Sunday, November 22, 2009

இந்தியாவில் மனித மூலதன அமைப்பு (மொழிபெயர்ப்பு)

    மனிதனின் பரிணாம வளர்ச்சியில் ஒரு அம்சம் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியது. மனிதன் தனக்குத் தெரிந்த அறிவை சேர்த்து வைத்து பிறருக்குத் தெரியுமாறு பரப்புவதுதான் அது. உரையாடுவதன் மூலமாகவும் பாடுவதன் மூலமாகவும் உரையாற்றுவதன் மூலமாகவும் மனிதன் இதைத் செய்கிறான். எனினும் திறம்படச் செயலாற்றுவதற்கு முறையான பயிற்சி வேண்டும் என்பதன் அவசியத்தை அவன் விரைவிலேயே உணர்ந்தான். படிக்காத ஒருவரைவிட படித்த ஒருவரால் திறம்படப் பணியாற்ற முடியும் என்பது நமக்குத் தெரியும். படித்தவர் அதிக வருவாயை ஈட்டி அதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறார்.



    கல்வி ஒருவருக்கு சம்பாதிக்கும் திறமையை மட்டும் தருவதில்லை, இதுபோக சில மதிக்கத்தக்க பலன்களையும் அது தருகிறது; வாழ்க்கையில் தனக்குப் பிடித்தவற்றைத் தேர்ந்தெடுக்க கல்வி உதவுகிறது. சமூகத்தில் பெருமையுடன் வாழ வழி செய்கிறது. சமூகத்தில் நடக்கும் மாற்றங்களைப் புரிந்து கொள்வதற்குத் தேவையான அறிவை வழங்குகிறது. புதுமையான ஆக்கப்பூர்வமான பணிகளை ஊக்குவிக்கிறது. இது தவிர கல்வி அறிவு பெற்ற பணியாளர்களால் புதிய தொழில்நுட்பங்களை எளிதாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. அதனால்தான் பொருளாதார வளர்ச்சியை முடுக்குவதற்கு மக்களுக்கு கல்வி அறிவைப் புகட்டுவது அவசியம் என பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.


    நிலம் போன்ற இயற்கையில் இருக்கும் வளங்களை தொழிற்சாலைகள் போன்ற மூலதனங்களாக மாற்றலாம். அதேபோல், மாணவர்கள் போன்ற மனித வளத்ததை மன மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்ற மனித மூலதனமாக மாற்றலாம். ஒவ்வொரு சமூகத்துக்கும் முதலில் தேவை மனித மூலதனம்தான். அதுவும் படித்து பயிற்சி பெற்ற பேராசிரியர்கள் மற்றும் வித்தகர்களாக இருப்பவர்கள் அவசியம் தேவை. அவர்களால் மேலும் பல மனித மூலதனத்தை உருவாக்க முடியும். அதாவது ஒரு பேராசிரியர் பல்வேறு மருத்துவர்கள், பொறியாளர்களை உருவாக்குவது போன்று. இதனால் மனித மூலதனத்தைப் பெருக்குவதற்கு நாம் முதலீடு செய்தால் அது மனித வளத்தை மனித மூலதனமாக மாற்ற உதவும் என்பது தெளிவாகிறது.



    மனித மூலதனத்தைப் பற்றிப் புரிந்து கொள்வதற்குக் கீழ்க்காணும் சில கேள்விகள் பயன்படும்.



    1. மனித மூலதனத்துக்கான ஆதாரங்கள் என்னென்ன?

    2. மனித மூலதனத்துக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?

    3. மனித மூலதன அமைப்பு, மனிதனின் ஒட்டுமொத்த வளர்ச்சியுடன் தொடர்புடையதா?

    4. இந்தியாவில் மனித மூலதன அமைப்பை மேம்படுத்துவதில் அரசு என்னென்ன செய்ய முடியும்?



மனித மூலதன ஆதாரங்கள்


    கல்வியில் முதலீடு செய்வதே மனித மூலதனத்தின் முக்கிய ஆதாரமாகும். இது தவிர வேறுபல ஆதாரங்களும் உள்ளன. சுகாதாரம், வேலைக்கான பயிற்சி, இடம்பெயர்வு, தகவல் ஆகியவையும் மனித மூலதனத்துக்கான வேறு ஆதாரங்களாகும்.



    பெற்றோர்கள் ஏன் கல்விக்காக பணத்தைச் செலவு செய்கிறார்கள்? தனிநபரின் கல்விக்காகச் செய்யும் செலவு, நிறுவனங்கள் தங்களவு வருவாயைப் வருங்காலத்தில் பெருக்கிக் கொள்ளலாம் என்ற நோக்கத்துடன் தங்களுக்குத் தேவையான மூலதனக் கருவிப் பொருள்களை வாங்குவதற்காகச் செய்யும் செலவுக்குச் சமமாகும். அதேபோல், தனிநபரின் கல்வியில் செய்யப்படும் மூதலீட்டுக்குப் பின்னால் வருங்காலத்தில் அவர்களின் வருவாயைப் பெருக்கிக் கொள்ளமுடியும் என்ற நோக்கம் இருக்கிறது.



    இதேபோல், சுகாதாரமும் தனிநபர் வளர்ச்சிக்காகப் பயன்படுவதைக் காட்டிலும் நாட்டின் வளர்ச்சிக்காகப் பயன்படுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.



    நோய்வாய்ப்பட்டவர், ஆரோக்கியமானவர்; இவர்களில் யார் சிறப்பாக வேலை செய்வார்? நோய்வாய்ப்பட்ட ஒரு தொழிலாளருக்கு மருத்துவ வசதி கிடைக்கவில்லை எனில், அவர் வேலை செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார். அவரது உற்பத்தித் திறன் குறைகிறது. எனவே, சுகாதாரத்துக்காகச் செலவிடுவது மனித மூலதன அமைப்பில் முக்கியப் பங்குவகிக்கிறது.



    நோய் தடுக்கும் மருந்துகள் (தடுப்பூசி), நோய் நீக்கும் மருந்துகள் (நோய் வாய்ப்பட்டிருக்கும்போது தரப்படும் மருந்துகள், சமூக மருந்துகள் (சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது), பாதுகாப்பான குடிநீர் வழங்குவது, சுகாதார வசதிகளைச் செய்து தருவது ஆகியவை சுகாதாரத்துறையில் செய்யப்படும் செலவுகளாகும். சுகாதாரச் செலவுகள் ஆரோக்கியமான தொழிலாளர்களை வழங்குவதால், அது மனித மூலதனத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.



    நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வேலையுடனே பயிற்சியளிக்கின்றன. இது போன்ற பயிற்சிகள் பல்வேறு வகைகளில் உள்ளன. திறன் பெற்ற தொழிலாளர் ஒருவரின் கீழ் புதிய தொழிலாளர்கள் பயிற்சி பெறலாம் அல்லது நிறுவனத்துக்கு வெளியே பயற்சியளிக்கும் நிறுவனத்தில் பயிற்சிக்காக ஊழியர்களை அனுப்பி வைக்கலாம். இந்த இரு முறைகளிலும் நிறுவனம் தங்களது ஊழியர்களின் பயிற்சிக்காக செலவு செய்தாக வேண்டும். எனவே  பயிற்சிக்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட காலம் பணியாற்ற வேண்டும் என நிறுவனங்கள் தங்களது ஊழியர்களைக் கட்டாயப்படுத்துகின்றன. அந்த காலகட்டத்தில் பயிற்சிக்காலத்தில் நிறுவனம் இழந்த உற்பத்தித் திறனை ஈடுகட்டும். அதேபோல் பயிற்சிக்காக நிறுவனங்கள் செலவு செய்திருந்தால், செலவு செய்த தொகையைக் காட்டிலும் அதிகமான ஆதாயத்தை நிறுவனங்கள் அடைந்துவிடுகின்றன.



    தங்களது சொந்த ஊரில் கிடைக்கும் சம்பளத்தைக் காட்டிலும் அதிக சம்பளம் கிடைக்கும் வேலையைத் தேடி பலர் இடம் பெயர்கிறார்கள். வேலையின்மையே இந்த கிராம-நகர இடம்பெயர்வுக்கு முக்கியக் காரணம். மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்ற தகுதிவாய்ந்தவர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகின்றனர். உள்நாட்டில் கிடைக்கும் சம்பளத்தைவிட அதிக சம்பளம் வெளிநாடுகளில் கிடைப்பதே இதற்குக் காரணம். இந்த இரு இடம்பெயர்வுகளையும் எடுத்துக்கொண்டால், அதில், இடம்பெயர்வதற்கான போக்குவரத்துச் செலவு, புதிய இடத்தில் வசிப்பதனால் அதிகமாகும் செலவு, புதிய சமூகத்தில் வசிப்பதற்கு உளம்சார்ந்த செலவு ஆகியவை அடக்கமாகும். வருமானம் அதிகரிப்பதால் இடம்பெயர்வதற்கான செலவு ஈடுகட்டப்படுகிறது. ஆக, மனித மூலதனத்தை உருவாக்குவதில் இடம்பெயர்வும் முக்கியப் பங்கு வகிக்கிறது.



    தொழிலாளர், கல்வி, சுகாதாரம் போன்ற விவரங்களை அறிய மக்கள் செலவு செய்கின்றனர். உதாரணமாக, வெவ்வேறு வகையான வேலைகளுக்குக் கிடைக்கும் சம்பளத்தின் அளவைப் பற்றித் தெரிந்துகொள்ள மக்கள் விரும்புகின்றனர். கல்வி நிறுவனங்கள் வேலைக்குத் தேவையான திறன்களை வளர்க்கின்றனவா, அதற்கு எவ்வளவு செலவாகிறது என்பன போன்ற கேள்விகளுக்கு அவர்கள் விடை தேடுகின்றனர். மனித மூலதனத்தில் முதலீடு செய்வது தொடர்பாக முடிவெடுப்பதற்கு இந்தத் தகவல் மிக அவசியமாகும். மற்றொருபுறம் மனித மூலதனத்தைப் பயன்படுத்துவதற்கும் இது அவசியமாகிறது. எனவே, தொழிலாளர் சந்தை மற்றும் இதர சந்தைகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காகச் செய்யப்படும் செலவுகள் மனித மூலதனத்தை உருவாக்குதற்கான ஆதாரமாகிறது.



    மனித மூலதனம் என்ற கருத்தை உருவாக்குவதில் இயற்கை மூலதனம் அடிப்படையானதாகும். இந்த இரு மூலதனங்களுக்கும் சில ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் உண்டு.



மனித மூலதனமும் பொருளாதார வளர்ச்சியும்

    நாட்டின் வருமானத்துக்கு அதிகப் பங்களிப்பைச் செய்வது ஒரு தொழிற்சாலைப் பணியாளரா அல்லது சாப்ட்வேர் பொறியாளரா? நன்கு படித்தவரின் வேலை செய்யும் திறன், படிக்காதவரின் திறனைக் காட்டிலும் நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும். ஆக, இந்த இருவரில் சாப்ட்வேர் பொறியாளர்தான் நாட்டின் வருமானத்தில் அதிகப் பங்களிப்பைச் செய்கிறார். பொருளாதார வளர்ச்சி என்பது நாட்டின் வருமானம் அதிகரிப்பதாகும். பொதுவாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் படித்தவரின் பங்களிப்பு படிக்காதவரைக் காட்டிலும் அதிகமானதாக இருக்கிறது. அதேபோல், ஆரோக்கியமான ஒருவர் நோய்வாய்ப்பட்ட ஒருவரைவிட நீண்டநேரத்துக்கு தொடர்ச்சியாக வேலை செய்ய முடியும் என்பதால், ஆரோக்கியமும் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கல்வி மற்றும் ஆரோக்கியம் ஆகியவையும் வேலைக்கான பயிற்சி, வேலைச் சந்தை தொடர்பான தகவல்கள், இடம்பெயர்வு ஆகியவை போலவே ஒருவரின் வருமானத்தை அதிகரிக்க உதவுகிறது.



    மனிதர்கள் அல்லது மனித மூலதனத்தின் உற்பத்தித் திறன் அதிகமாவதால், புதிய கண்டுபிடிப்புகள் உருவாகவும், புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தவும் வழி ஏற்படுகிறது. சமூகத்தில் நடக்கும் மாற்றங்களைப் புரிந்துகொள்வதற்கும், கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவதற்கும் கல்வி பயன்படுகிறது. அதேபோல் படித்த பணியாளர்கள்கள் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்குத் தயாராக இருக்கின்றனர்.



    மனித மூலதனம் அதிகரிக்கும்போது பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது என்பதற்கு போதுமான தெளிவான ஆதாரங்கள் இல்லை. இது அளவிடுதலில் ஏற்பட்ட குறைபாட்டால் இவ்வாறு தோன்றக்கூடும். உதாரணமாக, கல்வி என்பது எத்தனை ஆண்டுகள் கல்வி கற்றார் என்பதை வைத்து அளவிடப்படுகிறது. ஆனால், ஆசிரியர்-மாணவர் விகிதம் மற்றும் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை ஆகியவை கல்வியின் தரத்தை நிர்ணயிக்காது. அதேபோல் சுகாதாரச் சேவைகள் பணத்தின் அடிப்படையில் அளவிடப்படுகின்றன. சராசரி ஆயுள் மற்றும் இறப்பு விகிதம் ஆகியவை நாட்டின் சுகாதார நிலையை அப்படியே காட்டுபவையாக இருக்க முடியாது. இந்த அடிப்படையில் கல்வி மற்றும் சுகாதாரத்துறை வளர்ச்சி மதிப்பிடப்படுவதால் வளர்ந்த நாடுகளும் வளர்ச்சியடைந்த நாடுகளும் இத் துறைகளில் கிட்டத்தட்ட ஒரே அளவில் வளர்ச்சியைப் பெற்றிருந்தாலும், தனிநபர் வருமானத்தில் அதிகமான வேறுபாடு இருக்கிறது. அதாவது, வளரும் நாடுகளில் மனித மூலதன வளர்ச்சி மிக வேகமாக இருக்கிறது; ஆனால் அதற்கேற்றாற்போல் தனநபர் வருமானம் இல்லை. மனித மூலதன வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே தொடர்பு இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. அதாவது அதிக வருமானம் இருந்தால் அதிக அளவு மனித மூலதனத்தை உருவாக்கலாம். அதேபோல், அதிக அளவு மனித மூலதனம் இருந்தால் வருமானத்தை அதிகரிக்கலாம்.

    பொருளாதார வளர்ச்சிக்கு மனித மூலதனம் அவசியம் என்பதை இந்தியா நீண்ட காலத்துக்கு முன்பே உணர்ந்துவிட்டது. ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தில், Ôஎந்த வளர்ச்சி உத்தியிலும் மனித வள மேம்பாட்டைக் (மனித மூலதனம்) கணக்கில் எடுத்துக் கொள்வது மிக அவசியம். அதிலும் குறிப்பாக அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டுக்கு இது மிகவும் பொருத்தமாகும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வி அறிவு கொண்ட, முறையாகப் பயிற்சிபெற்ற மக்கள், நாட்டை வளர்ச்சியை நோக்கி இட்டுச் செல்லும் சொத்தாக இருப்பர். விரும்பும் திசையை நோக்கிய சமூக மாற்றத்தையும் அவர்கள் உறுதி செய்வர்.

No comments: