Wednesday, November 08, 2006

அமெரிக்காவின் அதிநவீன பூச்சிப் படை

இரண்டாம் உலகப் போரின் போது பூனைகளின் உடம்பில் வெடிகுண்டுகளை கட்டிவைத்து அவற்றை எதிரிகளின் கப்பலைத் தகர்க்க பயன்படுத்தினர். அதே போல் வெளவால்களின் உடம்பில் எரியக் கூடிய பொருட்களை கட்டி வைத்து அவற்றை மயக்க நிலைக்கு உட்படுத்தி எதிரிகளின் நகரங்களையும் தொழிற்சாலைகளையும் அழிப்பதற்காக பயன்படுத்தினர். வியட்நாம் போரின் போது டால்பின்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்காவோ அல்லது மற்ற நாடுகளோ இதனை முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை.
இவற்றிற்கெல்லாம் மேலாக தற்போது அமெரிக்காவின் பென்டகன், தொலைவிலிருந்து கட்டுப்படுத்தக் கூடிய பூச்சிகளைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி, ஒரு சிறிய மின்னணு கட்டுப்பாட்டு அமைப்பு கூட்டுப்புழு பருவத்திலிருக்கும் பூச்சிகளின் உடம்பில் நுழைக்கப்படும் கூட்டுப்புழு, வளர்ந்து பூச்சியாக மாறும்போது இந்த மின்னணு அமைப்பு பூச்சியின் உடம்பில் ஒன்றிணைந்து விடும். அதன் பின்னர் அந்த பூச்சிகள் எங்கு பறக்க வேண்டும் என்பதை கட்டுப்பாட்டு அறையிலிருந்து கட்டுப்படுத்தலாம். அந்த பூச்சியின் உடம்பிலுள்ள மின்னணு கட்டுப்பாட்டு அமைப்பு, எதிரிகளின் முகாம்களில் என்னென்ன வெடிபொருட்கள் இருக்கின்றன, எங்கெங்கு முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன, அவர்கள் என்ன திட்டமிடுகிறார்கள் என்பது போன்ற தகவல்களை உடனுடக்குடன் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்கும். இந்த திட்டம் சோதனை நிலையில் தான் இருக்கிறது என்றாலும் மிக விரைவில் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே குளவிகளையும், தேனீக்களையும் இதே மாதிரியானதொரு திட்டத்தி;ற்காக பயன்படுத்தி தோல்வியுற்ற அமெரிக்காவின் இந்த புதிய திட்டம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக பட்ஜெட்டில் 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில் உலகில் புதுவிதமான போர்க்களங்கள் உருவாகி மனித சமூகத்தை அச்சுறுத்தும் என்பது தான் தற்போதைய கவலை.


No comments: