Tuesday, November 17, 2009

மத்திய கிழக்கில் யுத்த வாசனை!

உலகில் எந்தெந்த நாடுகளிடம் அணு ஆயுதம் இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரிந்த ஒரு பட்டியல் இருக்கிறது. ஏ.க்யூ.கானின் அணு ஆயுதக் கள்ளச் சந்தை விவகாரம் வெளியான பிறகு இதுபோன்ற பட்டியலுக்கும் உண்மை நிலைக்கும் தொடர்பே இல்லை என்கிற முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கிறது. இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக அண்மையில் ஒரு செய்தி மத்திய கிழக்கில் இருந்து வந்திருக்கிறது.

  சிரியா அதிகாரப்பூர்வமான அணுஆயுத நாடல்ல. ஆனால், இந்த நாட்டில் ஓர் அணுஉலை இருந்ததாகவும், அதனை இரு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் விமானப்படை தகர்த்துவிட்டதாகவும் அண்மையில் தகவல் வெளியானது. எந்த மாதிரியான உத்திகளைப் பயன்படுத்தி இந்த அணுஉலை தகர்க்கப்பட்டது என்பதும் கட்டுரையாக வெளிவந்திருக்கிறது.

  சிரியாவின் உயர் அதிகாரி ஒருவர் ஹோட்டல் அறையில் தனது லேப்டாப் கணினியை விட்டுச் சென்றிருக்கிறார். அதில் "மால்வேர்' எனப்படும் நச்சு நிரல்களைப் பதிவு செய்து சிரியாவின் நடவடிக்கைகளைக் கண்காணித்திருக்கிறது இஸ்ரேலின் மொஸôத். இப்படித் தெளிவான விவரங்கள் கட்டுரையாக வெளியாகி இருப்பதால், சிரியாவில் ஓர் அணுஉலை இருந்ததும், அதை இஸ்ரேலிய விமானங்கள் தரைமட்டமாக்கியதும் உண்மையாகவே கருதப்படுகின்றன.

  அப்படியானால், இரு ஆண்டுகளுக்கு முன்பு தனது அணு உலை தகர்க்கப்பட்டபோது சிரியா என்னதான் செய்து கொண்டிருந்தது? நாட்டுக்குள் அத்துமீறிப் புகுந்து இஸ்ரேலிய விமானங்கள் குண்டுவீசியதை சிரியா ஏன் பகிரங்கமாக அறிவிக்கவில்லை? திருடனுக்குத் தேள் கொட்டியது என்பார்களே அதே கதைதான்.

  சிரியா, ஈரான், வடகொரியா ஆகியவை கூட்டாளிகள். இவை மூன்றும் ஏ.க்யூ.கானின் கள்ளச்சந்தை வலையின் அங்கங்கள். அந்த உறவின் அடிப்படையில்தான் 2004-ம் ஆண்டிலேயே வடகொரியாவிலிருந்து அணு மூலப்பொருள்களையும் தொழில்நுட்பங்களையும் சிரியா பெற்றிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. சர்வதேச விதிமுறைகளை மீறிய இந்த நடவடிக்கைகள் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகக்தான் சிரியா எந்தப் பதில் தாக்குதலையும் நடத்தவில்லை என்பது தெரிகிறது. ஆனால், இதுபோன்ற வெளிவராத மர்மங்கள் உலகமெங்கும் இருக்கக்கூடும் என்பதுதான் ஆபத்தான விஷயம்.

  ஏற்கெனவே, கசப்பு நிறைந்த மத்திய கிழக்கு உறவுகளில் அணு ஆயுதங்கள் நுழைவது உலகுக்கு உகந்ததல்ல. அதுவும் ஹமாஸýம் ஹிஸ்புல்லாவும் பிராந்திய அரசியல் சூழலை நிர்ணயிக்கும் கருவிகளாக இருக்கும்போது, அணு ஆயுதங்கள் பொறுப்பற்றவர்களின் கைகளுக்குப் போகும் வாய்ப்பிருக்கிறது. இவ்வளவு பெரிய அபாயம் இருப்பதால், நட்புறவுடன் இல்லாவிட்டாலும், குறைந்தபட்ச அரசியல் உறவுகளையாவது மேம்படுத்த இந்த நாடுகள் முயற்சிக்க வேண்டும் என்பதுதான் நடுநிலை அரசுகளின் எதிர்பார்ப்பு. ஆனால், இப்போதைய செய்திகள் அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதாக இல்லை.

  இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்து அழித்தே தீருவோம் என எத்தனையோ முறை ஈரானியத் தலைவர்கள் வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள். சிரியா மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினருடன் இருக்கும் நெருங்கிய உறவைக் கொண்டு இன்னொரு "யூத அழிப்பை' நடத்துவதற்கு ஈரான் திட்டமிடுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறது.

  இந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில் மத்திய தரைக்கடலில் ஈரானிலிருந்து சிரியாவுக்கு வந்த "ஆயுதக் கப்பலை' சுற்றிவளைத்துப் பிடித்திருக்கிறது இஸ்ரேல். அந்தக் கப்பலில் இருந்து நவீன ரக ராக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அறிவித்திருக்கிறது. ஆனால், இது வெறும் தானியக் கப்பல் என்று சிரியாவும் ஈரானும் மறுத்திருக்கின்றன.

  இன்னொரு பக்கம், லெபனானில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் அரசு அமைக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் ஹிஸ்புல்லா ஆதரவாளர்கள் தோற்றுப்போனார்கள். ஆனாலும், அரசில் தங்களுக்குப் போதிய இடமளித்தால்தான் ஆட்சியமைக்க முடியும் என ஹிஸ்புல்லா நெருக்கடி கொடுத்து வந்தது. இதனால், வெற்றி பெற்ற அணியினரால் அரசு அமைக்க முடியவில்லை. இப்போது வேறு வழியின்றி, ஹிஸ்புல்லா அணியினருக்கும் அரசில் இடமளிக்க வெற்றி பெற்ற கூட்டணி ஒப்புக்கொண்டிருக்கிறது. ஹிஸ்புல்லாவின் இந்த "மிரட்டலுக்கு'ப் பின்னால், சிரியாவும் ஈரானும் இருப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது.

  ஹமாஸ் தரப்பிலிருந்தும் இஸ்ரேலுக்கு மிகப்பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினர், கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேலுக்கு பெரிய அச்சுறுத்தலாகவே இருக்கின்றனர். எல்லையையும், எல்லையோர நகரங்களையும் ராக்கெட் தாக்குதல் நடத்தி இஸ்ரேலைச் சீண்டி வந்த இவர்கள், புதிய வகை ராக்கெட்டுகளை வெற்றிகரமாகச் சோதனை செய்திருக்கிறார்கள். இந்த ராக்கெட்டுகளைக் கொண்டு, டெல் அவிவ் நகர்வரை தாக்க முடியும். பாலஸ்தீனப் பகுதிகளில் யூதர்களைக் குடியமர்த்துவதை நிறுத்தாவிட்டால், இஸ்ரேலைத் தாக்குவோம் எனவும் ஹமாஸ் எச்சரித்துள்ளது.

  பாலஸ்தீனத்தின் மேற்குக்கரையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ஃபதா கட்சியின் முகமது அப்பாஸ் போட்டியிட மாட்டார் எனத் தெரிகிறது. இஸ்ரேலுடன் ஓரளவு நல்லுறவைப் பேணிவரும் இவர், ஆட்சியிலிருந்து போய்விட்டால், மேற்குக் கரையிலிருந்தும் இஸ்ரேலுக்கு நெருக்கடி வரப்போவது உறுதி.

  ஈரான், சிரியா, லெபனான், காஸô, மேற்குக்கரை எனப் பல பக்கத்திலிருந்தும் நெருக்கடி வந்தால், இஸ்ரேல் தனது மேற்கத்திய தோழமையுடன் கூடிய முழு பலத்துடன் தாக்குதல் நடத்தும். அது பிராந்திய அளவிலான பெரும் போருக்கு வழிவகுக்கும். இன்றைக்கு இந்தப் போர் ஏற்படுவதற்கான எல்லாச் சூழலும் இருப்பதாகவே தெரிகிறது. யாரும் இறங்கி வராத நிலை தொடர்ந்தால், உலகமே நினைத்தால்கூட, பிராந்தியப் பதற்றத்தை மட்டுமல்ல, "யூத அழிப்பை' கூடத் தவிர்க்க முடியாது.

No comments: