Friday, November 27, 2009

கான்பூர் மைதானத்துக்கு தடை வருமா?

கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கையை வீழ்த்தியிருக்கும் நேரத்தில் இந்தக் கேள்வியைக் கேட்பது அசவுகரியமாகத்தான் இருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு இப்படியொரு கோரிக்கை எழு்ந்ததை அதிதீவிரக் கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.



கடந்த ஆண்டில் தென்னாப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இந்தியா வந்தது. சென்னையில் நடந்த முதல் போட்டி டிராவில் முடிந்தது. ஆமதாபாத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 90 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வென்றது. அதுவரை எந்தப் பிரச்னையும் எழவில்லை

கான்பூரில் நடந்த மூன்றாவது போட்டி மூன்றாவது நாளே முடிவுக்கு வந்தது. அதுவும் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 121 ரன்களுக்குச் சுருண்டது. இந்தியாவுக்கு 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்தது.



இந்தியாவின் வெற்றிக்கு, எகிறும் பிட்ச்தான் காரணம் எனக் கதை கட்டப்பட்டது. இந்தக் கதைக்கு ஆசிரியர் மேட்ச் ரெஃப்ரியான இலங்கைக்காரர் மகானம. பிட்ச் தொடர்பாக பிசிசிஐயிடம் ஐசிசி என்னவெல்லாமோ விளக்கம் கேட்டது. ஆனால், இந்தியா எதில் சூப்பர் பவரோ இல்லையோ கிரிக்கெட்டில் சூப்பர் பவர்தான் என்பதை நிரூபித்தது. என்ன செய்து சரிக்கட்டினார்கள் என்று தெரியவில்லை இந்த ஆண்டும் கான்பூரில் டெஸ்ட் போட்டிக்கு அனுமதியளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு என்ன நடந்ததோ கிட்டத்தட்ட அதேதான் கான்பூர் மைதானத்தில் இன்றைக்கும் நடந்திருக்கிறது. கடந்த ஆண்டும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வென்றதால் டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவுக்குப் பாதுகாப்பான இடம் கிடைத்தது. அதேபோல் இந்த ஆண்டு முதலிடம் கிடைத்திருக்கிறது.


கடந்த ஆண்டு 3 நாள்களில் ஆட்டம் முடிந்ததைப் போல இந்த ஆண்டும் 4-வது நாளிலே மேட்ச் முடிந்துவிட்டது. இப்போதும் இலங்கை அணி குறைந்த ரன்களில் சுருண்டிருக்கிறது. மகானம என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.






No comments: