணும்.