Saturday, November 28, 2009

ஆனந்த விகடனின் அக்கறை!



ஆனந்த விகடன் 2.12.2009 தேதியிட்ட இதழில் "உங்கள் அருகில் உளவாளியிருக்கலாம்" என்னும் தலைப்பில் ப.திருமாவேலன், பா.பிரவீன்குமார் ஆகியோர் எழுதியிருக்கும் கட்டுரை சரியான நேரத்தில் வந்திருக்கிறது. நமது அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் உளவாளிகளாக இருக்கலாம் என்கிற எச்சரிக்கை இப்போது மிகவும் அவசியமானது.

பயங்கரவாதத் தாக்குதலாக இருந்தாலும், நாடுகளுக்கு இடையேயான போராக இருந்தாலும் உளவு முக்கியம். உளவறியாமல் நடத்தப்படும் போர்கள், வலியச் சென்று வலையில் சிக்குவதற்கு ஒப்பாகும். உளவறிதலும், பிறநாட்டு உளவாளிகளைக் களையெடுப்பதும்தான் ராஜதந்திரத்தின் முதன்மையானது. இந்த வலு இல்லாத நாடுகள் எந்தக் காலத்திலும் வல்லரசாக முடியாது.

வெல்ல முடியாது எனக் கருதப்பட்ட இராக் அதிபர் சதாம் உசேனை வீழ்த்துவதற்கு அவரது சகாவையே உளவாளியாகப் பயன்படுத்தியது அமெரிக்கா. இதுபோலவே அரசுகளையும், பயங்கரவாத இயக்கங்களையும், போராளிகளையும் அடக்குவதற்கு உளவாளிகளை அனுப்புவது காலம்காலமாக நடந்து வருகிறது.

இந்தியா என்னதான் பொருளாதாரத்தில் முன்னேறினாலும், மதம் மற்றும் பொருளாதார அடிப்படையிலான பிளவு வலுவாக இருக்கிறது. மக்களிடையே கசப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கசப்புணர்வை பயங்கரவாதம் பயன்படுத்திக் கொள்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டங்களால்கூட தடுக்க முடியாத ஊழல் மலிந்த நிர்வாகத்தை உளவாளிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆனந்த விகடன் சொல்வதுபோல எல்லோரைச் சுற்றியும் உளவாளிகள் இருக்கலாம். இந்த விஷயத்தில் ஆனந்த விகடனின் அக்கறை பாராட்டப்பட வேண்டியது.

No comments: